Skip to content

The First Temple பற்றிய பைபிள் வசனங்கள்

365 வசனங்கள் · 72 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. “உம்முடைய மக்களான இஸ்ரயேலரைச் சேராதவனும், தூரதேசத்திலிருந்து வந்த அந்நியனும் உம்முடைய பெயரின் நிமித்தம் வரலாம்.

  2. ஏனெனில் மனிதர் உமது பெரிதான பெயரையும், உமது வலிமைமிக்க கரத்தையும், நீட்டிய புயத்தையும் பற்றிக் கேள்விப்படுவார்கள். இவ்விதமாய் அந்நியர் வந்து இந்த ஆலயத்தை நோக்கி மன்றாடும்போது,

  3. நீர் உமது உறைவிடமாகிய பரலோகத்திலிருந்து அதைக்கேட்டு அந்த அந்நியன் உம்மிடம் கேட்பது எதுவானாலும் அதைச் செய்யும். அப்பொழுது பூமியில் எல்லா மக்களும் உமது பெயரை அறிந்து, உமது சொந்த மக்களாகிய இஸ்ரயேலர் நடப்பதுபோல் உமக்குப் பயந்து நடப்பார்கள். அத்துடன் நான் கட்டிய இந்த ஆலயத்தில் உமது பெயர் விளங்குகிறது என்றும் அறிவார்கள்.

  4. “உம்முடைய மக்களை நீர் எங்கேயாகிலும் அவர்களுடைய பகைவர்களை எதிர்த்துப் போரிட அனுப்பினால், அவர்கள் யுத்தத்திற்குப் போவார்கள்; அவ்வேளையில் நீர் தெரிந்துகொண்ட பட்டணத்தையும், உமது பெயருக்காக நான் கட்டிய ஆலயத்தையும் நோக்கி யெகோவாவிடம் அவர்கள் மன்றாடும்போது,

  5. பரலோகத்திலிருந்து அவர்களுடைய மன்றாட்டையும், வேண்டுதலையும் கேட்டு அவர்களுடைய சார்பாய் செயலாற்றும்.

  6. “பாவம் செய்யாதவன் எவனும் இல்லை. அதனால் அவர்கள் உமக்கெதிராகப் பாவம் செய்வார்கள்; அப்பொழுது நீர் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்களை அவர்களின் பகைவர்களிடம் ஒப்புக்கொடுத்தால், பகைவர்கள் அவர்களைத் தங்கள் சொந்த நாட்டிற்குத் தூரமாகவோ அருகிலோ சிறைபிடித்துக்கொண்டு போவார்கள்.

  7. அவர்கள் தாங்கள் கைதிகளாய் இருக்கும் நாட்டில் உணர்ந்து மனந்திரும்பி, ‘நாங்கள் பாவஞ்செய்து, தீமையான செயல்களைச் செய்து, கொடுமையாய் நடந்தோம்’ என்று அவர்களை சிறைப்பிடித்தவரின் நாட்டிலே உம்மிடம் கெஞ்சி,

  8. அவர்கள் தங்களைச் சிறைப்பிடித்துக் கொண்டுபோன தங்கள் பகைவரின் நாட்டில், தங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, நீர் அவர்களுடைய முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டையும், நீர் தெரிந்துகொண்ட பட்டணத்தையும், நான் உமது பெயருக்கென கட்டிய ஆலயத்தையும் நோக்கி உம்மை நோக்கி அவர்கள் மன்றாடினால்,

  9. நீர் குடியிருக்கும் இடமான பரலோகத்திலிருந்து அவர்கள் மன்றாட்டையும் கெஞ்சுதலையும் கேட்டு, அவர்கள் சார்பாய் செயலாற்றும்.

  10. உமக்கெதிராகப் பாவஞ்செய்த உமது மக்களை மன்னியும்; உமக்கு எதிராகச் செய்த எல்லாக் குற்றங்களையும் அவர்களுக்கு மன்னித்து, அவர்களை வெற்றிகொண்டவர்கள் அவர்களுக்கு இரக்கம் காட்டும்படி செய்யும்.

  11. ஏனெனில் அவர்கள், உம்முடைய மக்களும், உம்முடைய உரிமைச்சொத்துமாய் இருக்கிறார்கள். இரும்பு உருக்கும் சூளையாகிய அந்த எகிப்திலிருந்து நீரே அவர்களை வெளியே கொண்டுவந்தீர்.

  12. “உமது அடியானுடைய விண்ணப்பத்திற்கும், உமது மக்களாகிய இஸ்ரயேலின் விண்ணப்பத்திற்கும் உமது கண்கள் திறந்திருப்பதாக. அவர்கள் உம்மை நோக்கிக் கதறும் போதெல்லாம் அவர்களுக்குச் செவிகொடுப்பீராக.

