உள்ளடக்கத்திற்குச் செல்க

Wicked பற்றிய பைபிள் வசனங்கள்

724 வசனங்கள் · 18 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. ஆகையால், எனது கனவின் விளக்கத்தை எனக்குச் சொல்லும்படி பாபிலோனிலுள்ள எல்லா ஞானிகளையும் எனக்கு முன்பாக அழைத்துவரும்படி கட்டளையிட்டேன்.

  2. மந்திரவாதிகளும், மாந்திரீகர்களும், சோதிடரும், குறிசொல்பவர்களும் வந்தபோது அவர்களுக்கு என் கனவைச் சொன்னேன். ஆனால் அவர்களால் கனவின் விளக்கத்தை எனக்குச் சொல்ல முடியவில்லை.

  3. கடைசியாகத் தானியேல் என் முன்பாக வந்தபோது, நான் எனது கனவை அவனிடம் சொன்னேன். அவன், “பெல்தெஷாத்சார்” என்னும் என் தெய்வத்தின் பெயரால் அழைக்கப்படுகிறான். அவனுக்குள் பரிசுத்த தெய்வங்களின் ஆவி இருக்கிறது.

  4. நான் அவனிடம், “மந்திரவாதிகளுள் பிரதானமானவனே பெல்தெஷாத்சாரே, பரிசுத்த தெய்வங்களின் ஆவி உன்னிடம் உண்டென்பதை நான் அறிவேன். எந்த மறைபொருளையும் வெளிப்படுத்துவது உனக்குக் கடினமல்ல. இதுதான் எனது கனவு, அதன் விளக்கத்தைச் சொல் என்றேன்.”

  5. நான் எனது படுக்கையில் படுத்திருக்கையில் கண்ட தரிசனங்கள் இவையே: நான் பார்த்தபோது எனக்கு முன்பாக நாட்டின் நடுவில் ஒரு மரம் நின்றது. அது மிக உயரமாயிருந்தது.

  6. அந்த மரம் விசாலமாயும் வலுவுள்ளதாயும் வளர்ந்தது. அதன் நுனிக்கிளை ஆகாயத்தைத் தொட்டது. உலகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் அதைப் பார்க்கக் கூடியதாயிருந்தது.

  7. அதன் இலைகள் அழகானதாயும், அதில் பழங்கள் நிறைந்தும் காணப்பட்டன. எல்லோருக்கும் உணவும் அதில் இருந்தது. அதன் கீழே வெளியின் மிருகங்கள் புகலிடமடைந்திருந்தன. அதன் கிளைகளில் ஆகாயத்துப் பறவைகளும் குடியிருந்தன. அதிலிருந்து எல்லா உயிரினங்களுக்கும் உணவு கிடைத்தது.

  8. நான் எனது படுக்கையில் படுத்திருக்கும்போது, இந்தத் தரிசனத்தைக் கண்டேன். அதில் பரலோகத்திலிருந்து இறங்கி ஒரு பரிசுத்த தூதன் எனக்கு முன்பாக வந்தார்.

  9. அவர் உரத்த சத்தமிட்டு, “இந்த மரத்தை வெட்டி வீழ்த்துங்கள். கிளைகளை அகற்றிப்போடுங்கள். அவற்றின் இலைகளை உதிர்த்து விடுங்கள். பழங்களைப் பறித்தெறியுங்கள். இந்த மரத்தின் கீழுள்ள மிருகங்களெல்லாம் ஓடிவிடட்டும். அதன் கிளைகளில் தங்கியுள்ள பறவைகளும் பறந்துவிடட்டும்.

  10. ஆனால் அதன் அடிமரத்தையும், வேர்களையும் இரும்பினாலும், வெண்கலத்தினாலும், கலந்து செய்யப்பட்ட சங்கிலியில் கட்டப்பட்டதாய் வயல்வெளியின் புற்தரையில் மீந்திருக்க விட்டுவிடுங்கள்” என்றார். மேலும் அவர், “ ‘வானத்தின் பனியில் நனைந்து, பூமியிலுள்ள மிருகங்களோடு வெளியில் பயிர்களுக்கிடையில் வாழட்டும்.

  11. அவனுடைய மனம் மாற்றப்பட்டு மனித மனமாயிராமல் போகட்டும். ஏழு காலங்கள் அவனைக் கடந்துசெல்லும்வரை மிருகத்தின் மனம் அவனுக்குக் கொடுக்கப்படட்டும்.

  12. “ ‘அந்த தீர்மானம் தூதுவர்களாலும் அந்தத் தீர்ப்பு பரிசுத்தராலும் அறிவிக்கப்படுகிறது. மகா உன்னதமானவரே பூமியில் மனிதருடைய அரசுகளுக்கு மேலாக ஆளுபவர் என்பதையும், அவர் தாம் விரும்புகிறவர்களுக்கு அரசுகளைக் கொடுப்பவர் என்பதையும், அவற்றிற்கு மேலாக மனிதரில் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களை நியமித்திருப்பவர் என்பதையும், உலகில் வாழ்வோர் எல்லோரும் அறிந்துகொள்ளும்படியே அந்தத் தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.’

  13. “அரசனான நேபுகாத்நேச்சாராகிய நான் கண்ட கனவு இதுவே. பெல்தெஷாத்சாரே இப்பொழுது இதன் விளக்கத்தை நீ எனக்குச் சொல். ஏனெனில் என் அரசிலுள்ள ஞானிகள் எவராலும் இதை எனக்கு விளக்கிச் சொல்ல முடியவில்லை. ஆனால் உன்னால் முடியும். ஏனெனில் பரிசுத்த தெய்வங்களின் ஆவி உனக்குள் இருக்கிறது என்றான்.”

