உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 930–586 BC

The Divided Kingdom

The kingdom splits into Israel and Judah; prophets warn of judgment as both nations slowly drift into idolatry and exile.

1,722 வசனங்கள் · 3 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. 2 நாளாகமம் 29:29சுமார் கி.மு. 726

    பலிசெலுத்தி முடிவடைந்ததும் அரசனும் அவனுடன் வந்திருந்த எல்லோரும் தரையில் முழங்காற்படியிட்டு வழிபட்டார்கள்.

  2. 2 நாளாகமம் 29:30சுமார் கி.மு. 726

    அரசன் எசேக்கியாவும், அவனுடைய அதிகாரிகளும், தாவீதும், தரிசனக்காரனான ஆசாப்பும் பாடிய வார்த்தைகளால் யெகோவாவைத் துதிக்கும்படி லேவியர்களுக்குக் கட்டளையிட்டார்கள். எனவே அவர்கள் மகிழ்ச்சியுடன் துதித்து பாடி தலைகுனிந்து வழிபட்டார்கள்.

  3. 2 நாளாகமம் 29:31சுமார் கி.மு. 726

    அப்பொழுது எசேக்கியா, “நீங்கள் இப்பொழுது உங்களை யெகோவாவுக்கென்று அர்ப்பணித்திருக்கிறீர்கள். வாருங்கள், பலிகளையும் நன்றியறிதல் காணிக்கைகளையும் யெகோவாவின் ஆலயத்திற்குக் கொண்டுவாருங்கள்” என்று சொன்னான். எனவே கூடியிருந்தவர்கள் பலிகளையும், நன்றியறிதல் காணிக்கைகளையும் கொண்டுவந்தார்கள். அத்துடன் யாருடைய இருதயம் ஏவப்பட்டதோ அவர்கள் சர்வாங்க தகன காணிக்கைகளையும் கொண்டுவந்தார்கள்.

  4. 2 நாளாகமம் 29:32சுமார் கி.மு. 726

    சபையோர் கொண்டுவந்த தகன காணிக்கைகளின் எண்ணிக்கை: எழுபது காளைகள், நூறு செம்மறியாட்டுக் கடாக்கள், இருநூறு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகள் ஆகியனவாகும். இவையெல்லாம் யெகோவாவுக்காகத் தகன காணிக்கையாகக் கொண்டுவரப்பட்டன.

  5. 2 நாளாகமம் 29:33சுமார் கி.மு. 726

    பலிகளாக அர்ப்பணிக்கப்பட்ட மிருகங்களின் தொகை அறுநூறு காளைகளும், மூவாயிரம் செம்மறியாடுகளும், வெள்ளாடுகளுமாகும்.

  6. 2 நாளாகமம் 29:34சுமார் கி.மு. 726

    ஆனால் தகன காணிக்கைக்கான மிருகங்களைத் தோல் உரிப்பதற்கு ஆசாரியர்கள் மிகக் குறைவாகவேயிருந்தனர். மற்ற ஆசாரியர்கள் தங்களைப் பரிசுத்தப்படுத்தும் வரைக்கும் அவர்கள் உறவினர்களான லேவியர்கள் அந்த வேலை முடியும்வரைக்கும் உதவிசெய்தனர். ஏனெனில் லேவியர்கள் தங்களைப் பரிசுத்தப்படுத்துவதில் ஆசாரியர்களைவிட கவனமுள்ளவர்களாக இருந்தனர்.

  7. 2 நாளாகமம் 29:35சுமார் கி.மு. 726

    இவ்வாறு தகன காணிக்கைகள் ஏராளமாயிருந்தன; அத்துடன் சமாதான காணிக்கைகளின் கொழுப்பும், சமாதான காணிக்கைகளோடு செலுத்தப்பட்ட பான காணிக்கைகளும் ஏராளமாய் இருந்தன. எனவே யெகோவாவினுடைய ஆலய ஆராதனை திரும்பவும் நிலைநிறுத்தப்பட்டது.

