Skip to content
உபாகமம் 2:1-17

உபாகமம் 2:1-17

1
பின்பு, யெகோவா எனக்கு வழிகாட்டியபடியே நாம் திரும்பி செங்கடலுக்குப் போகும் வழியாக பாலைவனத்தை நோக்கிப் புறப்பட்டோம். நீண்டகாலமாக நாம் சேயீர் மலைநாட்டைச் சுற்றியுள்ள வழியாகப் போனோம்.
2
அதன்பின் யெகோவா என்னிடம்,
3
“நீங்கள் இந்த மலைநாட்டைச் சுற்றிவந்தது போதும். இப்பொழுது வடக்கே திரும்புங்கள்.
4
நீ இந்த மக்களுக்குக் கொடுக்கவேண்டிய உத்தரவுகளாவன: நீங்கள் உங்கள் சகோதரர்களாகிய ஏசாவின் சந்ததியார் வசிக்கும் சேயீர் பிரதேசத்தைக் கடந்துசெல்லப் போகிறீர்கள். அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள், ஆனால் எச்சரிக்கையாய் இருங்கள்.
5
அவர்களை யுத்தத்திற்குத் தூண்டாதீர்கள்; ஏனென்றால் அவர்களின் நாட்டில் ஒரு அடி அளவான நிலத்தைக்கூட தரமாட்டேன். சேயீர் மலைநாட்டை ஏசாவுக்குச் சொந்தமாகக் கொடுத்திருக்கிறேன்.
6
அங்கே அவர்களுக்கு நீங்கள் உண்ணும் உணவுக்கும் குடிக்கும் நீருக்கும் வெள்ளிப்பணம் கொடுங்கள்” என்றார்.
7
உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் கைகளின் வேலை எல்லாவற்றிலும் உங்களை ஆசீர்வதித்தார். அவர் இந்த விசாலமான பாலைவனத்தின் வழியாக உங்கள் பிரயாணத்திலும் உங்கள்மேல் கண்காணிப்பாய் இருந்தார். இந்த நாற்பது வருடங்களும் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுடன் இருந்திருக்கிறார்; நீங்கள் ஒன்றுக்கும் குறைவில்லாமலும் இருந்திருக்கிறீர்கள்.
8
நாம் சேயீரில் வாழ்கின்ற ஏசாவின் சந்ததியாரான நம்முடைய சகோதரரைக் கடந்துசென்றோம். நாம் ஏலாத்திலிருந்தும், எசியோன் கேபேரிலிருந்தும் வருகிற அரபா வழியாகத் திரும்பி மோவாபுக்குப் போகும் பாலைவனப் பாதை வழியாகப் பயணம் செய்தோம்.
9
அப்பொழுது யெகோவா என்னிடம், “மோவாபியர்களைத் தொல்லைப்படுத்தவோ, அவர்களை யுத்தம்செய்யத் தூண்டவோ வேண்டாம். ஏனென்றால் அவர்களின் நாட்டில் எதையும், நான் உங்களுக்குக் கொடுக்கமாட்டேன். நான் ஆர் என்னும் பிரதேசத்தை லோத்தின் சந்ததியாருக்கு உரிமையாகக் கொடுத்திருக்கிறேன்” என்றார்.
10
முற்காலத்தில் அங்கு ஏமியர் வாழ்ந்துவந்தார்கள். அவர்கள் பலமும், எண்ணிக்கையில் அதிகமும், ஏனாக்கியரைப்போல் உயரமுமாய் இருந்தார்கள்.
11
ஏனாக்கியரைப் போலவே அவர்களும் அரக்கர்களாகக் கருதப்பட்டார்கள், மோவாபியரோ அவர்களை ஏமியர் என்று அழைத்தார்கள்.
12
முற்காலத்தில் ஓரியர் சேயீரில் வாழ்ந்துவந்தார்கள். ஆனால் ஏசாவின் சந்ததியார் அவர்களைத் துரத்திவிட்டார்கள். யெகோவா தங்களுக்கு உரிமையாகக் கொடுத்த நாட்டில் இஸ்ரயேலர் செய்ததுபோலவே, ஏசாவின் சந்ததியார் ஓரியரைத் தங்கள் முன்னின்று துரத்திவிட்டு, அவர்களுடைய இடத்தில் குடியேறினார்கள்.
13
அப்பொழுது யெகோவா, “நீங்கள் எழுந்து சேரேத் பள்ளத்தாக்கைக் கடந்துபோங்கள்” என்றார். அப்படியே நாமும் பள்ளத்தாக்கைக் கடந்துசென்றோம்.
14
நாம் காதேஸ் பர்னேயாவிலிருந்து புறப்பட்டு, சேரேத் பள்ளத்தாக்கைக் கடக்கும்வரை முப்பத்தெட்டு வருடங்கள் எடுத்தன. அதற்குள்ளாக யெகோவா அவர்களுக்கு ஆணையிட்டிருந்தபடியே, யுத்தம் செய்யும் மனிதரான அந்தச் சந்ததி முழுவதும் முகாமிலிருந்து அழிந்துபோனார்கள்.
15
அவர்களை முகாமிலிருந்து முற்றிலும் அகற்றிப்போடும்வரை, யெகோவாவினுடைய கரம் அவர்களுக்கு எதிராக இருந்தது.
16
மக்கள் மத்தியில் கடைசியில் இருந்த யுத்தமனிதர் இறந்தபின்,
17
யெகோவா என்னிடம் சொன்னதாவது:
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options