Journey of Israel Through The Desert பற்றிய பைபிள் வசனங்கள்
முக்கிய பைபிள் வசனங்கள்
மோசே யெகோவாவிடம் சொன்னதாவது,
“முழு மனுக்குலத்தின் ஆவிகளுக்கும் இறைவனாகிய யெகோவா இந்த மக்கள் சமுதாயத்தின் மேலாக ஒரு மனிதனை நியமிப்பாராக!
யெகோவாவின் மக்கள் மேய்ப்பனில்லாத செம்மறியாடுகளைப்போல் இராதபடி அவர்களை வெளியே வழிநடத்திச் செல்லவும், உள்ளே கொண்டுவரவும் அவனை நியமிப்பாராக” என்றான்.
எனவே யெகோவா மோசேயிடம், “நூனின் மகனும், ஆவியானவரைப் பெற்றிருக்கிறவனுமாகிய யோசுவாவைத் தெரிந்தெடுத்து, அவன்மேல் உன் கையை வை.
ஆசாரியன் எலெயாசாருக்கு முன்பாகவும், சபையார் எல்லோருக்கும் முன்பாகவும், அவனை நிறுத்தி, அவர்கள் முன்னிலையில் அவனுக்குத் தலைமைப்பொறுப்பைக் கொடு.
இஸ்ரயேல் சமுதாயம் முழுவதும் அவனுக்குக் கீழ்ப்படியும்படியாக உன் அதிகாரத்தில் ஒரளவை அவனுக்குக் கொடு.
அவன் ஆசாரியன் எலெயாசாருக்கு முன்பாக நிற்கவேண்டும். யோசுவா செய்யவேண்டிய தீர்மானங்களை எலெயாசார், யெகோவாவிடம் ஊரீம் மூலமாக விசாரித்து அறிவான். யோசுவாவின் கட்டளைப்படியே, அவனுடன் முழு இஸ்ரயேல் சமுதாயத்தாரும் வெளியே போவார்கள். அவனுடைய கட்டளைப்படியே அவர்கள் உள்ளே வருவார்கள்” என்றார்.
யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான். அவன் ஆசாரியன் எலெயாசார் முன்பாகவும், முழுசபையார் முன்பாகவும் யோசுவாவைக் கூட்டிக்கொண்டுபோய் நிறுத்தினான்.
பின்பு மோசே யெகோவா தனக்கு அறிவுறுத்தியபடியே யோசுவாவின்மேல் தன் கைகளை வைத்து, தலைமைப்பொறுப்பை அவனிடத்தில் கொடுத்தான்.
யெகோவா மோசேயிடம்,
“இஸ்ரயேலருக்காக மீதியானியரைப் பழிவாங்கு; அதன்பின் நீ உன் மக்களுடன் சேர்க்கப்படுவாய்” என்றார்.
எனவே மோசே மக்களிடம், “மீதியானியருக்கு விரோதமாக யுத்தம் செய்யவும், அவர்களைப் பழிவாங்கும்படியான யெகோவாவின் நோக்கத்தை நிறைவேற்றவும் உங்கள் மனிதரில் சிலருக்கு ஆயுதங்களைத் தரிப்பியுங்கள்.
இஸ்ரயேல் கோத்திரம் ஒவ்வொன்றில் இருந்தும் ஆயிரம்பேரைத் தெரிந்தெடுத்து யுத்தத்திற்கு அனுப்புங்கள்” என்றான்.
எனவே ஒவ்வொரு கோத்திரத்தில் இருந்தும், ஆயிரம்பேராக பன்னிரெண்டாயிரம் ஆயுதம் தரித்த மனிதர் இஸ்ரயேல் வம்சங்களிலிருந்து அனுப்பப்பட்டார்கள்.
மோசே ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஆயிரம்பேரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆசாரியன் எலெயாசாரின் மகன் பினெகாசுடன் யுத்தத்திற்கு அனுப்பினான். பினெகாஸ் தன்னுடன் பரிசுத்த இடத்திலிருந்த பொருட்களையும், தொனிக்கும் பூரிகைகளையும் செய்வதற்கு எக்காளங்களையும் எடுத்துக்கொண்டு போனான்.
யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் மீதியானியருக்கு எதிராக யுத்தம்செய்து எல்லா மனிதரையும் கொன்றார்கள்.
அவர்கள் மீதியானியரின் ஐந்து அரசர்களாகிய ஏவி, ரெக்கெம், சூர், ஊர், ரேபா ஆகியோரையும் கொன்றுபோட்டார்கள். அவர்கள் பேயோரின் மகன் பிலேயாமையும் வாளினால் வெட்டிக்கொன்றார்கள்.
இஸ்ரயேலர் மீதியானிய பெண்களையும், குழந்தைகளையும் சிறைப்பிடித்து, அவர்களுடைய ஆட்டு மந்தைகளையும், மாட்டு மந்தைகளையும், அவர்கள் பொருட்களையும் கொள்ளையாக எடுத்துக்கொண்டார்கள்.
மீதியானியர் குடியிருந்த எல்லா பட்டணங்களையும், முகாம்களையும் சேர்த்து அவர்கள் எரித்தார்கள்.
பின்பு தாங்கள் சூறையாடிய பொருட்களையும், மக்கள், மிருகங்கள் உட்பட யுத்தத்தில் கைப்பற்றிய பொருட்களையும் எடுத்துக்கொண்டார்கள்.
அவர்கள் தாங்கள் சிறைபிடித்தவர்களையும், யுத்தத்தில் கைப்பற்றியவைகளையும், கொள்ளைப்பொருட்களையும் மோசே, ஆசாரியன் எலெயாசார் மற்றும் இஸ்ரயேலிய சமுதாயத்தினர் அனைவரிடமும் கொண்டுவந்தார்கள். அப்பொழுது இவர்கள் எரிகோவுக்கு எதிரே யோர்தானுக்கு அருகில் மோவாப் சமவெளியில் முகாமிட்டிருந்தார்கள்.
மோசேயும், ஆசாரியன் எலெயாசாரும், இஸ்ரயேல் சமுதாயத் தலைவர்கள் எல்லோரும் அவர்களைச் சந்திக்க முகாமுக்கு வெளியே வந்தார்கள்.
யுத்தத்திலிருந்து திரும்பி வந்த இராணுவ அதிகாரிகளான ஆயிரம்பேருக்கும், நூறுபேருக்குமான தளபதிகளாய் இருந்தவர்கள்மேல் மோசே கோபம்கொண்டான்.
அவன் அவர்களிடம், “பெண்கள் எல்லோரையும் வாழ அனுமதித்தீர்களோ?
பிலேயாமின் ஆலோசனையைக் கேட்டு பேயோரில் நடந்த காரியத்தில் இஸ்ரயேலரை யெகோவாவிடமிருந்து வழிவிலகச்செய்ய உடந்தையாக இருந்தவர்கள் அவர்கள் அல்லவா? அதனால்தானே யெகோவாவின் மக்களைக் கொள்ளைநோய் வாதித்தது.