  8. 2 நாளாகமம் 29:36சுமார் கி.மு. 726

    இறைவன் தனது மக்களுக்காய் செய்து முடித்ததைக்குறித்து எசேக்கியாவும் எல்லா மக்களும் அகமகிழ்ந்தனர். ஏனெனில் இது மிகவும் விரைவாய் செய்யப்பட்டது.

  9. 2 நாளாகமம் 30:1சுமார் கி.மு. 726

    எசேக்கியா எல்லா இஸ்ரயேலுக்கும், யூதாவுக்கும் ஆட்களை அனுப்பினான், அத்துடன் எப்பிராயீமுக்கும், மனாசேக்கும் கடிதங்களையும் எழுதினான். அதில் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு பஸ்காவைக் கொண்டாடுவதற்கு எருசலேமிலுள்ள யெகோவாவின் ஆலயத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தான்.

  10. 2 நாளாகமம் 30:2சுமார் கி.மு. 726

    அரசனும், அவனுடைய அதிகாரிகளும், எருசலேமிலுள்ள சபையோர் எல்லோரும் இரண்டாம் மாதத்தில் பஸ்காவைக் கொண்டாட தீர்மானித்திருந்தார்கள்.

  11. 2 நாளாகமம் 30:3சுமார் கி.மு. 726

    ஏனெனில் தேவையான அளவு ஆசாரியர்கள் தங்களைச் சுத்திகரிக்காமலும், எருசலேமில் மக்கள் கூடிவராமலும் இருந்ததினால், அவர்களால் வழக்கமாகப் பஸ்காவைக் கொண்டாடும் முதலாம் மாதத்தில் அதைக் கொண்டாட முடியவில்லை.

  12. 2 நாளாகமம் 30:4சுமார் கி.மு. 726

    இத்திட்டம் அரசனுக்கும், கூடியிருந்த எல்லோருக்கும் சரியானதாகக் காணப்பட்டது.

  13. 2 நாளாகமம் 30:5சுமார் கி.மு. 726

    அவர்கள் இஸ்ரயேல் முழுவதிலும் பெயெர்செபா தொடங்கி தாண்வரைக்கும் உள்ள மக்களை, இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு பஸ்காவைக் கொண்டாட எருசலேமுக்கு வரும்படி அழைப்பு விடுக்கும்படித் தீர்மானித்தார்கள். நீண்டகாலமாக எழுதப்பட்டிருந்தபடி பெருந்தொகையான மக்களால் பஸ்கா கொண்டாடப்படவில்லை.

  14. 2 நாளாகமம் 30:6சுமார் கி.மு. 726

    அரசனும், அவனுடைய அதிகாரிகளும் அனுப்பிய கடிதங்களை அரசனின் கட்டளைப்படி தூதுவர்கள் இஸ்ரயேல், யூதா எங்கும் கொண்டுபோனார்கள். அதில், “இஸ்ரயேல் மக்களே, ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரயேல் ஆகியோரின் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்புங்கள். அப்பொழுது அவரும் அசீரிய அரசனின் கைக்கு தப்பி, மீந்திருக்கிற உங்களிடம் திரும்புவார்.

  15. 2 நாளாகமம் 30:7சுமார் கி.மு. 726

    உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவுக்கு உண்மையற்றவர்களாயிருந்த உங்கள் முற்பிதாக்களைப் போலவும், சகோதரரைப் போலவும் நீங்களும் இருக்கவேண்டாம். அதனால் நீங்கள் காண்பதுபோல், அவர் அவர்களை பயங்கரமான காட்சிப் பொருளாக்கியிருக்கிறார்.

  16. 2 நாளாகமம் 30:8சுமார் கி.மு. 726

    நீங்கள் உங்கள் முற்பிதாக்கள் இருந்ததுபோல் அடங்காதவர்களாக இருக்கவேண்டாம்; யெகோவாவுக்குக் கீழ்ப்படியுங்கள். என்றென்றைக்குமென அவர் பரிசுத்தப்படுத்திய பரிசுத்த இடத்திற்கு வாருங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பணிசெய்யுங்கள். அப்பொழுது அவரது கடுங்கோபம் உங்களைவிட்டு நீங்கும்.

