உள்ளடக்கத்திற்குச் செல்க

Psalms பற்றிய பைபிள் வசனங்கள்

896 வசனங்கள் · 16 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. அவர்கள் தங்கள் இருதயங்களில் பொல்லாத திட்டங்களைத் தீட்டி, நாள்தோறும் போரை மூட்டிவிடுகிறார்கள்.

  2. அவர்கள் தங்கள் நாவுகளைப் பாம்பின் நாவுகளைப் போலக் கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது.

  3. யெகோவாவே, கொடியவர்களுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி, வன்முறையாளர்களுக்கு என்னை விலக்கி இரட்சியும்; அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள்.

  4. பெருமையுள்ள மனிதர்கள் எனக்குக் கண்ணியை மறைத்து வைத்திருக்கிறார்கள்; அவர்கள் தங்கள் வலைகளின் கயிறுகளை விரித்து, என் வழியெல்லாம் எனக்காகக் பொறிகளை வைத்திருக்கிறார்கள்.

  5. யெகோவாவே, “நீரே என் இறைவன்” என்று நான் உம்மிடம் சொல்கிறேன்; யெகோவாவே, இரக்கத்திற்கான என் கதறுதலைக் கேளும்.

  6. ஆண்டவராகிய யெகோவாவே, என் இரட்சிப்பின் பெலனே, நீர் யுத்தநாளில் என் தலையை மறைத்துகொள்ளும்.

  7. யெகோவாவே, கொடியவர்களின் ஆசைகள் நிறைவேற விடாதேயும்; அவர்களுடைய திட்டங்களை வெற்றியடைய விடாதேயும்.

  8. என்னைச் சூழ்ந்துள்ளவர்கள் பெருமையுடன் தங்கள் தலையை உயர்த்துகிறார்கள்; அவர்கள் உதடுகளின் தீவினைகள் அவர்களை மூடும்.

  9. எரியும் நெருப்புத் தழல்கள் அவர்கள்மேல் விழட்டும்; அவர்கள் ஒருபோதும் எழுந்திருக்க முடியாதபடி நெருப்பிலும், சேற்றுக் குழிகளிலும் தள்ளப்படட்டும்.

  10. அவதூறு பேசுகிறவர்கள் நாட்டில் நிலைபெறாதிருக்கட்டும்; வன்முறையாளர்களை பேராபத்து வேட்டையாடி வீழ்த்தட்டும்.

  11. யெகோவா ஏழைகளுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கிறவர் என்பதையும், எளியவர்களின் சார்பாக வழக்காடுபவர் என்பதையும் நான் அறிவேன்.

  12. நிச்சயமாகவே, நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்; நேர்மையுள்ளவர்கள் உமது சமுகத்தில் வாழ்வடைவார்கள்.

  13. தாவீதின் சங்கீதம். யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடம் விரைந்து வாரும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, என் குரலைக் கேளும்.

  14. என் மன்றாட்டு உமக்கு முன்பாகத் தூபத்தைப்போல் ஏற்றுக்கொள்ளப்படட்டும்; என் கையுயர்த்துதல் மாலைநேரப் பலியாகவும் இருக்கட்டும்.

  15. யெகோவாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.

  16. தீமைகளைச் செய்யும் மனிதரோடு சேர்ந்து கொடுமையான செயல்களில் பங்குகொள்ளும்படி என் இருதயத்தைத் தீமையின் பக்கம் இழுப்புண்டுபோக விடாதேயும்; அவர்களுடைய ருசியான பண்டங்களை நான் சாப்பிடவும் விடாதேயும்.

  17. நீதிமான் என்னை அடிக்கட்டும், அந்த அடி தயவானது; நீதிமான் என்னைக் கண்டிக்கட்டும், அது என் தலைக்கு எண்ணெயைப்போல் இருக்கும். என் தலை அதை புறக்கணிக்காது; என் மன்றாட்டு எப்பொழுதும் தீயோரின் செய்கைகளுக்கு விரோதமாகவே இருக்கிறது.

  18. அவர்களுடைய ஆளுநர்கள் செங்குத்தான பாறைகளிலிருந்து கீழே தள்ளிவிடப்படுவார்கள்; அப்பொழுது, என் வார்த்தைகள் உண்மையாக இருந்ததை கொடியவர்கள் புரிந்துகொள்வார்கள்.

  19. “ஒரு நபர் நிலத்தை உழுது கிளறுவதுபோல், எங்கள் எலும்புகள் பாதாளத்தின் வாசலில் சிதறடிக்கப்பட்டன” என்று அவர்கள் சொல்வார்கள்.

  20. ஆனால், ஆண்டவராகிய யெகோவாவே, என் கண்கள் உம்மையே நோக்குகின்றன; நான் உம்மிடத்தில் தஞ்சம் அடைகிறேன், என்னை மரணத்திற்கு ஒப்புக்கொடாதேயும்.

  21. தீயவர் எனக்கு வைத்த கண்ணிகளிலிருந்தும், அவர்களால் வைக்கப்பட்ட சுருக்குக் கயிறுகளிலிருந்தும் என்னைக் காத்துக்கொள்ளும்.

  22. நான் அவற்றைப் பாதுகாப்பாய் கடக்க, கொடியவர்கள் தங்கள் வலைகளிலேயே அகப்படட்டும்.

  23. தாவீது குகையிலிருந்தபோது செய்த ஜெபமாகிய மஸ்கீல் என்னும் சங்கீதம். நான் யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; நான் யெகோவாவிடம் இரக்கம் கேட்டு என் குரலை உயர்த்துகிறேன்.

  24. அவருக்கு முன்பாக என் குறைகளைக் கொட்டுகிறேன்; என் துன்பத்தையும் அவருக்கு முன்பாக சொல்கிறேன்.

  25. என் ஆவி எனக்குள் சோர்ந்து போகையில், நீரே என் வழியை அறிகிறவர்; நான் நடக்கும் பாதையில் மனிதர்கள் எனக்குக் கண்ணியை மறைத்து வைத்திருக்கிறார்கள்.