Skip to content
எண்ணாகமம் 31:1-24

எண்ணாகமம் 31:1-24

1
யெகோவா மோசேயிடம்,
2
“இஸ்ரயேலருக்காக மீதியானியரைப் பழிவாங்கு; அதன்பின் நீ உன் மக்களுடன் சேர்க்கப்படுவாய்” என்றார்.
3
எனவே மோசே மக்களிடம், “மீதியானியருக்கு விரோதமாக யுத்தம் செய்யவும், அவர்களைப் பழிவாங்கும்படியான யெகோவாவின் நோக்கத்தை நிறைவேற்றவும் உங்கள் மனிதரில் சிலருக்கு ஆயுதங்களைத் தரிப்பியுங்கள்.
4
இஸ்ரயேல் கோத்திரம் ஒவ்வொன்றில் இருந்தும் ஆயிரம்பேரைத் தெரிந்தெடுத்து யுத்தத்திற்கு அனுப்புங்கள்” என்றான்.
5
எனவே ஒவ்வொரு கோத்திரத்தில் இருந்தும், ஆயிரம்பேராக பன்னிரெண்டாயிரம் ஆயுதம் தரித்த மனிதர் இஸ்ரயேல் வம்சங்களிலிருந்து அனுப்பப்பட்டார்கள்.
6
மோசே ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஆயிரம்பேரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆசாரியன் எலெயாசாரின் மகன் பினெகாசுடன் யுத்தத்திற்கு அனுப்பினான். பினெகாஸ் தன்னுடன் பரிசுத்த இடத்திலிருந்த பொருட்களையும், தொனிக்கும் பூரிகைகளையும் செய்வதற்கு எக்காளங்களையும் எடுத்துக்கொண்டு போனான்.
7
யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் மீதியானியருக்கு எதிராக யுத்தம்செய்து எல்லா மனிதரையும் கொன்றார்கள்.
8
அவர்கள் மீதியானியரின் ஐந்து அரசர்களாகிய ஏவி, ரெக்கெம், சூர், ஊர், ரேபா ஆகியோரையும் கொன்றுபோட்டார்கள். அவர்கள் பேயோரின் மகன் பிலேயாமையும் வாளினால் வெட்டிக்கொன்றார்கள்.
9
இஸ்ரயேலர் மீதியானிய பெண்களையும், குழந்தைகளையும் சிறைப்பிடித்து, அவர்களுடைய ஆட்டு மந்தைகளையும், மாட்டு மந்தைகளையும், அவர்கள் பொருட்களையும் கொள்ளையாக எடுத்துக்கொண்டார்கள்.
10
மீதியானியர் குடியிருந்த எல்லா பட்டணங்களையும், முகாம்களையும் சேர்த்து அவர்கள் எரித்தார்கள்.
11
பின்பு தாங்கள் சூறையாடிய பொருட்களையும், மக்கள், மிருகங்கள் உட்பட யுத்தத்தில் கைப்பற்றிய பொருட்களையும் எடுத்துக்கொண்டார்கள்.
12
அவர்கள் தாங்கள் சிறைபிடித்தவர்களையும், யுத்தத்தில் கைப்பற்றியவைகளையும், கொள்ளைப்பொருட்களையும் மோசே, ஆசாரியன் எலெயாசார் மற்றும் இஸ்ரயேலிய சமுதாயத்தினர் அனைவரிடமும் கொண்டுவந்தார்கள். அப்பொழுது இவர்கள் எரிகோவுக்கு எதிரே யோர்தானுக்கு அருகில் மோவாப் சமவெளியில் முகாமிட்டிருந்தார்கள்.
13
மோசேயும், ஆசாரியன் எலெயாசாரும், இஸ்ரயேல் சமுதாயத் தலைவர்கள் எல்லோரும் அவர்களைச் சந்திக்க முகாமுக்கு வெளியே வந்தார்கள்.
14
யுத்தத்திலிருந்து திரும்பி வந்த இராணுவ அதிகாரிகளான ஆயிரம்பேருக்கும், நூறுபேருக்குமான தளபதிகளாய் இருந்தவர்கள்மேல் மோசே கோபம்கொண்டான்.
15
அவன் அவர்களிடம், “பெண்கள் எல்லோரையும் வாழ அனுமதித்தீர்களோ?
16
பிலேயாமின் ஆலோசனையைக் கேட்டு பேயோரில் நடந்த காரியத்தில் இஸ்ரயேலரை யெகோவாவிடமிருந்து வழிவிலகச்செய்ய உடந்தையாக இருந்தவர்கள் அவர்கள் அல்லவா? அதனால்தானே யெகோவாவின் மக்களைக் கொள்ளைநோய் வாதித்தது.
17
எல்லா ஆண்பிள்ளைகளையும் இப்பொழுதே கொல்லுங்கள். ஆணுடன் உடலுறவுகொண்ட ஒவ்வொரு பெண்ணையும் கொல்லுங்கள்.
18
ஆனால் ஆண்களுடன் உடலுறவுகொள்ளாத கன்னிப்பெண்கள் அனைவரையும் உங்களுக்காக விட்டுவையுங்கள்.
19
“யாரையாகிலும் கொன்றவனோ அல்லது கொல்லப்பட்ட எவனையாவது தொட்டவனோ ஏழுநாட்களுக்கு முகாமுக்கு வெளியே இருக்கவேண்டும். மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் நீங்கள் உங்களையும், உங்கள் கைதிகளையும் சுத்திகரிக்கவேண்டும்.
20
உங்களது எல்லா உடைகளையும், தோலினால் அல்லது வெள்ளாட்டு மயிரினால் அல்லது மரத்தினால் செய்யப்பட்ட ஒவ்வொன்றையும் சுத்திகரிக்கவேண்டும்” என்றான்.
21
ஆசாரியன் எலெயாசார் யுத்தத்திற்குப் போன இராணுவவீரர்களிடம் சொன்னதாவது, “யெகோவா மோசேக்குக் கொடுத்த சட்டத்தின்படி செய்யப்பட வேண்டியதாவது:
22
தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம் ஆகியவற்றையும்,
23
நெருப்பினால் எரிந்துபோகாத வேறு எதையும் நெருப்பிலே போடவேண்டும். அப்பொழுது அது சுத்தமாகும். ஆனால் சுத்திகரிக்கும் தண்ணீரினாலும் அது சுத்திகரிக்கப்பட வேண்டும். அத்துடன் நெருப்பினால் எரியக்கூடிய எதையும் அந்த நீரினால் சுத்திகரிக்கவேண்டும்.
24
ஏழாம்நாளில் நீங்கள் உங்கள் உடைகளைத் துவைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்களும் சுத்தமாவீர்கள். பின்பு நீங்கள் முகாமுக்குள் வரலாம்” என்றான்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options