Joseph பற்றிய பைபிள் வசனங்கள்: 7. Of Arimathaea. Begs the body of Jesus for burial in his own tomb
7. Of Arimathaea. Begs the body of Jesus for burial in his own tomb பற்றிய வசனங்கள்
மாலை வேளையானபோது, அரிமத்தியா பட்டணத்திலிருந்து யோசேப்பு என்னும் பெயருடைய ஒரு செல்வந்தன் வந்தான். இவனும் இயேசுவுக்கு சீடனாயிருந்தான்.
அவன் பிலாத்துவினிடம் போய், இயேசுவின் உடலைத் தரும்படி கேட்டான். பிலாத்துவும் அதை அவனுக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டான்.
யோசேப்பு அந்த உடலை எடுத்து, சுத்தமான மென்பட்டுத் துணியினால் சுற்றி,
அதைத் தனக்குச் சொந்தமான கற்பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் வைத்தான்; பின்பு அவன் கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனான்.
அந்த நாள் ஓய்வுநாளுக்கு முந்தின நாளான, ஆயத்த நாளாயிருந்தது. மாலை வேளையானபோது,
அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவனும், நீதிமன்றத்தின் முக்கிய உறுப்பினருமான யோசேப்பு துணிச்சலுடன் பிலாத்துவிடம் போய், இயேசுவின் உடலைத் தரும்படி கேட்டான். இவன் இறைவனின் அரசுக்காகக் காத்துக்கொண்டிருந்த ஒருவன்.
இயேசு அதற்குள்ளாகவே இறந்துவிட்டார் எனக்கேட்ட பிலாத்து வியப்படைந்தான். அவன் நூற்றுக்குத் தலைவனை கூப்பிட்டு, “இயேசு இறந்து விட்டாரா?” என்று கேட்டான்.
நூற்றுக்குத் தலைவனிடமிருந்து அதை உறுதி செய்துகொண்ட பின்பு, அவன் இயேசுவின் உடலை யோசேப்பிடம் கொடுத்தான்.
எனவே யோசேப்பு மென்பட்டுத் துணியைக் கொண்டுவந்து, அவரது உடலைக் கீழே இறக்கி, அதை அந்தத் துணியினால் சுற்றினான். பின்பு, அதை கற்பாறையில் வெட்டியிருந்த ஒரு கல்லறையில் வைத்து, அதன் வாசலில் ஒரு கல்லைப் புரட்டி மூடினான்.
மகதலேனா மரியாளும், யோசேயின் தாயாகிய மரியாளும், இயேசு எங்கு கிடத்தப்பட்டார் என்று பார்த்தார்கள்.
நீதிமன்றத்தின் அங்கத்தினராயிருந்த, யோசேப்பு என்னும் பெயர்கொண்ட ஒருவன் இருந்தான். அவன் நல்லவனும், நீதிமானாயிருந்தான்.
அவன் அவர்களுடைய தீர்மானத்திற்கோ, அவர்களுடைய செயலுக்கோ உடன்பட்டிருக்கவில்லை. அவன் யூதேயாவின் ஒரு பட்டணமான, அரிமத்தியா என்ற இடத்தைச் சேர்ந்தவன். அவன் இறைவனுடைய அரசுக்காகக் காத்திருந்தான்.
அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவினுடைய உடலைத் தரும்படி கேட்டான்.
பின்பு அவன் உடலைக் கீழே இறக்கி, ஒரு மெல்லிய துணியில் சுற்றி, கற்பாறையில் வெட்டியிருந்த ஒரு கல்லறையில் வைத்தான். கல்லறையில், இதுவரை எவருடைய உடலுமே வைக்கப்படவில்லை.
அது ஓய்வுநாளுக்கு முந்தின நாளான ஆயத்த நாளாயிருந்தது. ஓய்வுநாளின் தொடக்கமோ நெருங்கிக் கொண்டிருந்தது.
கலிலேயாவிலிருந்து இயேசுவுடன் வந்திருந்த பெண்கள், யோசேப்புக்குப் பின்னேசென்று கல்லறையையும், அதில் எப்படி இயேசுவினுடைய உடல் கிடத்தப்பட்டது என்பதையும் பார்த்தார்கள்.
பின்பு அவர்கள் வீட்டுக்குப்போய், நறுமணப் பொருட்களையும், நறுமணத் தைலங்களையும் ஆயத்தம் செய்தார்கள். ஆனால் கட்டளையின்படியே, ஓய்வுநாளில் அவர்கள் ஓய்ந்திருந்தார்கள்.
பின்பு அரிமத்தியா பட்டணத்தைச் சேர்ந்த யோசேப்பு, இயேசுவின் உடலைத் தரும்படி பிலாத்துவிடம் கேட்டான். இந்த யோசேப்பு இயேசுவின் சீடனாயிருந்தான். ஆனால் அவன் யூதருக்குப் பயந்ததினால் இரகசியமாகவே அவருக்கு சீடனாயிருந்தான். அவன் பிலாத்துவின் அனுமதியுடன் வந்து இயேசுவின் உடலை எடுத்துச் சென்றான்.
அவனுடன் நிக்கொதேமுவும் கூடப்போனான். இவனே முன்னொரு முறை இரவிலே இயேசுவைச் சந்திக்க வந்தவன். நிக்கொதேமு வரும்போது வெள்ளைப்போளமும், சந்தனமும் கலந்த ஒரு கலவையைக் கொண்டுவந்தான். அது கிட்டத்தட்ட முப்பது கிலோ எடை இருந்தது.
அவர்கள் இருவரும் இயேசுவின் உடலை இறக்கி, அந்த நறுமணப் பொருளை மென்பட்டுத் துணிகளில் வைத்து உடலைச் சுற்றிக் கட்டினார்கள். இது யூதரின் அடக்க முறைப்படி செய்யப்பட்டது.
இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் அதுவரை யாரும் அடக்கம் செய்யப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது.
அது யூதருடைய பண்டிகைக்குரிய ஆயத்த நாளாய் இருந்ததாலும், அக்கல்லறை அருகே இருந்ததாலும் அவர்கள் இயேசுவின் உடலை அந்தக் கல்லறையில் வைத்தார்கள்.