Skip to content

யோபு6

1
யோபு மறுமொழியாக சொன்னது:
2
“என் பிரச்சனைகளும், துன்பங்களும் தராசிலே வைக்கப்பட்டு நிறுக்கப்பட்டால் நலமாயிருக்கும்!
3
அவை கடற்கரை மணலைவிட பாரமாயிருக்கும்; ஆகவே எனது வார்த்தைகள் மூர்க்கமாய் இருப்பது ஆச்சரியமல்லவே.
4
எல்லாம் வல்லவரின் அம்புகள் என்னில் பாய்ந்திருக்கின்றன, என் ஆவி அவைகளின் நஞ்சைக் குடிக்கிறது; இறைவனின் பயங்கரங்கள் எனக்கெதிராய் அணிவகுத்து நிற்கின்றன.
5
தனக்குப் புல் இருக்கும்போது காட்டுக் கழுதை கத்துமோ? தீனி இருக்கும்போது எருது கதறுமோ?
6
சுவையில்லாத உணவு உப்பின்றி சாப்பிடப்படுமோ? முட்டையின் வெள்ளைக்கருவில் ஏதேனும் சுவை உண்டோ?
7
இப்படியான உணவு என்னை நோயாளியாக்குகிறது; நான் அதைத் தொட மறுக்கிறேன்.
8
“நான் வேண்டிக்கொள்வதையும், நான் நம்பி எதிர்பார்ப்பதையும் இறைவன் எனக்குக் கொடுக்கட்டும்.
9
இறைவன் என்னை நசுக்க உடன்படட்டும், தன் கையை நீட்டி என்னை வெட்டிப்போடட்டும்!
10
இந்த ஆறுதல் எனக்கு இன்னும் இருக்கும்; எனது முடிவில்லாத வேதனையிலும் பரிசுத்தரின் வார்த்தைகளை நான் மறுக்கவில்லை.
11
“நான் இன்னும் எதிர்பார்ப்புடன் இருக்க எனக்கு என்ன பெலன் இருக்கிறது? நான் இன்னும் பொறுமையாய் இருக்க என் முடிவு என்ன?
12
ஒரு கல்லின் பெலன் எனக்கு உண்டோ? எனது சதை வெண்கலமோ?
13
எனக்கே நான் உதவிசெய்யத்தக்க வல்லமை என்னில் உண்டோ? வெற்றிக்கான ஆதாரம் என்னைவிட்டு நீங்கிற்று.
14
“எதிர்பார்ப்பில்லாதவன், எல்லாம் வல்லவரைப் பற்றிய பயத்தைக் கைவிட்ட போதிலும், அவனுக்கு அவனுடைய நண்பர்களின் தயவு இருக்கவேண்டும்.
15
ஆனால் என் சகோதரர்களோ, விட்டுவிட்டு பொங்கி ஓடும் பருவகால நீரோடைகளைப்போல, நம்பத்தகாதவர்களாய் இருக்கிறார்கள்.
16
அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும், அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையினாலும் வழிந்தோடும்.
17
ஆனால் வெப்பக் காலத்தில் வற்றி, வெயிலில் கால்வாய்களிலிருந்து மறைந்துபோகின்றன.
18
வியாபாரிகளின் கூட்டம் நீரோடையைத் தேடி; பாதையைவிட்டு விலகி பாழ்நிலங்களுக்குச் சென்று அழிகின்றன.
19
தேமாவின் வியாபாரிகளும், சேபாவின் வியாபாரிகளும் தண்ணீரைத் தேடி நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறார்கள்.
20
அவர்கள் நம்பிக்கையுடன் போனதால் வருத்தப்படுகிறார்கள்; அவ்விடத்தைச் சேர்ந்ததும் ஏமாற்றமடைகிறார்கள்.
21
இப்பொழுது நீங்களும் அப்படியே எனக்கு உதவாமல் போனீர்கள்; என் ஆபத்தைக் கண்டு பயப்படுகிறீர்கள்.
22
நான், ‘எனக்காக எதையாவது கொடுங்கள் என்றோ, உங்கள் செல்வத்தினால் என்னை மீட்டுக்கொள்ளுங்கள் என்றோ,
23
என் பகைவரின் கைகளிலிருந்து என்னை விடுவியுங்கள் என்றோ, கொடியவர்களின் பிடியிலிருந்து என்னை மீட்டு விடுங்கள்’ என்றோ நான் சொன்னதுண்டா?
24
“எனக்கு போதியுங்கள்; நான் மவுனமாய் இருப்பேன்; நான் எதிலே தவறு செய்தேனோ அதை எனக்குக் காட்டுங்கள்.
25
நேர்மையான வார்த்தைகள் எவ்வளவு வேதனையாக இருக்கின்றன! ஆனால் உங்கள் விவாதங்கள் எதை நிரூபிக்கின்றன?
26
நான் சொன்னவற்றைத் திருத்த எண்ணுகிறீர்களோ? மனச்சோர்வுற்ற மனிதரின் வார்த்தைகளை வெறும் காற்றாக மதிக்கிறீர்களோ?
27
அநாதைகளுக்கு எதிராகக்கூட நீங்கள் சீட்டுப்போடுவீர்கள்; உங்கள் நண்பர்களை விற்பதற்கும் பேரம் பேசுவீர்கள்.
28
“ஆனால் இப்பொழுதோ தயவாக என்னைப் பாருங்கள். உங்கள் முகத்துக்கு முன்பாக நான் பொய் சொல்வேனா?
29
போதும் விட்டுவிடுங்கள், அநியாயஞ்செய்ய வேண்டாம்; பொறுங்கள், நீதி இன்னும் என் பக்கமிருக்கிறது.
30
என் உதடுகளில் அநீதி உண்டோ? என் வாய் வஞ்சகத்தை நிதானித்து அறியாதோ?
Use arrow keys to navigate
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options