God
God பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
“மேலேயுள்ள வானங்களே, நீதியைப் பொழியுங்கள்; மேகங்கள் அதைப் பொழியட்டும். பூமி அகலமாய்த் திறந்து, இரட்சிப்பின் கனியைத் தந்து, நீதி அதனுடன் துளிர்க்கட்டும்; யெகோவாவாகிய நானே அதைப் படைத்தேன்.
“இஸ்ரயேலின் பரிசுத்தரும், அதைப் படைத்தவருமாகிய யெகோவா சொல்வது இதுவே; இனி நடக்கப்போவதைக் குறித்து, எனது பிள்ளைகளைப்பற்றி என்னிடம் கேள்வி கேட்கிறீர்களா? எனது கைகளின் வேலையைப்பற்றி எனக்குக் கட்டளையிடுகிறீர்களா?
நானே பூமியை உருவாக்கி, அதன்மேல் மனுமக்களையும் படைத்தேன். எனது சொந்தக் கரங்களே வானங்களை விரித்தன; நட்சத்திர சேனைகளையும் நானே அதினதின் இடத்தில் நிலைநிறுத்தினேன்.
நான் எனது நியாயத்தின்படி கோரேசை எழுப்புவேன்; அவனுடைய வழிகளையெல்லாம் நேராக்குவேன். அவன் திரும்பவும் என் நகரத்தைக் கட்டுவான், நாடுகடத்தப்பட்ட எனது மக்களை விலையோ, வெகுமானமோ பெறாமல் விடுதலையாக்குவான்” என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
யெகோவா இஸ்ரயேலுக்கு கூறுவதாவது: “எகிப்தின் உற்பத்திப் பொருட்களும், எத்தியோப்பியாவின் வியாபாரப் பொருட்களும் வரும்; இவற்றுடன் வளர்த்தியில் உயரமான சபேயரும் உன்னிடம் வந்து, உன்னுடையவர்கள் ஆவார்கள். அவர்கள் சங்கிலிகளால் கட்டப்பட்டு, உன் பின்னால் வருவார்கள். அவர்கள் உன் முன்னால் விழுந்து வணங்கி, ‘இறைவன் நிச்சயமாகவே உன்னுடன் இருக்கிறார்; அவரைத்தவிர வேறு எவருமில்லை. வேறெந்த தெய்வமும் இல்லை’ என்று சொல்லி தங்களுக்கு இரங்கும்படி கேட்பார்கள்.”
இஸ்ரயேலின் இரட்சகரும் இறைவனுமானவரே, உண்மையாகவே உம்மை நீர் மறைத்துக்கொள்கிற இறைவன்.
ஆனாலும் யெகோவாவினால் இஸ்ரயேல் நித்திய இரட்சிப்புடன் பாதுகாக்கப்படும். நீங்கள் நித்திய காலங்களுக்கு வெட்கப்படாமலும், அவமானத்திற்கு உட்படாமலும் இருப்பீர்கள்.
யெகோவா கூறுவதாவது: அவர் வானங்களை உருவாக்கினார், அவரே இறைவன்; அவர் பூமியை உருவமைத்துப் படைத்தார்; அவரே அதை அமைத்தார். அது வெறுமையாயிருக்க அவர் படைக்கவில்லை, குடியிருப்புக்காகவே அதை உருவாக்கினார். அவர் கூறுவதாவது: “நானே யெகோவா, என்னையன்றி வேறொருவருமில்லை.
இருளின் நாட்டில் எங்கேயாகிலும் இருந்து நான் இரகசியமாய்ப் பேசவில்லை, ‘வீணாக என்னைத் தேடுங்கள்’ என்று நான் யாக்கோபின் வழித்தோன்றல்களுக்குச் சொல்லவுமில்லை; நான் யெகோவா, உண்மையையே பேசுகிறவர்; சரியானதையே நான் அறிவிக்கிறேன்.
நடக்கப்போவது என்ன? சொல்லுங்கள்; ஒன்றுகூடி ஆலோசித்து அதை அறிவியுங்கள். வெகுகாலத்திற்குமுன் இதை முன்னறிவித்தவர் யார்? ஆதியிலிருந்தே அதை அறிவித்தவர் யார்? அது யெகோவாவாகிய நான் அல்லவோ! என்னையன்றி வேறே இறைவன் இல்லை. நீதியான ஒரு இறைவன், ஒரு இரட்சகர்; என்னையன்றி வேறொருவரில்லை.
“பூமியின் எல்லைகளிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும் என்னிடமாகத் திரும்பி இரட்சிப்படையுங்கள். ஏனெனில், நானே இறைவன், வேறு ஒருவரும் இல்லை.
