உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 வசனங்கள் · 14 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. ஏசாயா 34:2சுமார் கி.மு. 713

    யெகோவா எல்லா நாடுகளோடும் கோபமாயிருக்கிறார்; அவருடைய கோபம் அவர்களுடைய எல்லா இராணுவத்தின்மேலும் இருக்கிறது. அவர் அவர்களை முற்றிலும் அழிப்பார்; அவர் அவர்களைக் கொலைக்கு ஒப்புக்கொடுப்பார்.

  2. ஏசாயா 34:3சுமார் கி.மு. 713

    அவர்களில் கொலைசெய்யப்பட்டவர்கள் வெளியே எறியப்படுவார்கள், இறந்தவர்களின் உடல்கள் துர்நாற்றம் வீசும்; மலைகள் அவர்களுடைய இரத்தத்தினால் ஊறியிருக்கும்.

  3. ஏசாயா 34:4சுமார் கி.மு. 713

    வானத்து நட்சத்திரங்கள் அனைத்தும் இல்லாமற்போகும்; ஆகாயம் ஒரு சுருளைப்போல் சுருட்டப்படும். வானசேனை அனைத்தும் திராட்சைக் கொடியிலிருந்து வாடிய இலைகள் உதிர்வதுபோலவும், சூம்பிப்போன காய்கள் அத்திமரத்திலிருந்து விழுவதுபோலவும் விழும்.

  4. ஏசாயா 34:5சுமார் கி.மு. 713

    எனது வாள் தன் நிறைவை வானங்களில் குடித்திருக்கிறது; இதோ, நான் முழுவதும் அழித்துப்போட்ட ஏதோம் மக்களை நியாயந்தீர்ப்பதற்காக அது கீழே வருகிறது.

  5. ஏசாயா 34:6சுமார் கி.மு. 713

    யெகோவாவின் வாள் இரத்தத்தில் தோய்ந்திருக்கிறது, அது கொழுப்பினால் மூடப்பட்டிருக்கிறது. அது செம்மறியாட்டுக் குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தாலும், செம்மறியாட்டுக் கடாக்களின் சிறுநீரகக் கொழுப்பினாலும் மூடப்பட்டிருக்கிறது. ஏனெனில் யெகோவா போஸ்றா பட்டணத்தில் ஒரு பலியையும், ஏதோமில் ஒரு வதையையும் நியமித்திருக்கிறார்.

  6. ஏசாயா 34:7சுமார் கி.மு. 713

    காளைக் கன்றுகளும், பெரும் எருதுகளுமாக காட்டெருதுகள் அவைகளுடன் விழும். அவர்களுடைய நாடு இரத்தத்தில் தோய்ந்திருக்கும், புழுதியும் கொழுப்பில் ஊறியிருக்கும்.

  7. ஏசாயா 34:8சுமார் கி.மு. 713

    ஏனெனில் யெகோவா பழிவாங்கும் நாளொன்றை வைத்திருக்கிறார்; சீயோனின் வழக்கில் நீதி வழங்குவதற்காக ஒரு வருடத்தை வைத்திருக்கிறார்.

  8. ஏசாயா 34:9சுமார் கி.மு. 713

    ஏதோமின் நீரோடைகள் நிலக்கீலாக மாறும், நிலத்தின் புழுதி எரியும் கந்தகமாகவும், அதன் நிலம் எரியும் கீலாகவும் மாறும்.

  9. ஏசாயா 34:10சுமார் கி.மு. 713

    அது இரவிலும் பகலிலும் தணிக்க முடியாதபடி இருக்கும்; அதன் புகை என்றென்றும் புகைந்துகொண்டே இருக்கும். தலைமுறை தலைமுறையாக அது பாழடைந்து கிடக்கும், மீண்டும் அதன் ஊடாக யாரும் போகமாட்டார்கள்.

  10. ஏசாயா 34:11சுமார் கி.மு. 713

    பாலைவன ஆந்தையும் அலறும் ஆந்தையும் அதைத் தங்கள் உடைமை ஆக்கிக்கொள்ளும்; பெரிய ஆந்தையும், காகமும் தமது கூடுகளை அங்கு அமைக்கும். இறைவன் ஏதோமுக்கு மேலாக குழப்பத்தின் அளவுகோலையும், அழிவின் தூக்கு நூலையும் நீட்டிப் பிடிப்பார்.

  11. ஏசாயா 34:12சுமார் கி.மு. 713

    உயர்குடி மக்களுக்கு அரசு எனச் சொல்லிக்கொள்ள அங்கு ஒன்றுமே இராது; இளவரசர்கள் அனைவரும் இல்லாமல் போவார்கள்.

  12. ஏசாயா 34:13சுமார் கி.மு. 713

    அதனுடைய அரண்செய்யப்பட்ட பட்டணங்களின்மேல் முட்செடிகள் படரும்; காஞ்சொறிகளும் கள்ளிச்செடிகளும் அதன் கோட்டைகளில் படரும். அது நரிகளுக்குத் தங்குமிடமும் ஆந்தைகளுக்கு குடியிருப்புமாகும்.

