எண்ணாகமம் 34:1-15
1
யெகோவா மோசேயிடம் பேசி,
2
“நீ இஸ்ரயேலருக்குக் கட்டளையிட்டுச் சொல்லவேண்டியது இதுவே: ‘உங்களுக்கு உரிமைச்சொத்தாகப் பங்கிடப்பட இருக்கும் கானான் நாட்டிற்குள் நீங்கள் செல்லும்போது, அந்நாடு கொண்டிருக்கும் எல்லைகள் எவையெனில்:
3
“ ‘உங்கள் தென்பகுதி ஏதோமின் எல்லை நெடுகிலும், சீன் பாலைவனத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கியிருக்கும். உங்கள் தெற்கு எல்லை கிழக்கே உப்புக்கடலின் முனையிலிருந்து தொடங்கி,
4
அக்கராபீம் மேடுகளுக்குத் தெற்கில் கடந்துசென்று, சீன் பாலைவனம்வரை போய், பின் காதேஸ் பர்னேயாவின் தெற்கிலே போகும். பின்பு அங்கிருந்து ஆத்சார் அதாருக்குப் போய் அஸ்மோனாவரை செல்லும்.
5
பின்பு அஸ்மோனாவிலிருந்து திரும்பி, எகிப்தின் சிற்றாறுகளை இணைத்து மத்திய தரைக்கடலில்போய் முடியும்.
6
உங்கள் மேற்கு எல்லை மத்திய தரைக்கடலின் கரையாக இருக்கும். இதுவே மேற்குப்புறத்தில் உங்கள் எல்லையாயிருக்கும்.
7
உங்கள் வடக்கு எல்லை மத்திய தரைக்கடலிலிருந்து தொடங்கி ஓர் மலைவரை சென்று,
8
ஓர் மலையில் இருக்கும் ஆமாத்தின் வழியாகப் போகும். அங்கிருந்து அந்த எல்லை சேதாத்திற்குப் போய்,
9
சிப்போரோன்வரை தொடர்ந்து சென்று ஆசார் ஏனானில் முடியும். இதுவே உங்கள் வடக்கு எல்லையாயிருக்கும்.
10
உங்கள் கிழக்கு எல்லை ஆசார் ஏனானில் இருந்து தொடங்கி சேப்பாம்வரை போகும்.
11
அதன் எல்லை சேப்பாமிலிருந்து ஆயினுக்குக் கிழக்குப் பக்கத்திலுள்ள ரிப்லாவுக்குப் போய், கலிலேயாக் கடலின் கிழக்கேயுள்ள சரிவுகள் நெடுகிலும் தொடர்ந்து போகும்.
12
பின்பு அந்த எல்லை யோர்தான் நெடுகிலும் சென்று உப்புக்கடலில் முடிவடையும். “ ‘எல்லா பக்கங்களிலும் இந்த எல்லைகளைக்கொண்ட உங்கள் நாடு இதுவே’ என்றார்.”
13
மோசே இஸ்ரயேலருக்குக் கட்டளையிட்டுச் சொன்னதாவது: “இந்த நாட்டைச் சீட்டுப்போட்டு உரிமைச்சொத்தாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள். இதை ஒன்பதரைக் கோத்திரங்களுக்கும் பங்கிட்டுக்கொடுக்கும்படி யெகோவா உத்தரவிட்டிருக்கிறார்.
14
ஏனெனில் ரூபன் கோத்திரமும், காத் கோத்திரமும், மனாசேயின் பாதி கோத்திரமும், ஏற்கெனவே தங்கள் உரிமைச்சொத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.
15
இந்த இரண்டரைக் கோத்திரங்களும் எரிகோவிலுள்ள யோர்தானுக்குக் கிழக்குப் பக்கமாகச் சூரியன் உதிக்கும் திசையில் தங்கள் உரிமைச்சொத்தைப் பெற்றுக்கொண்டார்கள்” என்றான்.
Settings