God
God பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
அவர்களின் தீமைகள் எல்லாவற்றையும் நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்பதை அவர்கள் உணராதிருக்கிறார்கள். அவர்களின் பாவங்கள் அவர்களை மூடிப்போடுகின்றன; அவை எப்பொழுதும் என்முன் இருக்கின்றன.
அவர்கள் எல்லோரும் சூடேறிய அடுப்பைப்போலாகி, அவர்கள் தங்கள் ஆளுநர்களை அழிக்கிறார்கள். அவர்களுடைய அரசர்கள் அனைவரும் விழுகிறார்கள்; ஆனால் அவர்களில் ஒருவனும் என்னைக் கூப்பிடுகிறதில்லை.
இஸ்ரயேலின் அகந்தை அவனுக்கெதிராய்ச் சாட்சி கூறுகிறது. இவையெல்லாம் நடந்துங்கூட, அவர்கள் தனது இறைவனாகிய யெகோவாவிடம் திரும்பவுமில்லை, அவரைத் தேடவுமில்லை.
எப்பிராயீமியர் உதவிகேட்டுப் போகும்போது, நான் எனது வலையை அவர்கள்மேல் வீசுவேன்; ஆகாயத்துப் பறவைகள்போல், அவர்களை நான் இழுத்து வீழ்த்துவேன்; அவர்கள் ஒன்றாய்கூடும் சத்தத்தை நான் கேட்கும்போது, நான் அவர்களை எச்சரித்ததுபோல் தண்டிப்பேன்.
அவர்களுக்கு ஐயோ கேடு வருகிறது, ஏனெனில், அவர்கள் என்னைவிட்டுப் போய்விட்டார்கள். அவர்களுக்கு அழிவு வருகிறது. ஏனெனில், அவர்கள் எனக்கெதிராக கலகம் பண்ணியிருக்கிறார்கள். நான் அவர்களை மீட்பதற்கு விரும்புகிறேன், ஆனால், அவர்களோ எனக்கெதிராய் பொய் பேசுகிறார்கள்.
அவர்கள் தங்கள் படுக்கையிலிருந்து புலம்புகிறார்களே தவிர, தங்கள் இருதயத்திலிருந்து என்னை நோக்கி அழுவதில்லை. தானியத்திற்காகவும், புதுத் திராட்சை இரசத்திற்காகவும் மட்டுமே அவர்கள் பாகால் தெய்வத்திற்குமுன் ஒன்றுகூடுகிறார்கள். எனவே அவர்கள் என்னைவிட்டு வழிவிலகிப் போகிறார்கள்.
நான் அவர்களைப் பயிற்றுவித்து பெலப்படுத்தினேன்; ஆயினும், அவர்கள் எனக்கெதிராகத் தீமையான சூழ்ச்சி செய்கிறார்கள்.
நானே அவர்களுடைய மகா உன்னதமான இறைவன்; ஆனால் அவர்கள் என் பக்கம் திரும்புகிறதில்லை. அவர்கள் வலுவிழந்த வில்லைப்போல் இருக்கிறார்கள்; அவர்களுடைய தலைவர்கள் தங்களது இறுமாப்பான பேச்சுகளின் நிமித்தம், வாளினால் விழுவார்கள். இதுவே எகிப்து நாட்டினால் அவர்களுக்கு ஏற்படும் நிந்தை.
“உங்கள் உதடுகளில் எக்காளத்தை வையுங்கள்; யெகோவாவின் ஆலயத்துக்கு மேலாக ஒரு எதிரி கழுகைப்போல் பறக்கிறான். ஏனெனில் அவர்கள் எனது உடன்படிக்கையை மீறி, எனது சட்டத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்தார்கள்.
‘எங்கள் இறைவனே, நாங்கள் உம்மை அறிந்திருக்கிறோம்!’ என்று இஸ்ரயேலர் என்னை நோக்கிக் கதறுகிறார்கள்.
என் மக்கள் எனது சம்மதம் இன்றி அரசர்களை ஏற்படுத்துகிறார்கள்; எனது அங்கீகாரம் இல்லாமல், அவர்கள் இளவரசர்களைத் தெரிந்துகொள்கிறார்கள். அவர்கள் தங்கள் வெள்ளியினாலும், தங்கத்தினாலும் தங்களுக்கென விக்கிரகங்களைச் செய்கிறார்கள்; இது அவர்களின் அழிவுக்கே ஏதுவாகும்.
யெகோவா சொல்வதாவது: சமாரியாவே, உன் கன்றுக்குட்டி விக்கிரகத்தை எறிந்துவிடு; எனது கோபம் உனக்கெதிராக பற்றியெரிகிறது. எவ்வளவு காலத்திற்கு இவர்கள் தூய்மையடையாது இருப்பார்கள்?
அந்த விக்கிரகம் இஸ்ரயேலிலிருந்து வந்தது; அது இறைவனல்ல, அதை ஒரு கைவினைஞன் செய்தான், எனவே சமாரியாவின் கன்றுக்குட்டி துண்டுதுண்டாக உடைக்கப்படும்.