  17. 2 நாளாகமம் 30:9சுமார் கி.மு. 726

    நீங்கள் யெகோவாவினிடத்திற்குத் திரும்பினால், அப்பொழுது உங்கள் சகோதரர்களும், உங்கள் பிள்ளைகளும் அவர்களைச் சிறைபிடித்தவர்களிடத்தில் தயவு பெற்று திரும்பவும் இந்த நாட்டிற்கு வருவார்கள். ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா கிருபையும், கருணையும் உள்ளவர். நீங்கள் அவரிடம் திரும்பும்போது உங்களிடமிருந்து அவர் தன் முகத்தைத் திருப்பமாட்டார்” என எழுதப்பட்டிருந்தது.

  18. 2 நாளாகமம் 30:10சுமார் கி.மு. 726

    அந்தத் தூதுவர்கள் எப்பிராயீம், மனாசே நாடுகளிலும், செபுலோன்வரை பட்டணம் பட்டணமாக போனார்கள். ஆனால் மக்கள் அவர்களை இகழ்ந்து ஏளனம் செய்தனர்.

  19. 2 நாளாகமம் 30:11சுமார் கி.மு. 726

    இருந்தாலும் ஆசேர், மனாசே, செபுலோன் கோத்திரங்களைச் சேர்ந்த சில மனிதர் தங்களைத் தாழ்த்தி எருசலேமுக்குப் போனார்கள்.

  20. 2 நாளாகமம் 30:12சுமார் கி.மு. 726

    அத்துடன் யூதாவில் யெகோவாவின் வார்த்தையைப் பின்பற்றி, அரசனும் அவன் அதிகாரிகளும் உத்தரவிட்டதை நடைமுறைப்படுத்துவதற்கு ஒருமனதைக் கொடுப்பதற்காக இறைவனின் கரம் யூதாவின் மக்கள்மேல் இருந்தது.

  21. 2 நாளாகமம் 30:13சுமார் கி.மு. 726

    இரண்டாம் மாதத்தில் புளிப்பில்லாத அப்பப்பண்டிகை கொண்டாடுவதற்காக மிக ஏராளமான மக்கள் எருசலேமில் கூடியிருந்தார்கள்.

  22. 2 நாளாகமம் 30:14சுமார் கி.மு. 726

    அவர்கள் எருசலேமிலுள்ள பலிபீடங்களையெல்லாம் அகற்றி தூபபீடங்களை நீக்கி எல்லாவற்றையும் கீதரோன் பள்ளத்தாக்கில் வீசினார்கள்.

  23. 2 நாளாகமம் 30:15சுமார் கி.மு. 726

    அவர்கள் இரண்டாம் மாதம் பதினான்காம் நாளில் பஸ்கா செம்மறியாட்டுக் குட்டியை வெட்டினார்கள். ஆசாரியரும் லேவியர்களும் வெட்கப்பட்டு, தங்களைப் பரிசுத்தப்படுத்தி, யெகோவாவின் ஆலயத்திற்கு தகன காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்.

  24. 2 நாளாகமம் 30:16சுமார் கி.மு. 726

    அதன்பின் அவர்கள் இறைவனின் மனிதனான மோசேயின் சட்டத்தில் சொல்லப்பட்டபடி தங்களுக்குரிய முறையான பொறுப்பை எடுத்துக்கொண்டார்கள். லேவியர்களால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட இரத்தத்தை ஆசாரியர்கள் தெளித்தார்கள்.

  25. 2 நாளாகமம் 30:17சுமார் கி.மு. 726

    கூடியிருந்தவர்களில் அநேகர் தங்களை பரிசுத்தப்படுத்திக் கொள்ளவில்லை. சம்பிரதாயப்படி அவர்கள் சுத்தமற்றவர்களாய் இருந்ததினாலும், யெகோவாவுக்குத் தங்களுடைய செம்மறியாட்டுக் குட்டிகளை அர்ப்பணிக்க முடியாமல் இருந்ததினாலும் லேவியர்கள் அவர்களுக்காக பஸ்கா செம்மறியாட்டுக் குட்டிகளைக் கொல்ல வேண்டியதாயிருந்தது.