உள்ளடக்கத்திற்குச் செல்க

Psalms பற்றிய பைபிள் வசனங்கள்

896 வசனங்கள் · 16 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. தாவீதின் சங்கீதம். யூதாவின் வனாந்திரத்திலிருக்கும்போது பாடியது. இறைவனே, நீரே என் இறைவன், நான் ஆர்வத்துடன் உம்மைத் தேடுகிறேன்; தண்ணீரில்லாமல் வறண்டதும், காய்ந்ததுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது, என் உடலோ உமக்காக ஏங்குகிறது.

  2. பரிசுத்த இடத்தில் நான் உம்மைக் கண்டேன்; உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டறிந்தேன்.

  3. உமது உடன்படிக்கையின் அன்பு உயிரைப் பார்க்கிலும் சிறந்தது; ஆகையால் என் உதடுகள் உம்மை மகிமைப்படுத்தும்.

  4. நான் உயிருடன் இருக்கும்வரை உம்மைத் துதிப்பேன்; ஜெபத்தில் உமது பெயரைச் சொல்லி என் கைகளை உயர்த்துவேன்.

  5. அறுசுவை உணவுகளால் திருப்தியடைவது போல, என் ஆத்துமா திருப்தியடையும்; என் வாய் களிப்புள்ள உதடுகளினால் பாடி, உம்மைத் துதிக்கும்.

  6. என் படுக்கையில் நான் உம்மை நினைக்கிறேன்; இராக்காலங்களில் உம்மை தியானம் செய்கிறேன்.

  7. நீரே என் உதவியாயிருப்பதால், உமது சிறகுகளின் நிழலிலே நான் மகிழ்ச்சியுடன் பாடுவேன்.

  8. நான் உம்மை விடாமல் பற்றிக்கொண்டிருக்கிறேன்; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.

  9. என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் பூமியின் ஆழங்களில் இறங்குவார்கள்.

  10. அவர்கள் வாளுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்; நரிகளுக்கு இரையாவார்கள்.

  11. ஆனால் அரசன் இறைவனில் மகிழ்வான்; இறைவனுடைய பெயரில் சத்தியம்பண்ணுகிற யாவரும் அவரில் மேன்மைபாராட்டுவார்கள்; பொய்யர்களுடைய வாய்களோ மூடப்படும்.

  12. பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். இறைவனே, நான் முறையிடும் என் குரலுக்குச் செவிகொடும்; பகைவனின் பயமுறுத்தலிலிருந்து என் உயிரைப் பாதுகாத்துக்கொள்ளும்.

  13. கொடியவர்களின் சதியிலிருந்தும், ஆரவாரிக்கும் தீயவர்களின் கூட்டத்திலிருந்தும் என்னை மறைத்துக்கொள்ளும்.

  14. அவர்கள் தங்களுடைய நாவுகளை வாள்களைப்போல் கூராக்குகிறார்கள்; தங்கள் சொற்களைப் பயங்கரமான அம்புகளைப்போல் எய்கிறார்கள்.

  15. அவர்கள் மறைவிலிருந்து குற்றமற்றவன்மேல் எய்கிறார்கள்; அவர்கள் பயமின்றி திடீரென அவன்மேல் எய்கிறார்கள்.

  16. தீமையான திட்டமிடுவதில் அவர்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துகிறார்கள்; தங்கள் கண்ணிகளை மறைத்து வைப்பதுபற்றி பேசிக்கொள்கிறார்கள்; “நாம் என்ன செய்கிறோம் என்பதை யார் காணுவார்கள்?” என்கிறார்கள்.

  17. அவர்கள் அநீதி செய்ய சதிசெய்து, “நாங்கள் ஒரு சிறந்த திட்டத்தை வகுத்துள்ளோம்!” என்கிறார்கள். நிச்சயமாகவே மனிதனின் மனமும் இருதயமும் ஆழமானவை.

  18. ஆனால் இறைவன் அவர்களை அம்புகளால் எய்து தாக்குவார்; உடனே அவர்கள் அடித்து வீழ்த்தப்படுவார்கள்.

  19. இறைவன் அவர்களுடைய நாவுகளையே அவர்களுக்கெதிராக திரும்பப்பண்ணி, அவர்களை அழிவுக்குள்ளாக்குவார்; அவர்களைப் பார்ப்போர் அனைவரும் தங்கள் தலைகளை அசைத்துக் கேலி செய்வார்கள்.

  20. எல்லா மனிதரும் பயப்படுவார்கள்; இறைவனின் செயல்களை அவர்கள் அறிவித்து, அவர் செய்தவற்றைப்பற்றி சிந்திப்பார்கள்.

  21. நீதிமான்கள் யெகோவாவிடம் மகிழ்ந்து, அவரிடத்தில் தஞ்சம் அடைவார்கள்; இருதயத்தில் நீதியுள்ளோர் அனைவரும் அவரைப் புகழ்வார்கள்!

  22. பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். இறைவனே, சீயோனிலே துதி உமக்காகக் காத்திருக்கிறது; எங்கள் நேர்த்திக்கடன்கள் உமக்கென்றே நிறைவேற்றப்படும்.

  23. மன்றாட்டைக் கேட்கிறவர் நீரே, மனிதர் அனைவரும் உம்மிடம் வருவார்கள்.

  24. நாங்கள் பாவங்களில் மூழ்கியிருக்கையில், எங்கள் மீறுதல்களை நீர் மன்னித்தீர்.

  25. உமது ஆலய முற்றங்களில் வாழும்படியாக, நீர் தெரிந்தெடுத்து சேர்த்துக்கொண்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நாங்கள் உமது பரிசுத்த ஆலயமாகிய உம்முடைய வீட்டின் நன்மைகளால் நிரப்பப்பட்டிருக்கிறோம்.