அப்படி அவர்கள் தங்களைப் பிற தேசத்தாருக்குள் விற்றிருந்தாலும், இப்பொழுது நான் அவர்களை ஒன்றுசேர்ப்பேன். வலிமைமிக்க அரசனின் கையின் ஒடுக்குதலின்கீழ், அவர்கள் வலிமை குன்றத் தொடங்குவார்கள்.
நான் அவர்களின் நலத்திற்காக எனது சட்டத்தைப்பற்றிய அநேக காரியங்களை அவர்களுக்கு எழுதிக் கொடுத்தேன்; ஆனால் அவர்கள் அவற்றை ஒரு அந்நியமான காரியமாக மதித்தார்கள்.
அவர்கள் எனக்குப் பலிகளைச் செலுத்தி, அதன் இறைச்சியை அவர்கள் சாப்பிடுகிறார்கள்; ஆனாலும் யெகோவா அவர்களின் செயல்களில் பிரியப்படவில்லை. இப்பொழுது யெகோவா அவர்களின் கொடுமையை நினைவில்கொண்டு, அவர்களுடைய பாவத்திற்காக அவர்களைத் தண்டிப்பார். அவர்கள் எகிப்திற்கே திரும்பிப் போவார்கள்.
ஏனெனில் இஸ்ரயேல் தன்னை உண்டாக்கியவரை மறந்து, அரண்மனைகளைக் கட்டுகிறது; யூதா அநேக பட்டணங்களைச் சுற்றி அரண்களைக் கட்டியிருக்கிறது. ஆகவே நான் அவர்களுடைய பட்டணங்கள்மேல் நெருப்பை அனுப்புவேன்; அது அவர்களுடைய கோட்டைகளைச் சுட்டெரிக்கும்.”
இஸ்ரயேலே, நீ மகிழாதே; மற்ற நாடுகளைப்போல் களிகூராதே; ஏனெனில் நீ உனது இறைவனுக்கு உண்மையில்லாமல் இருக்கிறாய். நீ தானியத்தை சூடடிக்கும் எல்லா களங்களிலும் வேசித்தனத்தின் கூலியைப் பெற விரும்புகிறாய்.
அவர்கள் யெகோவாவின் நாட்டில் குடியிருக்கமாட்டார்கள்; ஆனால் எப்பிராயீம் எகிப்திற்குத் திரும்பிப் போகும், அசீரியாவில் அசுத்தமான உணவைச் சாப்பிடும்.
அவர்கள் யெகோவாவுக்கு திராட்சை இரசக் காணிக்கைகளைச் செலுத்தமாட்டார்கள்; அவர்களுடைய பலிகள் அவரை மகிழ்விக்காது. அப்படிப்பட்ட பலிகள், அவர்களுக்கு துக்க வீட்டு உணவைப் போன்றவை; அவற்றைச் சாப்பிடுகிறவர்கள் எல்லோரும் அசுத்தமாயிருப்பார்கள். ஏனெனில், இந்த உணவு அவர்களுக்கானதாக மட்டுமே இருக்கும்; அது யெகோவாவின் ஆலயத்திற்குள் வருவதில்லை.
யெகோவாவின் பண்டிகை நாட்களிலும், நியமிக்கப்பட்ட உங்கள் கொண்டாட்ட நாட்களிலும் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
என் இறைவனோடு இறைவாக்கினனே எப்பிராயீமுக்குக் காவலாளியாய் இருக்கிறேன். ஆயினும் அவனுடைய வழிகளிலெல்லாம் கண்ணிகள் காத்திருக்கின்றன; அவனுடைய இறைவனின் ஆலயத்தில் பகைமை காத்திருக்கிறது.
கிபியாவின் நாட்களில் இருந்ததுபோல், அவர்கள் சீர்கேட்டில் மூழ்கியிருக்கிறார்கள். யெகோவா அவர்களின் கொடுமையை நினைவிற்கொண்டு, அவர்களுடைய பாவங்களுக்காக அவர்களைத் தண்டிப்பார்.
நான் இஸ்ரயேலை முதன்முதல் கண்டபோது, அது பாலைவனத்தில் திராட்சைப் பழங்களைக் கண்டுபிடித்ததுபோல் எனக்கு இருந்தது; நான் உனது முற்பிதாக்களைக் கண்டபோது, அது அத்திமரத்தில் அதன் பருவகாலத்தின் முதல் பழங்களைப் பார்ப்பதுபோல் இருந்தது. ஆனால், அவர்கள் பாகால் பேயோரிடத்திற்கு வந்தபோது, வெட்கக்கேடான பாகால் விக்கிரகத்திற்கு தங்களை அர்ப்பணித்து, தாங்கள் நேசித்த அந்த விக்கிரகத்தைப் போலவே, கேவலமானவர்களானார்கள்.
அவர்கள் பிள்ளைகளைப் பெற்று வளர்த்தாலுங்கூட, அவர்களுடைய பிள்ளைகள் ஒவ்வொருவரையும் அவர்கள் இழக்கும்படி நான் செய்வேன். நான் அவர்களைவிட்டு விலகும்போது, அவர்களுக்கு ஐயோ கேடு!