Skip to content

வெளிப்படுத்தல்1

1
இது இயேசுகிறிஸ்துவின் வெளிப்பாடு. விரைவில் நிகழவிருக்கும் சம்பவங்கள் என்ன என்பதைத் தமது ஊழியர்களுக்கு காண்பிக்கிறதற்காக, இறைவன் இந்த வெளிப்பாட்டை இயேசுகிறிஸ்துவுக்குக் கொடுத்தார். அவர் தமது இறைத்தூதனை தமது ஊழியனான யோவானிடம் அனுப்பி இதை அவனுக்கு தெரியப்படுத்தினார்.
2
இது இறைவனுடைய வார்த்தையைக் குறித்தும், இயேசுகிறிஸ்துவைக் குறித்தும் சாட்சியாக யோவான் தான் கண்ட எல்லாவற்றையும் அறிவித்தான்.
3
இவை நிறைவேறும் காலம் நெருங்கிவிட்டதினால், இந்த இறைவாக்கின் வார்த்தைகளை வாசிக்கிறவர்களும் இதைக் கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறபடி நடக்கிறவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
4
யோவானாகிய நான், ஆசியாவிலுள்ள ஏழு திருச்சபைகளுக்கு எழுதுகிறதாவது: இருந்தவரும், இருக்கிறவரும், வரப்போகிறவரிடமிருந்து உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. அவருடைய அரியணைக்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளிடமிருந்தும்,
5
இயேசுகிறிஸ்துவினிடமிருந்தும் கிறிஸ்துவே உண்மையான சாட்சி, இறந்தவர்களிடையே முதற்பேறானவர், பூமியிலுள்ள அரசர்களை ஆளுகை செய்கிறவர். அவரே நம்மில் அன்பு செலுத்தி, தமது இரத்தத்தினாலே, நமது பாவங்களிலிருந்து நம்மை விடுதலையாக்கினார்.
6
தமது இறைவனும், பிதாவுமானவருக்கு முன்பாக நாம் ஊழியம் செய்யும்படி, நம்மை ஒரு அரசாகவும், ஆசாரியராகவும் ஏற்படுத்தியிருக்கிற இயேசுகிறிஸ்துவுக்கே என்றென்றும் மகிமையும், வல்லமையும் உண்டாவதாக! ஆமென்.
7
“இதோ பாருங்கள், இயேசு மேகங்கள் மீது வருகிறார்” மற்றும் “எல்லா கண்களும் அவரைக்காணும், அவரைக் குத்தியவர்களும் அவரை நோக்கிப் பார்ப்பார்கள்”; பூமியிலுள்ள எல்லா மக்களும், “அவர் நிமித்தம் புலம்புவார்கள்.”
8
“நானே தொடக்கமும் முடிவுமாய் இருக்கிறேன்,” என்று, “இருக்கிறவரும், இருந்தவரும், வரப்போகிறவருமாகிய, எல்லாம் வல்லவராயிருக்கிறவருமாகிய” இறைவனாகிய கர்த்தர் சொல்கிறார்.
9
உங்கள் சகோதரனான யோவானாகிய நான், கிறிஸ்துவில் நமக்குரிய துன்பத்திலும், அரசிலும், துன்பத்தைப் பொறுமையோடு சகிப்பதிலும், உங்கள் பங்காளியாயிருக்கிறேன். இறைவனுடைய வார்த்தையைப் பிரசங்கிக்கிறதாலும், இயேசுவுக்கு சாட்சியாயிருப்பதாலும், நான் நாடுகடத்தப்பட்டு, பத்மு தீவில் இருந்தேன்.
10
கர்த்தருடைய நாளிலே, நான் பரிசுத்த ஆவியானவரில் நிரப்பப்பட்டு இருக்கையில், எனக்குப் பின்னால் எக்காளத்தைப் போன்ற உரத்த சத்தமான ஒரு குரலைக் கேட்டேன்.
11
அது என்னிடம்: “நீ காண்கிறதை ஒரு புத்தகச்சுருளில் எழுதி: அதை எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா ஆகிய பட்டணங்களிலுள்ள ஏழு திருச்சபைகளுக்கும் அனுப்பு” என்று சொன்னது.
12
நான் திரும்பி, என்னோடு பேசிய குரலின் பக்கமாய்ப் பார்த்தேன். நான் திரும்பியபொழுது, ஏழு தங்க குத்துவிளக்குகளைக் கண்டேன்.
13
அந்தக் குத்துவிளக்குகளின் நடுவே, மானிடமகனைப் போன்ற ஒருவர் நின்றார். அவர் அணிந்திருந்த உடை அவருடைய பாதம்வரை நீளமாயிருந்தது. அவர் தம்முடைய மார்பைச் சுற்றி, ஒரு தங்கப்பட்டையைக் கட்டியிருந்தார்.
14
அவருடைய தலையும், தலைமுடியும், வெள்ளைக் கம்பளியைப்போல் இருந்தன. அவை உறைபனியைப்போல் வெண்மையாய் இருந்தன. அவருடைய கண்கள் கொழுந்து விட்டெரியும் நெருப்பைப்போல் இருந்தன.
15
அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் தகதகவென்று ஒளிருகின்ற வெண்கலத்தைப்போல் இருந்தன. அவருடைய குரல் பாய்ந்தோடும் வெள்ளத்தின் இரைச்சலைப்போல் இருந்தது.
16
அவருடைய வலது கரத்தில், ஏழு நட்சத்திரங்களைப் பிடித்துக்கொண்டிருந்தார். அவருடைய வாயிலிருந்து இருபக்கமும் கூர்மையான ஒரு வாள் வெளிப்பட்டு வந்தது. அவருடைய முகம் முழுமையாய் பிரகாசிக்கிற சூரியனைப்போல இருந்தது.
17
நான் அவரைப் பார்த்தபோது, செத்தவனைப்போல், அவருடைய பாதத்தில் வீழ்ந்தேன். அப்பொழுது அவர், தமது வலது கரத்தை என்மேல் வைத்து என்னிடம் சொன்னதாவது: “பயப்படாதே, நானே தொடக்கமும், முடிவுமாயிருக்கிறேன்.
18
நானே வாழ்கிறவர்; நான் இறந்தேன், ஆனால் இதோ, நான் உயிருடன் என்றென்றும் வாழ்கிறவராய் இருக்கிறேன்! மரணத்திற்கும், பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை நானே வைத்திருக்கிறேன்.
19
“ஆகவே, நீ கண்டவைகளையும், இப்பொழுது இருப்பவைகளையும், இனிமேல் நிகழப்போவதையும், எழுது.
20
நீ என்னுடைய வலது கரத்தில் கண்ட ஏழு நட்சத்திரங்கள், மற்றும் ஏழு தங்க குத்துவிளக்குகளின், இரகசியம் இதுவே: ஏழு நட்சத்திரங்களும், ஏழு திருச்சபைகளின் தூதர்கள். ஏழு குத்துவிளக்குகளும் ஏழு திருச்சபைகள்.”
Use arrow keys to navigate
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options