எண்ணாகமம் 31:25-54
25
யெகோவா மோசேயிடம் சொன்னதாவது:
26
“நீயும் ஆசாரியன் எலெயாசாரும், மக்கள் சமுதாயத்திலுள்ள குடும்பத்தலைவர்களும், கைப்பற்றப்பட்ட மக்களையும், மிருகங்களையும் கணக்கிடவேண்டும்.
27
யுத்தத்தில் பங்கெடுத்த இராணுவவீரர்களுக்கும், மக்கள் சமுதாயத்தில் மீதியாய் இருப்பவர்களுக்கும் இடையில் கைப்பற்றப்பட்ட பொருட்களைப் பங்கிடவேண்டும்.
28
அத்துடன் யுத்தத்தில் சண்டையிட்ட போர்வீரர்களிடமிருந்து எல்லாவற்றிலும் ஐந்நூறில் ஒரு பங்கை யெகோவாவுக்கான அன்பளிப்பாக வேறுபிரித்து வைக்கவேண்டும். அவை மனிதர்களானாலும், மாடுகளானாலும், கழுதைகளானாலும், செம்மறியாடுகளானாலும், வெள்ளாடுகளானாலும் அவை ஒதுக்கப்படவேண்டும்.
29
இராணுவவீரர் பெற்றுக்கொண்ட அரைப்பங்கிலிருந்து இந்த அன்பளிப்பை எடுத்து, யெகோவாவின் பங்காக ஆசாரியன் எலெயாசாருக்குக் கொடுக்கவேண்டும்.
30
அதேபோல் இஸ்ரயேலருக்குக் கொடுக்கப்பட்ட மற்ற அரைப்பங்கிலிருந்து எல்லாவற்றிலும் ஐம்பதில் ஒரு பங்கைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அவை மனிதர்களானாலும், மாடுகளானாலும், கழுதைகளானாலும், செம்மறியாடுகளானாலும், வெள்ளாடுகளானாலும் அல்லது வேறுமிருகங்களானாலும் அவற்றிலிருந்து தெரிவு செய்யவேண்டும். அவற்றை யெகோவாவின் இறைசமுகக் கூடாரத்திற்குப் பொறுப்பாயிருக்கும் லேவியர்களுக்குக் கொடுக்கவேண்டும்” என்றார்.
31
மோசேயும், ஆசாரியன் எலெயாசாரும் யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
32
இராணுவவீரர் கைப்பற்றிய கொள்ளைப்பொருட்களில் எஞ்சியவை: 6,75,000 செம்மறியாடுகள்,
33
72,000 மாடுகள்,
34
61,000 கழுதைகள் ஆகியவற்றுடன்,
35
ஆணுடன் உறவுகொள்ளாத கன்னிப்பெண்கள் 32,000 பேருமாகும்.
36
யுத்தத்தில் சண்டையிட்டவர்களுக்குரிய அரைப்பங்காக இருந்தவைகள்: 3,37,500 செம்மறியாடுகள்;
37
இவற்றில் 675 செம்மறியாடுகள் யெகோவாவின் பங்காகக் கொடுக்கப்பட்டன.
38
36,000 மாடுகள்; இவற்றில் 72 யெகோவாவின் பங்காகக் கொடுக்கப்பட்டன.
39
30,500 கழுதைகள்; இவற்றில் 61 யெகோவாவின் பங்காகக் கொடுக்கப்பட்டன.
40
16,000 மக்கள்; இவர்களில் 32 பேர் யெகோவாவின் பங்காகக் கொடுக்கப்பட்டனர்.
41
யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, யெகோவாவின் பங்காக இதை ஆசாரியன் எலெயாசாரிடம் மோசே கொடுத்தான்.
42
யுத்தம் செய்த மனிதர்களின் அரைப்பங்குபோக இஸ்ரயேலருக்கு மோசே பிரித்துக்கொடுத்த
43
மற்ற அரைப்பங்கில் உள்ளவைகள்: 3,37,500 செம்மறியாடுகள்,
44
36,000 மாடுகள்,
45
30,500 கழுதைகள்,
46
16,000 மக்களுமே.
47
மோசே, யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேலரின் அரைப்பங்கில் ஒவ்வொரு ஐம்பது மிருகங்களிலிருந்து ஒன்றையும், ஆட்களிலிருந்து ஒருவரையும் இறைசமுகக் கூடாரத்தின் பராமரிப்புக்குப் பொறுப்பாயிருந்த லேவியருக்குக் கொடுத்தான்.
48
அப்பொழுது ஆயிரம்பேருக்குத் தளபதிகளும், நூறுபேருக்குத் தளபதிகளுமாயிருந்த இராணுவ அதிகாரிகள் மோசேயினிடத்திற்கு வந்தார்கள்.
49
அவர்கள் மோசேயிடம், “எங்கள் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்ட போர்வீரர்களை உமது பணியாட்களான நாங்கள் கணக்கிட்டோம். ஒருவருமே தவறிப்போகவில்லை.
50
ஆகையால், எங்களில் ஒவ்வொருவனும் கைப்பற்றிய தங்கநகைகளான காப்புகள், கைவளையல்கள், முத்திரை மோதிரங்கள், தோடுகள், அட்டியல்கள் ஆகியவற்றை யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்திருக்கிறோம். எங்களுக்காக யெகோவாவுக்கு முன்பாகப் பாவநிவிர்த்தி செய்யும்படி இவற்றைக் கொண்டுவந்திருக்கிறோம்” என்றார்கள்.
51
மோசேயும் ஆசாரியன் எலெயாசாரும் அவர்கள் கொண்டுவந்த தங்கத்தையும் நகைகளாகச் செய்யப்பட்டிருந்தவைகளையும் ஏற்றுக்கொண்டார்கள்.
52
ஆயிரம்பேருக்குத் தளபதிகளிடமிருந்தும், நூறுபேருக்குத் தளபதிகளிடமிருந்தும் மோசேயும் எலெயாசாரும் பெற்றுக்கொண்ட தங்கத்தை அவர்கள் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுத்தார்கள். அதன் நிறை 16,750 சேக்கலாக இருந்தது.
53
ஒவ்வொரு இராணுவவீரனும் தனக்கென்றும் கொள்ளைப்பொருட்களை எடுத்திருந்தான்.
54
மோசேயும், ஆசாரியன் எலெயாசாரும் ஆயிரம்பேரின் தளபதிகளிடமும், நூறுபேரின் தளபதிகளிடமும் இருந்து தங்கத்தை ஏற்றுக்கொண்டார்கள். அதை யெகோவாவுக்கு முன்பாக இஸ்ரயேலருக்கான ஒரு ஞாபகார்த்தமாக சபைக் கூடாரத்திற்குள் கொண்டுவந்தார்கள்.
Settings