Journey of Israel Through The Desert பற்றிய பைபிள் வசனங்கள்
முக்கிய பைபிள் வசனங்கள்
அவர்கள் பாரான் பாலைவனத்திலுள்ள காதேசில் இருந்த மோசே, ஆரோன் மற்றும் இஸ்ரயேலின் முழு சமுதாயத்தினரிடமும் வந்தார்கள். தாம் ஆராய்ந்து அறிந்தவற்றை அவர்களுக்கும், சபையார் அனைவருக்கும் சொன்னதோடு, அந்நாட்டிலிருந்து கொண்டுவந்திருந்த பழங்களையும் அவர்களுக்குக் காட்டினார்கள்.
அவர்கள் மோசேயிடம், “நீர் அனுப்பிய நாட்டிற்கு நாங்கள் போனோம். அது பாலும் தேனும் வழிந்தோடும் நாடு! இதோ அதன் பழங்கள்.
ஆனால் அங்குள்ள மக்களோ மிகவும் பலம் வாய்ந்தவர்கள். அத்துடன் நகரங்களும் அரணுள்ளவையும், விசாலமானவையுமாய் இருக்கின்றன. அங்கே ஏனாக்கின் சந்ததிகளைக்கூட நாங்கள் கண்டோம்.
அமலேக்கியர் நாட்டின் தெற்கு பகுதியில் வாழ்கிறார்கள். ஏத்தியர், எபூசியர், எமோரியர் ஆகியோர் மலைநாட்டில் வாழ்கிறார்கள். கடல் அருகேயும், யோர்தான் நதியோரம் கானானியர் வாழ்கிறார்கள்” என்று விவரமாய்ச் சொன்னார்கள்.
அப்பொழுது காலேப், மக்களை மோசேக்கு முன்பாக அமைதிப்படுத்தி, அவர்களிடம், “நாம் இப்பொழுதே போய் அந்நாட்டை நமக்கு உடைமையாக்கிக் கொள்ளவேண்டும். நிச்சயமாக நாம் அதைச் சொந்தமாக்கிக் கொள்ளலாம்” என்றான்.
ஆனால் காலேப்புடன் போன மனிதர்களோ, “அந்த மக்களை எதிர்க்க நம்மால் முடியாது. ஏனெனில், அவர்கள் எங்களைப்பார்க்கிலும் பலசாலிகள்” என்றார்கள்.
அவர்கள் தாம் ஆராய்ந்து அறிந்து வந்த நாட்டைப்பற்றி இஸ்ரயேலர் மத்தியில் பிழையான செய்தியைப் பரப்பினார்கள். நாங்கள் ஆராய்ந்து அறிந்து வந்த நாடு அங்கு வாழ்கிறவர்களை அழித்தொழிக்கும் நாடு. நாங்கள் அங்கு கண்ட மக்களும் உருவத்தில் பெரியவர்கள்.
அரக்கர்களின் வழிவந்த ஏனாக்கின் சந்ததிகளான அரக்கர்களையும் அங்கு கண்டோம். நாங்கள் எங்கள் பார்வையில் அவர்களுக்கு முன்னால் வெட்டுக்கிளிகளைப்போல் காணப்பட்டோம். அவர்களுடைய பார்வையிலும் நாங்கள் அப்படியே காணப்பட்டோம் என்றார்கள்.
அந்தச் சமுதாய மக்கள் அனைவரும் அன்றிரவு சத்தமாய்க் கூக்குரலிட்டு அழுதார்கள்.
இஸ்ரயேலர் எல்லோருமே மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் அனைவரும் அவர்களிடம், “நாங்கள் எகிப்தில் இறந்திருக்கலாம் அல்லது இந்த பாலைவனத்திலேயே இறந்திருக்கலாமே!
வாளுக்கு இரையாகும்படி யெகோவா ஏன் எங்களை இந்த நாட்டிற்குக் கொண்டுவருகிறார்? எங்கள் மனைவிகளும், பிள்ளைகளும் அவர்கள் கையில் பிடிபட்டுக் கைதிகளாகப் போகப்போகிறார்களே! அதைவிட நாங்கள் எகிப்து நாட்டிற்குத் திரும்பிப்போவது நலமாயிருக்காதோ?” என்றார்கள்.
மேலும், “நாம் நமக்கு ஒரு தலைவனைத் தெரிந்துகொண்டு எகிப்திற்குத் திரும்பிப் போகவேண்டும்” என்றும் அவர்கள் ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
அதன்பின் அவர்கள் அடுத்தநாள் அதிகாலமே எழுந்து உயரமான மலைநாட்டை நோக்கி ஏறிப்போனார்கள். “நாங்கள் பாவம்செய்தோம். நாங்கள் யெகோவா எங்களுக்குத் தருவதாக வாக்களித்த நாட்டுக்குப் போவோம்” என்றார்கள்.
ஆனால் மோசே அவர்களிடம், “நீங்கள் ஏன் யெகோவாவின் கட்டளையை மீறுகிறீர்கள்? இந்த முயற்சி பலனளிக்காது.
நீங்கள் மேலே ஏறிப்போகவேண்டாம். ஏனெனில் யெகோவா உங்களுடன் இல்லை. நீங்கள் பகைவர்களால் தோற்கடிக்கப்படுவீர்கள்.
அங்கே அமலேக்கியரும், கானானியரும் உங்களை எதிர்கொள்வார்கள். நீங்கள் யெகோவாவைவிட்டு விலகிச்சென்றதால், யெகோவா உங்களுடன் இருக்கமாட்டார். நீங்கள் வாளால் வெட்டுண்டு விழுவீர்கள்” என்றான்.
ஆனாலும் அவர்கள் உயரமான அந்த மலைநாட்டிற்கு துணிச்சலோடு ஏறிப்போனார்கள். மோசேயோ, யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியோ முகாமைவிட்டு நகரவில்லை.
அப்பொழுது மலைநாட்டில் வாழ்ந்த அமலேக்கியரும், கானானியரும் கீழே இறங்கிவந்து அவர்களைத் தாக்கி, ஓர்மாவரைக்கும் முறியடித்தார்கள்.
இஸ்ரயேலர் பாலைவனத்தில் இருக்கையில், ஓய்வுநாளில் ஒரு மனிதன் விறகு பொறுக்கிக்கொண்டிருந்தான்.
அவன் விறகு பொறுக்குவதைக் கண்டவர்கள் அவனை மோசேயிடமும், ஆரோனிடமும், சபையார் அனைவரிடமும் கொண்டுவந்தார்கள்.
அவனுக்கு என்ன செய்யப்பட வேண்டுமென்பது தெளிவாய் இல்லாதிருந்ததால், அவனைத் தடுப்புக் காவலில் வைத்தார்கள்.
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “இந்த மனிதன் சாகவேண்டும். அவனை முகாமுக்கு வெளியே கொண்டுபோய் முழுசபையும் அவன்மேல் கல்லெறிய வேண்டும்” என்றார்.
எனவே, கூடியிருந்த சபையார் அவனை முகாமுக்கு வெளியே கொண்டுவந்து யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.
லேவி கோத்திரத்தைச் சேர்ந்த கோகாத்தின் பேரனும், இத்சேயாரின் மகனுமான கோராகு என்பவனும், ரூபன் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களான எலியாபின் மக்களான தாத்தான், அபிராம் என்பவர்களும், பேலேத்தின் மகன் ஓன் என்பவனும்,
இஸ்ரயேல் மக்களில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்திற்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய 250 பேர்களோடும் கூட மோசேக்கு முன்பாக துணிகரமாய் எழும்பினார்கள்.