Select Readings பற்றிய பைபிள் வசனங்கள்: Christ's kingdom foreshadowed
Christ's kingdom foreshadowed பற்றிய வசனங்கள்
பாலைவனமும் வறண்ட நிலமும் மகிழும். வனாந்திரம் மகிழ்ந்து பூக்கும். அது லீலி பூப்பதுபோல் பூக்கும்.
அது வளமாய் வளர்ந்து மகிழ்ச்சியுடன் ஆனந்த சத்தமிடும். லெபனோனின் மகிமையும், கர்மேல், சாரோனின் சிறப்பும் அதற்குக் கொடுக்கப்படும். யெகோவாவின் மகிமையையும், நமது இறைவனின் மகத்துவத்தையும் காண்பார்கள்.
தளர்ந்த கைகளைப் பலப்படுத்துங்கள், தள்ளாடும் முழங்கால்களைத் திடப்படுத்துங்கள்.
இருதயத்தில் பதற்றமுள்ளோருக்கு, “திடன்கொள்ளுங்கள், பயப்படாதிருங்கள்; இதோ, உங்கள் இறைவன் உங்கள் பகைவரை பழிதீர்க்கவும், பதிலளிக்கவும் வருவார், அவர் வந்து உங்களை விடுவிப்பார்” என்று சொல்லுங்கள்.
அப்பொழுது குருடரின் கண்கள் பார்வை பெறும், செவிடரின் காதுகளும் திறக்கப்படும்.
முடவன் மானைப்போல் துள்ளுவான், ஊமையின் நாவும் ஆனந்த சத்தமிடும்; வனாந்திரத்திலிருந்து தண்ணீரும், பாலைவனத்திலிருந்து நீரோடைகளும் பாயும்.
சுடுமணல் நீர்த் தடாகமாகும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாய் பொங்கிவரும். நரிகள் தங்கும் இடங்களில் புல்லும், கோரையும், நாணலும் வளர்ந்து நிற்கும்.
அங்கே பிரதான வீதி ஒன்றிருக்கும், அது பரிசுத்த வழி எனப்படும். அசுத்தர் அதன் வழியே கடந்து செல்லமாட்டார்கள். இறைவனுடைய வழியில் நடப்பவர்களுக்கென்றே அது இருக்கும். கொடிய மூடர் அதில் திரியமாட்டார்கள்.
அங்கு சிங்கம் இருப்பதில்லை; எந்தவொரு கொடிய மிருகமாவது அங்கே செல்வதில்லை, அங்கே காணப்படுவதுமில்லை. மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள்.
யெகோவாவினால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி வருவார்கள். அவர்கள் பாடலுடன் சீயோனுக்குள் செல்வார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்களுடைய தலையின்மேலிருக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அடைவார்கள், துக்கமும் பெருமூச்சும் பறந்தோடிவிடும்.