Psalms பற்றிய பைபிள் வசனங்கள்: Psalms of Affliction
Psalms of Affliction பற்றிய வசனங்கள்
தாவீது தன் மகன் அப்சலோமிடமிருந்து தப்பி ஓடுகையில் பாடிய சங்கீதம். யெகோவாவே, என் பகைவர்கள் எத்தனை பேராய் இருக்கிறார்கள்! எத்தனைபேர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்.
அநேகர் என்னைக்குறித்து, “இறைவன் அவனை விடுவிக்கமாட்டார்” என்று சொல்கிறார்கள்.
ஆனால் யெகோவாவே, நீர் என்னைச் சுற்றிலும் கேடயமும், என் மகிமையும் என் தலையை உயர்த்துகிறவருமாய் இருக்கிறீர்.
நான் சத்தமிட்டு யெகோவாவைக் கூப்பிடுகிறேன்; அவர் தமது பரிசுத்த மலையிலிருந்து எனக்குப் பதில் கொடுக்கிறார்.
நான் படுத்துக்கொண்டு உறங்குகிறேன்; யெகோவா என்னைத் தாங்குவதால், நான் திரும்பவும் விழித்தெழுகிறேன்.
எல்லாப் பக்கங்களிலும் பதினாயிரம்பேர் எனக்கு விரோதமாய் நின்றாலும், நான் பயப்படமாட்டேன்.
யெகோவாவே, எழுந்தருளும்; என் இறைவனே, என்னை விடுவியும். என் எதிரிகள் எல்லோரையும் கன்னத்தில் அடித்து, கொடியவர்களின் பற்களை உடைத்துப்போடும்.
யெகோவாவிடமிருந்தே விடுதலை வருகிறது. உம்முடைய ஆசீர்வாதம் உமது மக்களின்மேல் இருப்பதாக.
கம்பியிசைக் கருவிகளுடன் பாடப்பட்டு பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். நீதியுள்ள என் இறைவனே, நான் கூப்பிடும்போது எனக்குப் பதில் தாரும். என் துயரத்திலிருந்து எனக்கு ஆறுதலைக் கொடும்; என்மேல் இரக்கமாயிருந்து என் ஜெபத்தைக் கேளும்.
மனிதர்களே, எவ்வளவு காலத்திற்கு என் மகிமையை வெட்கமாக மாற்றுவீர்கள்? எவ்வளவு காலத்திற்கு வெறுமையானவைகளை விரும்பி, பொய்யான தெய்வங்களைத் தேடுவீர்கள்?
யெகோவா பக்தியுள்ளவர்களைத் தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்; நான் யெகோவாவைக் கூப்பிடும்போது அவர் செவிகொடுப்பார்.
நீங்கள் உங்கள் கோபத்தில் பாவம் செய்யவேண்டாம்; நீங்கள் உங்கள் படுக்கையில் இருக்கும்போது, உங்கள் இருதயங்களை ஆராய்ந்து அமைதியாயிருங்கள்.
நீதியான பலிகளைச் செலுத்தி, யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருங்கள்.
“எங்களுக்கு நன்மையைக் காட்டுகிறவன் யார்?” என்று அநேகர் கேட்கிறார்கள்; யெகோவாவே, உம்முடைய முகத்தின் ஒளி எங்கள்மேல் பிரகாசிக்கட்டும்.
தானியமும் புதுத் திராட்சை இரசமும் நிறைந்திருக்கிற காலத்தின் மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியினால் நீர் என் இருதயத்தை நிரப்பியிருக்கிறீர்.
நான் படுத்து மன அமைதியுடன் உறங்குவேன்; ஏனெனில் யெகோவாவே, நீர் மட்டுமே என்னைப் பாதுகாப்பாகக் குடியிருக்கச் செய்கிறீர்.
புல்லாங்குழல்களுடன் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். யெகோவாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும், என் பெருமூச்சைக் கவனியும்.
உதவிக்காய் கதறும் என் சத்தத்தைக் கேளும், என் அரசனே, என் இறைவனே, உம்மிடமே நான் வேண்டுகிறேன்.
யெகோவாவே, காலையிலே என் குரலைக் கேளும்; நான் என் வேண்டுதல்களைக் காலையில் உம்முன் வைத்து, எதிர்பார்ப்புடன் காத்திருப்பேன்.
நீர் கொடுமையானதில் மகிழ்ச்சியடையும் இறைவன் அல்ல; தீயவர் உம்முடன் குடியிருக்க முடியாது.
திமிர் பிடித்தவர்கள் உமது சமுகத்தில் நிற்கமுடியாது; அநியாயம் செய்யும் எல்லோரையும் நீர் வெறுக்கிறீர்.
பொய் சொல்கிறவர்களை நீர் அழிக்கிறீர்; இரத்த வெறியரையும் வஞ்சகமுள்ள மனிதரையும் யெகோவா அருவருக்கிறார்.
ஆனால் நானோ, உமது மிகுந்த உடன்படிக்கையின் அன்பினாலே உமது வீட்டிற்கு வந்து, உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்கி பயபக்தியுடன் வணங்குவேன்.
யெகோவாவே, என் எதிராளிகளின் நிமித்தம் உம்முடைய நீதியில் என்னை வழிநடத்தும்; உமது வழியை எனக்கு முன்பாக நேராக்கும்.
அவர்களுடைய வாயின் வார்த்தை ஒன்றைகூட நம்பமுடியாது; அவர்களுடைய இருதயம் அழிவினால் நிரம்பியிருக்கிறது; அவர்களின் தொண்டையோ திறந்திருக்கும் சவக்குழி; அவர்கள் தங்கள் நாவினால் வஞ்சகம் பேசுகிறார்கள்.