Skip to content

Og பற்றிய பைபிள் வசனங்கள்

44 வசனங்கள் · 3 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. பின்பு இஸ்ரயேலர் திரும்பி பாசானுக்குப்போகும் வழியாய்ப் போனார்கள். அப்பொழுது பாசானின் அரசன் ஓக் என்பவன் இஸ்ரயேலரை எதிர்த்து யுத்தம் செய்ய தனது முழு படையுடன் எத்ரேயுக்குப் போனான்.

  2. ஆனால் யெகோவா மோசேயிடம், “நீ அவனுக்குப் பயப்படவேண்டாம். அவனையும் அவனுடைய முழு படையையும், அவனுடைய நாட்டையும் நான் உன் கையில் ஒப்புவித்தேன். நீ எஸ்போனில் அரசாண்ட எமோரியரின் அரசன் சீகோனுக்குச் செய்ததுபோல இவனுக்கும் செய்” என்றார்.

  3. அப்படியே இஸ்ரயேலர் அவனையும், அவன் மகன்களையும், அவனுடைய முழு படையையும் வெட்டி வீழ்த்தினார்கள். ஒருவரையும் தப்பிப்போக விடவில்லை. அவர்கள் அவனுடைய நாட்டைத் தங்கள் உடைமையாக்கிக்கொண்டார்கள்.

  4. எனவே மோசே, காத்தியருக்கும் ரூபனியருக்கும் யோசேப்பின் மகனாகிய மனாசேயின் அரைக்கோத்திரத்திற்கும், எமோரியரின் அரசன் சீகோனின் அரசையும், பாசானின் அரசன் ஓகின் அரசையும் கொடுத்தான். பட்டணங்களோடும், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளோடும் முழு நாட்டையும் அவர்களுக்கே கொடுத்தான்.

  5. இது எஸ்போனில் ஆட்சி செய்த எமோரியரின் அரசனாகிய சீகோனைத் தோற்கடித்த பின்பும், அஸ்தரோத்தில் ஆட்சி செய்த பாசானின் அரசனாகிய ஓகை எத்ரேயில் தோற்கடித்த பின்பும் நடைபெற்றது.

  6. பின்பு நாம் திரும்பி, பாசானுக்குப் போகிற வழியாகச் சென்றோம். அப்பொழுது பாசானின் அரசனாகிய ஓக் என்பவன் தன் முழு படையுடனும் அணிவகுத்து நம்முடன் யுத்தம் செய்வதற்கு எத்ரேயில் நம்மை எதிர்கொண்டான்.

  7. யெகோவா என்னிடம், “நீ அவனுக்குப் பயப்படவேண்டாம். ஏனெனில் நான் அவனையும், அவனுடைய முழு படையையும், அவனுடைய நாட்டையும் உன்னிடத்தில் ஒப்புவித்தேன். நீ எஸ்போனில் அரசாண்ட எமோரியரின் அரசன் சீகோனுக்குச் செய்ததுபோல இவனுக்கும் செய்” என்றார்.

  8. அவ்வாறே நமது இறைவனாகிய யெகோவா பாசானின் அரசன் ஓகையும், அவனுடைய முழு படையையும் நம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தார். அவர்கள் ஒருவரும் தப்பிப் போகாதபடி நாம் அவர்களை வெட்டி வீழ்த்தினோம்.

  9. அக்காலத்தில் நாம் அவனுடைய பட்டணங்கள் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் கைப்பற்றினோம். அவர்களிடமிருந்து அவர்களுடைய அறுபது பட்டணங்களில் ஒன்றையாகிலும் நாம் கைப்பற்றாமல் விடவில்லை. பாசானில் ஓகின் ஆளுகைக்கு உட்பட்ட முழு அர்கோப் பிரதேசத்தையும் கைப்பற்றினோம்.

  10. இப்பட்டணங்கள் எல்லாம் உயர்ந்த மதில்களாலும், வாசல்களாலும், தாழ்ப்பாள்களாலும் அரண் செய்யப்பட்டிருந்தன. மேலும் அங்கே மதில்களில்லாத பல கிராமங்களும் இருந்தன.

  11. எஸ்போனின் அரசன் சீகோனை அழித்ததுபோல அவர்களையும் முழுவதும் அழித்தோம். ஒவ்வொரு பட்டணத்தையும் அங்கிருந்த ஆண், பெண், பிள்ளைகள் அனைவரையும் அழித்தோம்.

  12. ஆனால் எல்லா வளர்ப்பு மிருகங்களையும், பட்டணங்களிலிருந்து கொள்ளையிட்ட பொருட்களையும் நமக்கென்று கொண்டுவந்தோம்.

