எண்ணாகமம் 32:20-33
20
அதற்கு மோசே, “நீங்கள் இதைச் செய்வீர்களானால்: நீங்கள் யெகோவா முன்னிலையில் யுத்த ஆயுதம் தரித்து,
21
அவர் தமது எதிரிகளைத் தமக்கு முன்பாகத் துரத்திவிடும்வரை யெகோவாவுக்கு முன்பாக நீங்கள் ஆயுதம் தாங்கி யோர்தானைக் கடந்துபோகவேண்டும்.
22
அப்படிச் செய்வீர்களானால் யெகோவாவுக்கு முன்பாக நாடு கீழ்ப்படுத்தப்படும்போது, நீங்கள் திரும்பிப்போகலாம். யெகோவாவுக்கும் இஸ்ரயேலருக்கும் வாக்குக்கொடுத்த உங்கள் கடமையிலிருந்தும் நீங்கள் நீங்கலாயிருப்பீர்கள். இந்த நாடும் யெகோவா முன்னிலையில் உங்கள் உடைமையாகும்.
23
“ஆனால் அவ்வாறு நீங்கள் செய்யத்தவறினால், நீங்கள் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்கிறவர்களாயிருப்பீர்கள்; உங்கள் பாவமே உங்களைக் கண்டுபிடிக்கும் என்பதும் உங்களுக்கு நிச்சயமாய்த் தெரிந்திருக்கட்டும்.
24
நீங்கள் உங்கள் பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும் பட்டணங்களைக்கட்டுங்கள். உங்கள் மந்தைகளுக்கு தொழுவங்களையும் அமையுங்கள். ஆனால், நீங்கள் வாக்குக்கொடுத்தபடியே செய்யுங்கள்” என்றான்.
25
அப்பொழுது காத்தியரும், ரூபனியரும் மோசேயிடம், “உமது அடியாராகிய நாங்கள் எங்கள் தலைவனாகிய நீர் கட்டளையிட்டபடியே செய்வோம்.
26
எங்கள் பிள்ளைகளும், மனைவியரும், எங்கள் ஆட்டு மந்தைகளும், மாட்டு மந்தைகளும் இங்கே கீலேயாத்தின் பட்டணங்களிலேயே இருக்கட்டும்.
27
உமது அடியாராகிய நாங்களோ ஒவ்வொருவரும் ஆயுதம் தாங்கி, எங்கள் தலைவனாகிய நீர் சொன்னபடியே யெகோவாவுக்கு முன்பாக யுத்தத்திற்குக் கடந்துபோவோம்” என்றார்கள்.
28
அப்பொழுது மோசே ஆசாரியன் எலெயாசாரிடமும், நூனின் மகனாகிய யோசுவாவிடமும் இஸ்ரயேல் கோத்திரக் குடும்பத் தலைவர்களிடமும், அவர்களைப்பற்றி உத்தரவிட்டான்.
29
அவன் சொன்னதாவது: “காத்தியரும், ரூபானியரும் ஆயுதந்தரித்தவர்களாக யெகோவா முன்பாக யோர்தானைக் கடந்து உங்களுடன் சேர்ந்து யுத்தத்திற்கு வந்தால், அந்நாடு உங்களுக்குக் கிடைத்தவுடன் கீலேயாத் நாட்டை அவர்களுக்கு உரிமையாகக் கொடுத்துவிடுங்கள்.
30
ஆனால் அவ்வாறு அவர்கள் ஆயுதம் தரித்து உங்களுடன் கடந்து வராவிட்டால், அவர்கள் கானானில் உங்களுடனேயே தங்கள் சொத்துரிமையை ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்றான்.
31
அதற்குக் காத்தியரும், ரூபனியரும், “உமது அடியார் யெகோவா சொல்லியிருக்கிறதையே செய்வோம்.
32
நாங்கள் ஆயுதம் தாங்கியவர்களாக யெகோவாவுக்கு முன்பாக யோர்தானைக் கடந்து, கானானுக்குப் போவோம். ஆனால் நாங்கள் உரிமையாக்கும் சொத்தோ, யோர்தானுக்கு இக்கரையிலேயே இருக்கும்” என்றார்கள்.
33
எனவே மோசே, காத்தியருக்கும் ரூபனியருக்கும் யோசேப்பின் மகனாகிய மனாசேயின் அரைக்கோத்திரத்திற்கும், எமோரியரின் அரசன் சீகோனின் அரசையும், பாசானின் அரசன் ஓகின் அரசையும் கொடுத்தான். பட்டணங்களோடும், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளோடும் முழு நாட்டையும் அவர்களுக்கே கொடுத்தான்.
Settings