என்னைக்கொண்டே நான் ஆணையிட்டேன், இதை உத்தமத்தோடு எனது வாய் பேசியிருக்கிறது. அந்த வார்த்தை ஒருபோதும் மாறாது: ஒவ்வொரு முழங்காலும் எனக்கு முன்பாக முடங்கும்; ஒவ்வொரு நாவும் என் பெயரிலேயே ஆணையிடும்.
‘யெகோவாவிடம் மட்டுமே நீதியும் வல்லமையும் இருக்கிறது’ என்று என்னைப்பற்றி அவர்கள் சொல்வார்கள்.” அவருக்கு எதிராக எழுந்த அனைவரும் அவரிடம் வந்து வெட்கத்திற்கு உட்படுத்தப்படுவார்கள்.
ஆனால் இஸ்ரயேலின் வழித்தோன்றல்கள் யாவரும் யெகோவாவிடம் நீதியானவர்களாகக் காணப்பட்டு மேன்மையடைவார்கள்.
“யாக்கோபின் குடும்பமே, இஸ்ரயேல் குடும்பத்தில் எஞ்சியிருப்பவர்களே, நீங்கள் அனைவரும் எனக்குச் செவிகொடுங்கள்; நீங்கள் கருவில் உருவானதுமுதல் நான் உங்களைத் தாங்கினேன், நீங்கள் பிறந்ததுமுதல் நான் உங்களைச் சுமந்தேன்.
நீங்கள் முதிர்வயது அடைந்து, உங்களுக்கு நரைமயிர் உண்டாகும் காலத்திலும், உங்களைத் தாங்கப்போகிறவர் நானே. உங்களைப் படைத்த நானே உங்களைச் சுமப்பேன். நானே உங்களைத் தாங்குவேன், நானே உங்களைக் காப்பாற்றுவேன்.
“என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? யாருக்கு சமமாக எண்ணுவீர்கள்? என்னை ஒப்பிடுவதற்கு யாரை எனக்கு ஒப்பிடுவீர்கள்?
முந்தி நிகழ்ந்த பூர்வீகக் காரியங்களை நினைத்துப் பாருங்கள்; நானே இறைவன், வேறொருவர் இல்லை; நானே இறைவன், என்னைப்போல் ஒருவரும் இல்லை.
நான் ஆரம்பத்திலிருந்தே முடிவை அறிவிக்கிறவர், முற்காலங்களிலேயே வரப்போகிறதை அறிவிக்கின்றவர். ‘என் நோக்கம் நிலைநிற்கும்; நான் விரும்பிய எல்லாவற்றையும் நிறைவேற்றுவேன்’ என்று நான் சொல்கிறேன்.
நான் கிழக்கிலிருந்து இரைதேடும் பறவையை அழைப்பிக்கின்றேன். தூரதேசத்திலிருந்து என் நோக்கத்தை நிறைவேற்றும் ஒரு மனிதனை அழைப்பிக்கின்றேன். நான் என்ன சொன்னேனோ அதை நிறைவேற்றுவேன்; நான் எதைத் திட்டமிட்டேனோ அதைச் செய்வேன்.
பிடிவாத இருதயமுள்ள நீதிக்குத் தூரமானவர்களே! எனக்குச் செவிகொடுங்கள்.
நானே எனது நீதியை அருகில் கொண்டுவருகிறேன், அது வெகுதூரத்தில் இல்லை; எனது இரட்சிப்பு தாமதம் அடையாது. நான் சீயோனுக்கு இரட்சிப்பையும், இஸ்ரயேலுக்கு எனது சிறப்பையும் கொடுப்பேன்.
உனது நிர்வாணம் வெளிப்படுத்தப்படும்; உன்னுடைய வெட்கம் திறந்து காட்டப்படும். நான் பழிவாங்குவேன்; நான் ஒருவரையும் தப்பவிடமாட்டேன்.”
இஸ்ரயேலின் பரிசுத்தரே நமது மீட்பர்; சேனைகளின் யெகோவா என்பதே அவரது பெயர்.
நான் எனது மக்களுடன் கோபங்கொண்டு எனது உரிமைச்சொத்தாய் இருக்கிறவர்களை தூய்மைக்கேடு அடையச் செய்தேன். அவர்களை உனது கையில் ஒப்படைத்தேன்; நீயோ அவர்களுக்கு இரக்கம் காட்டவில்லை, முதியோர்மேலும் மிகவும் பாரமான நுகத்தை வைத்தாய்.