  13. அக்காலத்திலேயே இந்த இரண்டு எமோரிய அரசர்களிடமிருந்தும், அர்னோன் பள்ளத்தாக்கில் இருந்து, எர்மோன் மலைவரைக்கும் யோர்தானுக்குக் கிழக்கே இருந்த பிரதேசத்தைக் கைப்பற்றினோம்.

  14. சீதோனியர் எர்மோன் மலையை சிரியோன் என்று அழைத்தார்கள். எமோரியரோ அதை சேனீர் என்று அழைத்தார்கள்.

  15. உயர்ந்த சமவெளியிலுள்ள எல்லா பட்டணங்களையும் கீலேயாத் முழுவதையும், சல்காயி, எத்ரேயி வரையுள்ள பாசானிலிருந்த ஓகின் ஆட்சிக்குட்பட்ட எல்லா பட்டணங்களையும் கைப்பற்றினோம்.

  16. முன்பிருந்த அரக்கருள் மீதியாக இருந்தவன் பாசான் அரசன் ஓக் மட்டுமே. அவனது கட்டில் இரும்பினால் செய்யப்பட்டிருந்தது. அதன் அளவு மனிதருடைய கை பதிமூன்று அடி நீள முழத்தின்படியே ஒன்பது முழ நீளமும் நான்கு முழ அகலமும் கொண்டது. அது இன்னும் அம்மோனியரின் பட்டணங்களில் ஒன்றான ரப்பாவில் இருக்கிறது.

  17. அக்காலத்தில் நாங்கள் கைப்பற்றிய நிலத்திலிருந்து அர்னோன் பள்ளத்தாக்கின் அருகே அரோயேர் பட்டணத்துக்கு வடபகுதியிலுள்ள பிரதேசத்தையும், கீலேயாத்தின் மலைநாட்டில் பாதியையும், அதன் பட்டணங்களையும் ரூபனியருக்கும் காத்தியருக்கும் நான் கொடுத்தேன்.

  18. கீலேயாத்தின் மீதியான பகுதியையும் ஓகின் ஆட்சிக்குட்பட்ட பாசான் முழுவதையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்குக் கொடுத்தேன். பாசானிலுள்ள முழு அர்கோப் பிரதேசமும் அரக்கர் நாடு என சொல்லப்பட்டிருந்தது.

  19. மனாசேயின் சந்ததியான யாவீர் என்பவன் கேசூரியர், மாகாத்தியர் ஆகியோருடைய எல்லைவரை இருந்த அர்கோப் பிரதேசம் முழுவதையும் கைப்பற்றினான். அதற்கு அவனுடைய பெயரே இடப்பட்டது. எனவே பாசான் இந்நாள்வரைக்கும் அவோத்யாவீர் என்றே அழைக்கப்படுகிறது.

  20. நான் கீலேயாத்தை மாகீருக்குக் கொடுத்தேன்.

  21. கீலேயாத்திலிருந்து அர்னோன் பள்ளத்தாக்கு வரையுள்ள பிரதேசத்தை ரூபனியருக்கும் காத்தியருக்கும் கொடுத்தேன். அப்பள்ளத்தாக்கின் நடுப்பகுதி யாப்போக்கு ஆறுவரை செல்கிறது. அச்சிற்றாறு அம்மோனியரின் எல்லையாக அமைந்திருக்கிறது. அர்னோன் ஆற்றுப் பள்ளத்தாக்கின் நடுப்பகுதி அதன் தெற்கு எல்லையாக இருந்தது.

  22. அதன் மேற்கு எல்லையானது, கின்னரேத்தில் இருந்து பிஸ்காவின் மலைச்சரிவின் கீழுள்ள உப்புக்கடல் எனப்படும் அரபா வரையுள்ள யோர்தான் நதியாய் இருந்தது.

  23. அவர்கள் யோர்தானுக்குக் கிழக்கே இருந்த இரு எமோரிய அரசர்களான சீகோனின் நாட்டையும், பாசானின் அரசனான ஓகின் நாட்டையும் கைப்பற்றினார்கள்.

  24. இந்த நாடு அர்னோன் ஆற்றுப் பள்ளத்தாக்கின் ஓரத்திலுள்ள அரோயேர் என்ற இடத்திலிருந்து, எர்மோன் என அழைக்கப்படும் சீயோன் மலைவரைக்கும் பரந்திருந்தது.

  25. இந்த நாடு யோர்தானுக்குக் கிழக்கே அரபாவையும், பிஸ்கா மலைச்சரிவின்கீழ் இருந்த உப்புக்கடலையும் உள்ளடக்கியிருந்தது.