  13. ஆண்டவராகிய யெகோவாவே, நீர் எங்கள் முற்பிதாக்களை எகிப்திலிருந்து கொண்டுவந்தபோது, உமது அடியவன் மோசே மூலம் அறிவித்தபடியே நீர் உலகிலுள்ள எல்லா மக்களிலும் இஸ்ரயேலரை உமது உரிமைச்சொத்தாகத் தெரிந்துகொண்டீர்” என்றான்.

  14. யெகோவாவை நோக்கி சாலொமோன் இந்த மன்றாட்டுகளையும், விண்ணப்பங்களையும் செய்துமுடித்தான். அப்போது, யெகோவாவின் பலிபீடத்திற்கு முன்பாகத் தன் கைகளை வானத்துக்கு நேராக விரித்து முழங்காலில் நின்றுகொண்டிருந்தவன், அவ்விடத்தைவிட்டு எழுந்தான்.

  15. அவன் எழுந்து நின்று முழு இஸ்ரயேல் மக்கள் கூட்டத்தையும் பலத்த சத்தமாய் ஆசீர்வதித்துச் சொன்னதாவது:

  16. “தாம் வாக்குப்பண்ணியபடியே நிறைவேற்றி, தம் மக்களான இஸ்ரயேலருக்கு ஆறுதலைக் கொடுத்த யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும். தம்முடைய அடியவனாகிய மோசே மூலம் கொடுத்த எல்லா நல்வாக்குகளிலும் ஒரு வார்த்தையாவது நிறைவேறாமல் போகவில்லை.

  17. எங்கள் இறைவனாகிய யெகோவா எங்கள் தந்தையருடன் இருந்ததுபோல, எங்களுடனும் இருப்பாராக. அவர் எங்களைக் கைவிடாமலும், எங்களைவிட்டு ஒருபோதும் விலகாமலும் இருப்பாராக.

  18. அவருடைய எல்லா வழிகளிலும் நடக்கவும், அவர் எங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த கட்டளைகளையும், விதிமுறைகளையும், சட்டங்களையும் கைக்கொள்ளவும் எங்கள் இருதயங்களை அவர் பக்கமாகத் திருப்புவாராக.

  19. யெகோவாவுக்கு முன்பாக நான் மன்றாடிய இந்த வார்த்தைகள் இரவும் பகலும் எங்கள் இறைவனாகிய யெகோவாவின் அருகே இருப்பதாக. அவர் தமது அடியானுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் அன்றாட தேவைகளுக்கேற்றபடி சார்பாய் இருப்பாராக.

  20. இதனால் உலகிலுள்ள எல்லா மக்களும் யெகோவாவே இறைவன் என்றும், வேறே ஒரு தெய்வமும் இல்லையென்றும் அறிந்துகொள்வார்கள்.

  21. ஆனால் இக்காலத்தில் இருப்பதுபோலவே அவருடைய விதிமுறைகளின்படி வாழவும், அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவும் எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு உங்கள் இருதயங்கள் முற்றிலும் ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும்” என்றான்.

  22. பின்பு அரசனும், அவனுடனிருந்த எல்லா இஸ்ரயேலரும், யெகோவாவுக்கு முன்பாக பலிகளைச் செலுத்தினார்கள்.

  23. சாலொமோன் இருபத்திரண்டாயிரம் மாடுகளையும், இலட்சத்திருபதாயிரம் செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் சமாதான காணிக்கையாகச் செலுத்தினான். இவ்விதமாக அரசனும், எல்லா இஸ்ரயேலரும் யெகோவாவின் ஆலயத்தை அர்ப்பணம் பண்ணினார்கள்.

  24. அதே நாளிலேயே அரசன் யெகோவாவின் ஆலயத்தின் முன்பக்கத்திலுள்ள முற்றத்தின் நடுப்பகுதியை அர்ப்பணித்தான். அங்கே அவன் தகன காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளின் கொழுப்பையும் செலுத்தினான். ஏனெனில் யெகோவாவின் முன்பாக அமைந்திருந்த வெண்கலப் பலிபீடம் தகன காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும், சமாதான காணிக்கையின் கொழுப்பையும் கொள்ளமுடியாதபடி சிறியதாயிருந்தது.

  25. எனவே சாலொமோனும், மிகப்பெரிய கூட்டமாய் லேபோ ஆமாத் எல்லைமுதல் எகிப்து நதிவரை அவனோடிருந்த எல்லா இஸ்ரயேல் மக்களும் சேர்ந்து இந்தக் காலத்தில் பண்டிகையைக் கொண்டாடினர்; எங்கள் இறைவனாகிய யெகோவாவின் முன்பாக முதல் ஏழு நாளும், பின்பு இன்னும் ஏழுநாளுமாக மொத்தம் பதினான்கு நாட்களாகக் கொண்டாடினார்கள்.