Skip to content

1 கொரிந்தியர்1

வாழ்த்தும் ஆசிரியர் அறிமுகமும்

1
இறைவனின் சித்தத்தின்படி கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாயிருக்கும்படி அழைக்கப்பட்ட பவுலும், நமது சகோதரனாகிய சொஸ்தெனேயும் எழுதுகிறதாவது,
2
கொரிந்துவில் இருக்கும் இறைவனுடைய திருச்சபைக்கு, கிறிஸ்து இயேசுவில் பரிசுத்தமாக்கப்பட்டும் பரிசுத்தமாயிருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிற அனைவருக்கும், உங்களுக்கும் எங்களுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரைச் சொல்லி ஒன்றிணைந்து எல்லா இடங்களிலும் ஆராதிக்கிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:
3
நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

ஆவிக்குரிய வரங்களுக்காக நன்றி

4
கிறிஸ்து இயேசுவில் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கிருபையின் காரணமாக, நான் எப்பொழுதும் உங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
5
நீங்கள் கிறிஸ்துவுக்குள் எல்லாவிதத்திலும், எல்லாப் பேச்சுத்திறனிலும், எல்லா அறிவிலும், எல்லாவகையிலும் செல்வச் சிறப்புடையவர்களாய் விளங்குகிறீர்கள்.
6
ஏனெனில், கிறிஸ்துவைப்பற்றிய எங்களுடைய சாட்சி உங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
7
ஆகவே, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் நீங்கள், ஆவிக்குரிய வரம் யாதொன்றிலும் குறைவுபடாதிருக்கிறீர்கள்.
8
இறைவன் கடைசிமட்டும் உங்களைப் பலமுள்ளவர்களாய்க் காத்துக்கொள்வார். அதனால் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து திரும்பவரும் நாளில், நீங்கள் எந்தவித குற்றமும் சாட்டப்படாதவர்களாய் இருப்பீர்கள்.
9
தமது மகனும், நமது கர்த்தருமாகிய இயேசுகிறிஸ்துவுடன் ஐக்கியமாய் இருப்பதற்கு, உங்களை அழைத்திருக்கும் இறைவன் உண்மையுள்ளவர்.

ஒற்றுமைக்கான வேண்டுகோளும் பிரிவினைக்கு எதிரான எச்சரிக்கையும்

10
பிரியமானவர்களே, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரில் உங்களிடம் நான் வேண்டிக்கொள்கிறதாவது: நீங்கள் ஒருவரோடொருவர் ஒத்துப்போகிறவர்களாய் இருந்தால், உங்கள் மத்தியில் பிரிவினைகள் இருக்காது. அத்துடன் நீங்களும், உங்கள் மனதிலும் சிந்தனையிலும் முழுமையாக ஒருமைப்பட்டும் இருப்பீர்கள்.
11
பிரியமானவர்களே, உங்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் உண்டென்று குலோவேயாளின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் எனக்கு அறிவித்தார்கள்.
12
உங்களில் ஒருவன், “நான் பவுலைப் பின்பற்றுகிறவன்” என்கிறான்; இன்னொருவன், “நான் அப்பொல்லோவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான்; இன்னும் ஒருவன், “நான் கேபாவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான்; இன்னும் ஒருவன், “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான். இவற்றையே இங்கு நான் குறிப்பிடுகிறேன்.
13
கிறிஸ்து பிளவுப்பட்டுள்ளாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? நீங்கள் பவுலின் பெயரினாலா திருமுழுக்கைப் பெற்றீர்கள்?
14
கிறிஸ்புவையும் காயுவையும் தவிர, உங்களில் யாருக்காகிலும் நான் திருமுழுக்கு கொடுக்கவில்லையே. அதற்காக நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
15
ஆகவே, என் பெயரால் திருமுழுக்கு பெற்றதாக உங்களில் ஒருவனாகிலும் சொல்லமுடியாது.
16
ஆம், நான் ஸ்தேவானின் வீட்டாருக்கும் திருமுழுக்கு கொடுத்தேன். அதற்கு மேலாக, வேறுயாருக்கும் நான் திருமுழுக்கு கொடுத்ததாக எனக்கு ஞாபகம் இல்லை.
17
கிறிஸ்து என்னைத் திருமுழுக்கு கொடுக்க அனுப்பவில்லை, நற்செய்தியைப் பிரசங்கிக்கவே அனுப்பினார். கிறிஸ்துவின் சிலுவை அதன் வல்லமையை இழந்து போகாதிருக்கும்படி, மனித ஞானத்தின் அடிப்படையிலான வார்த்தைகளை உபயோகிக்காமல் பிரசங்கிக்கவே அவர் என்னை அனுப்பினார்.

