உபாகமம் 1:19-46
19
பின்பு, நமது இறைவனாகிய யெகோவாவின் கட்டளைப்படியே நாம் ஓரேபிலிருந்து புறப்பட்டு, எமோரியரின் மலைநாட்டை நோக்கிப் போனோம். பின்பு நீங்கள் கண்ட அந்த விசாலமும், பயங்கரமுமான பாலைவனத்தின் வழியே அங்குபோய் காதேஸ்பர்னேயாவை அடைந்தோம்.
20
அப்பொழுது நான் உங்களுக்கு, “நம் இறைவனாகிய யெகோவா நமக்குக் கொடுக்கும் எமோரியரின் மலைநாட்டிற்கு நீங்கள் வந்து சேர்ந்துவிட்டீர்கள்.
21
பாருங்கள், உங்கள் இறைவனாகிய யெகோவா இந்த நாட்டை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். உங்கள் முற்பிதாக்களுடைய இறைவனாகிய யெகோவா உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் போய் அந்த நாட்டை உங்களுக்கு உரிமையாக்கிக்கொள்ளுங்கள். பயப்படவேண்டாம்; கலங்கவேண்டாம்” என்றேன்.
22
அப்பொழுது நீங்கள் எல்லோரும் என்னிடம் வந்து, “நாம் அங்கு போவதற்குமுன் அந்நாட்டை உளவுபார்க்க சில மனிதர்களை அனுப்புவோம். நாம் செல்லும் வழியையும், நாம் போய்ச் சேரவேண்டிய பட்டணங்களையும் பற்றிய விவரங்களையும் அவர்கள் கொண்டுவரட்டும்” என்றீர்கள்.
23
நீங்கள் சொன்ன யோசனை எனக்கும் நல்லதாகக் காணப்பட்டது; எனவே நான் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒவ்வொருவராக உங்களிலிருந்து பன்னிரண்டு மனிதரைத் தேர்ந்தெடுத்து அனுப்பினேன்.
24
அவர்கள் புறப்பட்டு மலைநாட்டிற்கு ஏறிப்போய், அங்கிருந்து எஸ்கோல் பள்ளத்தாக்கிற்கு வந்து நாட்டை ஆராய்ந்தார்கள்.
25
அவர்கள் அந்நாட்டின் பழங்களில் சிலவற்றை எடுத்துக்கொண்டுவந்து, “நமது இறைவனாகிய யெகோவா நமக்குக் கொடுக்கும் நாடு நல்லது” என்று விவரம் சொன்னார்கள்.
26
அப்படியிருந்தும் நீங்கள் அங்கு ஏறிப்போக மனதற்றவர்களாய், உங்களுடைய இறைவனாகிய யெகோவாவின் கட்டளைக்கு விரோதமாகக் கலகம் செய்தீர்கள்.
27
நீங்கள் உங்கள் கூடாரங்களிலிருந்து முறுமுறுத்து, “யெகோவா எங்களை வெறுக்கிறார்; அதனால்தான் எங்களை அழிப்பதற்காக எமோரியரின் கையில் ஒப்படைக்கும்படி எகிப்திலிருந்து எங்களை வெளியே கொண்டுவந்தார்.
28
நாங்கள் எங்கே போவது? எங்கள் சகோதரர் எங்களை மனந்தளரப் பண்ணிவிட்டார்களே. ‘அந்த மக்கள் எங்களைவிட பலமும் உயரமுமாய் இருக்கிறார்கள்; அவர்களுடைய பட்டணங்கள் பெரியவையும், அவற்றின் மதில்கள் வானத்தைத் தொடுமளவுக்கு இருக்கின்றன. மேலும் நாங்கள் ஏனாக்கியரான அரக்கரையும் அங்கே கண்டோம்,’ என்கிறார்கள்” என்று சொன்னீர்கள்.
29
அப்பொழுது நான் உங்களிடம், “திகிலடையவேண்டாம்; அவர்களுக்குப் பயப்படவும் வேண்டாம்.
30
உங்களுக்கு முன்பாகச் செல்லும் உங்கள் இறைவனாகிய யெகோவா, உங்கள் கண்களுக்கு முன்பாக எகிப்தில் செய்ததுபோல, உங்களுக்காக யுத்தம் செய்வார். நீங்கள் இந்த இடத்தை வந்து சேரும்வரை,
31
நீங்கள் சென்ற வழிகளிலெல்லாம் ஒரு தகப்பன் தன் மகனைச் சுமந்துசெல்லுவது போல, உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை எப்படிச் சுமந்தார் என்பதை அங்கே கண்டீர்களே” என்றேன்.