  13. ஏசாயா 34:14சுமார் கி.மு. 713

    பாலைவன பிராணிகளும், கழுதைப்புலிகளுடன் ஒன்றுசேரும்; காட்டாடுகளும் ஒன்றையொன்று பார்த்துக் கத்தும். இரவுப் பிராணிகளும் அங்கு இளைப்பாறி தங்களுக்குத் தங்கும் இடங்களைத் தேடும்.

  14. ஏசாயா 34:15சுமார் கி.மு. 713

    ஆந்தைகள் அங்கே கூடுகட்டி, முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து, அவைகளைத் தமது சிறகுகளின் நிழலில் பாதுகாக்கும்; வல்லூறுகளும் தத்தம் துணையுடன் அங்கே வந்துசேரும்.

  15. ஏசாயா 34:16சுமார் கி.மு. 713

    யெகோவாவின் புத்தகச்சுருளை தேடி வாசியுங்கள்: இவற்றில் ஒன்றாவது தவறிப்போகாது, ஒன்றாவது தனக்குத் துணையில்லாமல் இராது; யெகோவாவின் வாயே இந்தக் கட்டளையைக் கொடுத்தது, அவரின் ஆவியானவர் இவற்றை ஒன்றுசேர்ப்பார்.

  16. ஏசாயா 34:17சுமார் கி.மு. 713

    அவற்றிற்குரிய பாகங்களை அவரே பங்கிடுகிறார்; அவருடைய கரமே அவற்றை அளவுகளின்படி பகிர்ந்து கொடுக்கின்றன. அவை என்றென்றைக்கும் அதைத் தங்கள் சொந்தமாக்கி, தலைமுறை தலைமுறையாக அங்கே குடியிருக்கும்.

  17. ஏசாயா 35:1சுமார் கி.மு. 713

    பாலைவனமும் வறண்ட நிலமும் மகிழும். வனாந்திரம் மகிழ்ந்து பூக்கும். அது லீலி பூப்பதுபோல் பூக்கும்.

  18. ஏசாயா 35:2சுமார் கி.மு. 713

    அது வளமாய் வளர்ந்து மகிழ்ச்சியுடன் ஆனந்த சத்தமிடும். லெபனோனின் மகிமையும், கர்மேல், சாரோனின் சிறப்பும் அதற்குக் கொடுக்கப்படும். யெகோவாவின் மகிமையையும், நமது இறைவனின் மகத்துவத்தையும் காண்பார்கள்.

  19. ஏசாயா 35:3சுமார் கி.மு. 713

    தளர்ந்த கைகளைப் பலப்படுத்துங்கள், தள்ளாடும் முழங்கால்களைத் திடப்படுத்துங்கள்.

  20. ஏசாயா 35:4சுமார் கி.மு. 713

    இருதயத்தில் பதற்றமுள்ளோருக்கு, “திடன்கொள்ளுங்கள், பயப்படாதிருங்கள்; இதோ, உங்கள் இறைவன் உங்கள் பகைவரை பழிதீர்க்கவும், பதிலளிக்கவும் வருவார், அவர் வந்து உங்களை விடுவிப்பார்” என்று சொல்லுங்கள்.

  21. ஏசாயா 35:5சுமார் கி.மு. 713

    அப்பொழுது குருடரின் கண்கள் பார்வை பெறும், செவிடரின் காதுகளும் திறக்கப்படும்.

  22. ஏசாயா 35:6சுமார் கி.மு. 713

    முடவன் மானைப்போல் துள்ளுவான், ஊமையின் நாவும் ஆனந்த சத்தமிடும்; வனாந்திரத்திலிருந்து தண்ணீரும், பாலைவனத்திலிருந்து நீரோடைகளும் பாயும்.

  23. ஏசாயா 35:7சுமார் கி.மு. 713

    சுடுமணல் நீர்த் தடாகமாகும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாய் பொங்கிவரும். நரிகள் தங்கும் இடங்களில் புல்லும், கோரையும், நாணலும் வளர்ந்து நிற்கும்.

  24. ஏசாயா 35:8சுமார் கி.மு. 713

    அங்கே பிரதான வீதி ஒன்றிருக்கும், அது பரிசுத்த வழி எனப்படும். அசுத்தர் அதன் வழியே கடந்து செல்லமாட்டார்கள். இறைவனுடைய வழியில் நடப்பவர்களுக்கென்றே அது இருக்கும். கொடிய மூடர் அதில் திரியமாட்டார்கள்.

  25. ஏசாயா 35:9சுமார் கி.மு. 713

    அங்கு சிங்கம் இருப்பதில்லை; எந்தவொரு கொடிய மிருகமாவது அங்கே செல்வதில்லை, அங்கே காணப்படுவதுமில்லை. மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள்.