சிலுவை: தேவனுடைய வல்லமை, மனிதரின் மூடத்தனம்

18
அழிவின் பாதையில் போகிறவர்களுக்கு சிலுவையின் செய்தி மூடத்தனமாகவே தோன்றுகிறது. ஆனால் இரட்சிக்கப்படுகின்ற நமக்கோ அது இறைவனின் வல்லமையாய் இருக்கின்றது.
19
ஆகவேதான், “நான் ஞானிகளின் ஞானத்தை அழித்து; அறிவாளிகளின் அறிவாற்றலை பயனற்றதாக்குவேன்” என்பதாக எழுதப்பட்டிருக்கிறது.
20
ஞானி எங்கே? வேத ஆசிரியர் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? உலக ஞானத்தை இறைவன் மூடத்தனமாக்கவில்லையோ?
21
உலகம் தம் ஞானத்தால் இறைவனை அறியமுடியாதபடி, இறைவன் தமது ஞானத்தில் இதைச் செய்திருக்கிறார். எனவே மூடத்தனமாய்த் தோன்றுகிற எங்கள் பிரசங்கத்தினால் விசுவாசிக்கிறவர்களை இரட்சிக்க இறைவன் விருப்பங்கொண்டார்.
22
யூதர்கள் அற்புத அடையாளங்கள் வேண்டுமென்று கேட்கிறார்கள்; கிரேக்கர்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள்.
23
ஆனால் நாங்களோ, சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்: இது யூதருக்கு இடறச்செய்யும் தடையாயும், யூதரல்லாதவருக்கு மூடத்தனமாயும் இருக்கிறது.
24
ஆனால், யூதரிலும் கிரேக்கரிலும் இறைவனால் அழைக்கப்பட்டவர்களுக்கு, கிறிஸ்துவே இறைவனின் வல்லமையும், இறைவனின் ஞானமுமாக இருக்கிறார்.
25
ஏனெனில் இறைவனின் மூடத்தனமோ மனித ஞானத்திலும் மிகுந்த ஞானமுள்ளதாயிருக்கிறது; இறைவனின் பெலவீனமோ மனித பெலத்திலும் மிகுந்த பெலனுள்ளதாயிருக்கிறது.

தேவன் பலவீனமானவர்களையும் தாழ்மையானவர்களையும் தேர்ந்தெடுக்கிறார்

26
பிரியமானவர்களே, நீங்கள் அழைக்கப்பட்டபொழுது எப்படி இருந்தீர்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். மனித மதிப்பீட்டின்படி, உங்களில் ஞானிகள் அநேகரில்லை; செல்வாக்குடையவர்கள் அநேகரில்லை; உயர்குடிப் பிறந்தவர்களாய் அநேகரில்லை.
27
ஆனால் இறைவனோ, ஞானிகளை வெட்கப்படுத்தும்படி, உலகின் மூடத்தனமானவற்றைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவர்களை வெட்கப்படுத்தும்படி, உலகின் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.
28
உலகம் பொருட்டாகக் கருதுபவற்றை அவமாக்கும்படி, உலகத்தில் தாழ்ந்தவற்றையும், மக்களால் கீழ்த்தரமாக எண்ணப்பட்டவைகளையும், உலகத்தில் ஒன்றும் இல்லாதவைகளையும் அவர் தெரிந்துகொண்டார்.
29
இதனால், அவருக்கு முன்பாக ஒருவராலும் பெருமைபாராட்ட முடியாது.
30
இறைவனாலேயே நீங்கள் கிறிஸ்து இயேசுவில் இருக்கிறீர்கள். கிறிஸ்துவே இறைவனிடமிருந்து நமக்காக வந்த ஞானம். அவரே நம்முடைய நீதியும், பரிசுத்தமும், மீட்புமாயிருக்கிறார்.
31
ஆகவே எழுதியிருக்கிறபடி, “பெருமைபாராட்ட விரும்புகிறவன், கர்த்தரிலேயே பெருமை பாராட்டட்டும்.”
Use arrow keys to navigate
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options