  14. அப்பொழுது பெல்தெஷாத்சார் என அழைக்கப்படும் தானியேல், சிறிது நேரம் மிகவும் குழப்பமடைந்து நின்றான். அவனுடைய சிந்தனைகள் அவனுக்குத் திகிலைக் கொடுத்தது. அதைக்கண்ட அரசன், “பெல்தெஷாத்சாரே, இக்கனவினாலோ, அதன் விளக்கத்தினாலோ நீ கலங்கவேண்டாம் என்றான்.” அதற்கு பெல்தெஷாத்சார், “என் தலைவனே இக்கனவு உமது பகைவர்களுக்கும், அதன் விளக்கம் உமது எதிரிகளுக்கும் பலித்திருந்தால் எவ்வளவு நலமாயிருக்குமே!

  15. நீர் ஒரு மரத்தைக் கண்டீரே; அது விசாலமானதாயும், வலுவுள்ளதாயும் வளர்ந்தது. அதன் நுனிக்கிளை உலகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் காணக்கூடியதாய் ஆகாயத்தைத் தொட்டது.

  16. அதோடு இலைகள் அழகானதாயும், அதில் பழங்கள் நிறைந்தும் காணப்பட்டது. அவை எல்லோருக்கும் போதுமான உணவாயும் இருந்தன. வெளியின் மிருகங்களுக்கு அம்மரம் புகலிடம் கொடுத்தது. அதன் கிளைகளில் ஆகாயத்துப் பறவைகள் கூடுகட்ட இடமும் இருந்தது.

  17. அரசே! நீரே அந்த மரம். நீர் பெரியவராயும், வல்லமையுடையவராயும் ஆகியிருக்கிறீர். உமது மேன்மை ஆகாயத்தைத் தொடும் வரைக்கும் வளர்ந்திருக்கிறது. உம்முடைய ஆளுகை பூமியின் தூரமான பகுதி வரைக்கும் விரிவடைந்திருக்கிறது.

  18. “அரசே! பரலோகத்திலிருந்து பரிசுத்த தூதுவன் ஒருவன் இறங்கி வருவதையும் கண்டீர். அவன், ‘இந்த மரத்தை வெட்டி வீழ்த்தி அழித்துப்போடுங்கள்; ஆனால் அதன் அடிமரத்தை இரும்பினாலும், வெண்கலத்தினாலும் கட்டி, புற்தரையில் இருக்கும்படி விடுங்கள். அதன் வேர்களைத் தரையில் விட்டுவிடுங்கள். அவன் ஆகாயத்துப் பனியில் நனையட்டும். அப்படி ஏழு காலங்கள் கடந்துபோகும் வரைக்கும் காட்டு மிருகங்களைப்போல் வாழட்டும் என்றும் சொல்லக்கேட்டீரே.’

  19. “அரசே, விளக்கம் இதுவே; அரசனாகிய என் தலைவருக்கு எதிராக மகா உன்னதமானவர் பிறப்பித்த கட்டளை இதுவே:

  20. நீர் மக்கள் மத்தியிலிருந்து துரத்தப்பட்டு, காட்டு மிருகங்களோடு வாழ்வீர். ஆகாயத்துப் பனியில் நனைந்து மாட்டைப்போல் புல்லைத் தின்பீர். மகா உன்னதமானவர் மனிதனுடைய அரசுகளின்மேல் ஆளுபவர் என்பதையும், அவர் விரும்பியவனுக்கே அதைக் கொடுப்பார் என்பதையும் நீர் ஏற்றுக்கொள்ளும்வரைக்கும் ஏழு காலங்கள் உம்மைக் கடந்துபோகும்.

  21. ஆயினும், ‘வேர்களோடு அடிமரத்தை விட்டு வை’ என்ற கட்டளையின் விளக்கம் இதுவே: பரலோகமே ஆளுகை செய்கிறது என்பதை நீர் ஏற்றுக்கொள்ளும்போது, உமது அரசு உமக்கே திரும்பிக் கொடுக்கப்படும்.

  22. ஆகையால் அரசே, தயவுசெய்து நான் சொல்லும் ஆலோசனையைக் கேளும். நியாயமானவற்றைச் செய்து உமது பாவங்களையும், ஒடுக்கப்பட்டோருக்கு இரக்கம் காட்டி உமது கொடுமைகளையும் அகற்றிவிடும். அதனால் ஒருவேளை உமது வளமான வாழ்வு நீடிக்கலாம் என்றான்.”

  23. அவர்கள் திராட்சை இரசத்தைக் குடித்துக் கொண்டிருக்கையில் தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மரம், கல் ஆகியவற்றாலான தெய்வங்களைப் புகழ்ந்தார்கள்.

  24. திடீரென, அரண்மனையின் குத்துவிளக்கின் அருகே மனித கைவிரல்கள் தோன்றி, சுவர்களில் மேல்பூச்சில் எழுதின. அந்தக் கை எழுதுவதை பார்த்துக்கொண்டிருந்த அரசனின்

  25. முகம் பயத்தினால் வேறுபட்டது. அவன் மிகவும் பயந்ததினால், முழங்கால்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. கால்களும் வலுவிழந்து போயின.