32
அப்படிச் செய்தும் நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் நம்பிக்கை வைக்கவில்லை.
33
உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு முகாம் அமைக்கவேண்டிய இடங்களைத் தேடும்படியும், நீங்கள் போகவேண்டிய வழியை உங்களுக்குக் காட்டும்படியும் இரவில் நெருப்பிலும், பகலில் மேகத்திலும் உங்கள் பயணத்தில் உங்களுக்கு முன்சென்றார்.
34
நீங்கள் சொன்னவற்றை யெகோவா கேட்டபோது, அவர் கோபங்கொண்டு கடுமையாக ஆணையிட்டுச் சொன்னதாவது:
35
“நான் உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட அந்த நல்ல நாட்டை இந்தக் கெட்ட சந்ததியாரில் ஒருவனாகிலும் காணமாட்டான்.
36
எப்புன்னேயின் மகனாகிய காலேப் மாத்திரமே அந்நாட்டைக் காண்பான். அவனுக்கும் அவனுடைய சந்ததிக்கும் மட்டுமே அவன் காலடி வைத்த நாட்டைக் கொடுப்பேன்; ஏனென்றால் அவன் யெகோவாவை முழு இருதயத்தோடு பின்பற்றியிருக்கிறான்” என்றார்.
37
உங்களாலே யெகோவா என்னோடும் கோபங்கொண்டு சொன்னதாவது: “நீயும் அதற்குள் போகமாட்டாய்.
38
ஆனால் உன்னுடைய உதவியாளன் நூனின் மகனாகி யோசுவா அதற்குள் போவான். அவனைத் தைரியப்படுத்து, இஸ்ரயேலர் அந்த நாட்டை உரிமையாக்கிக்கொள்ளும்படி அவனே அவர்களை வழிநடத்துவான்.
39
கைதிகளாய் செல்வார்கள் என்று நீங்கள் குறிப்பிட்ட உங்கள் சிறுபிள்ளைகளும், நன்மை தீமை அறியாதிருக்கிற உங்கள் பிள்ளைகளாகிய அவர்களே அந்நாட்டிற்குள் போவார்கள். நான் அந்நாட்டை அவர்களுக்கே கொடுப்பேன். அவர்கள் அதை உரிமையாக்கிக்கொள்வார்கள்.
40
நீங்களோ, திரும்பி செங்கடலுக்குப் போகும் வழியான பாலைவனத்தை நோக்கிப் போங்கள்.”
41
அப்பொழுது நீங்கள் அதற்கு மறுமொழியாக, “நாங்கள் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்தோம். எங்கள் இறைவனாகிய யெகோவா எங்களுக்குக் கட்டளையிட்டபடியே போய் யுத்தம் செய்வோம்” என்றீர்கள். மலைநாட்டிற்கு ஏறிப்போவது சுலபம் என எண்ணி நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் ஆயுதங்களையும் தரித்துக்கொண்டீர்கள்.
42
ஆனால் யெகோவா என்னிடம், “நீங்கள் மேலே யுத்தம்செய்யப் போகவேண்டாம். நான் உங்களுடன் இருக்கமாட்டேன். நீங்கள் உங்கள் பகைவரால் தோற்கடிக்கப்படுவீர்கள் என்று அவர்களுக்குச் சொல்” என்று சொன்னார்.
43
நான் அதை உங்களுக்குச் சொல்லியும், நீங்கள் எனக்குச் செவிகொடுக்கவில்லை. யெகோவாவின் கட்டளைக்கு விரோதமாகக் கலகம்செய்து, உங்கள் அகந்தையில் அணிவகுத்து மலைநாட்டிற்கு ஏறினீர்கள்.
44
அப்பொழுது மலைநாட்டில் வாழ்ந்த எமோரியர் உங்களுக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் தேனீக்கள் கூட்டம்போல் உங்களைத் துரத்தி, சேயீரிலிருந்து ஓர்மாவரை உள்ள வழியெல்லாம் உங்களை அடித்து வீழ்த்தினார்கள்.
45
நீங்கள் திரும்பிவந்தபோது, யெகோவாவிடம் போய்ப் புலம்பி அழுதீர்கள்; ஆனால் அவர் உங்கள் புலம்பலைச் செவிசாய்த்து கவனிக்கவில்லை.
46
ஆனபடியால் நீங்கள் காதேசில் தங்கி, அநேக காலத்தை அங்கே கழித்தீர்கள்.
Settings