God
God பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
யெகோவாவே, நீர் ஏன் எங்களை உமது வழிகளிலிருந்து விலகச் செய்கிறீர்? உமக்குப் பயபக்தியாயிராதபடி ஏன் எங்கள் இருதயங்களைக் கடினப்படுத்துகிறீர்? உமது உரிமையாயிருக்கும் கோத்திரங்களான உமது ஊழியரின் நிமித்தம் திரும்பி வாரும்.
உமது மக்கள் உமது பரிசுத்த இடத்தைச் சிறிது காலமே சுதந்தரித்திருந்தார்கள்; ஆனால் இப்பொழுதோ எங்கள் பகைவர்கள் உமது பரிசுத்த இடத்தை மிதித்து அழித்துவிட்டார்கள்.
பூர்வகாலமுதல் நாங்கள் உம்முடையவர்களே; ஆனால் நாங்களோ ஒருபோதும் உம்மால் ஆட்சி செய்யப்படாதவர்கள் போலவும், உமது பெயரால் ஒருபோதும் அழைக்கப்படாதவர்கள் போலவும் இருக்கிறோம்.
நீர் வானங்களைப் பிரித்துக் கீழே வாரும், அப்பொழுது நாடுகள் உமக்கு முன்பாக நடுங்கும்!
விறகுகளை நெருப்பு எரிக்கும்போது அது தண்ணீரைக் கொதிக்கச் செய்யும். அதுபோல் நீர் இறங்கி உமது பகைவர் உமது பெயரை அறிந்துகொள்ளச் செய்யும். நாடுகளை உமக்கு முன்பாக அதிரச்செய்யும்.
ஏனெனில் பண்டைய நாட்களில் நாங்கள் எதிர்பாராத அச்சுறுத்தும் செயல்களை நீர் செய்தீர், நீர் வந்தபோது மலைகள் உமக்கு முன்பாக நடுங்கின.
உமக்குக் காத்திருப்போருக்காகச் செயலாற்றும் இறைவனைப்போன்ற, வேறு ஒருவரை ஆதிமுதல் ஒருவரும் கேள்விப்பட்டதுமில்லை, எந்த ஒரு கண்ணும் கண்டதுமில்லை, எந்த ஒரு செவியும் கேட்டதுமில்லை.
உமது வழிகளை நினைவுகூர்ந்து மகிழ்ச்சியுடன் சரியானதைச் செய்வோருக்கு நீர் உதவிசெய்ய வருகிறவர். ஆனால் நாங்கள் தொடர்ந்து உமக்கெதிராகப் பாவம் செய்தபோது, நீர் கோபங்கொண்டீர். அப்படியானால் எப்படி நாம் காப்பாற்றப்படுவோம்?
உமது பெயரைச்சொல்லிக் கூப்பிடுவோரோ, உம்மைப் பற்றிப்பிடிக்க முயற்சிக்கிறவரோ ஒருவருமில்லை; ஏனெனில், நீர் உம்முடைய முகத்தை எங்களிடமிருந்து மறைத்து, எங்கள் பாவங்களினிமித்தம் எங்களை அழிந்துபோகவிட்டீர்.
ஆயினும் யெகோவாவே, நீரே எங்கள் தகப்பன். நாங்கள் களிமண், நீர் குயவன்; நாங்களெல்லோரும் உமது கரத்தின் வேலைப்பாடு.
யெகோவாவே, எங்களுடன் அளவுக்கதிகமாக கோபங்கொள்ள வேண்டாம்; எங்கள் பாவங்களை என்றென்றும் நினைவுகூரவும் வேண்டாம். உமது மக்களாகிய எங்கள் அனைவரையும் நோக்கிப்பாரும்.
யெகோவாவே, இவற்றுக்குப் பின்னும் நீர் ஒன்றுமே செய்யாதிருப்பீரோ? நீர் மவுனமாயிருந்து அளவுக்கதிகமாக எங்களைத் தண்டிக்கப் போகிறீரோ?
“என்னைப்பற்றி விசாரிக்காதவர்களுக்கு என்னை நான் வெளிப்படுத்தினேன். என்னைத் தேடாதவர்கள் என்னைக் கண்டுகொண்டார்கள். என் பெயரைச் சொல்லி மன்றாடாத மக்களிடம், ‘இதோ நான், இதோ நான்’ என்று சொன்னேன்.
நான் பிடிவாதமான மக்களுக்கு நாள்முழுவதும் என் கைகளை நீட்டினேன். அவர்கள் தமது கற்பனைகளையே பின்பற்றி, நலமற்ற வழியில் நடக்கிறவர்கள்.
அவர்கள் தோட்டங்களில் பலிசெலுத்தி, தங்கள் செங்கல் பீடங்களில் தூபம் எரித்து, தொடர்ந்து என்னை என் முகத்துக்கு முன்பாகவே கோபமூட்டுகிறார்கள்.
அவர்கள் ஒருவருக்கொருவர், ‘தள்ளி நில்லுங்கள்; எனக்கு அருகே வராதீர்கள்; ஏனெனில் நான் உங்களிலும் மிகத் தூய்மையானவன்’ என்கிறார்கள். இப்படிப்பட்ட மக்கள் எனது நாசியின் துவாரங்களில் புகையாயும் நாள்முழுவதும் எரிந்துகொண்டிருக்கும் நெருப்பாயும் இருக்கிறார்கள்.
“பாருங்கள், அது என்முன் எழுதப்பட்டிருக்கிறது: நான் மவுனமாய் இருக்கமாட்டேன், முழுவதுமாக பதில் செய்வேன்; அவர்களுடைய மடியில் அதைத் திருப்பிக் கொட்டுவேன்.
உங்களுடைய பாவங்களுக்கும், உங்கள் முற்பிதாக்களின் பாவங்களுக்கும் பதில் செய்வேன்” என்று யெகோவா சொல்கிறார். “அவர்கள் மலைகளின்மேல் பலிகளை எரித்து, குன்றுகளின்மேல் என்னை எதிர்த்து நின்றார்கள். அவர்களின் முந்திய செயல்களுக்கான பலனை முழுமையாக அவர்களின் மடியில் அளந்துகொடுப்பேன்.”
யெகோவா சொல்வது இதுவே: “திராட்சைக் குலையில் சாறு இருக்கையில், ‘அதை அழிக்காதே, அதில் இன்னும் பலன் உண்டு’ என்று மனிதர் சொல்வார்களல்லவா? அதுபோல, என் ஊழியரின் நிமித்தம் நான் இப்படிச் செய்வேன். அவர்கள் எல்லோரையும் அழிக்கமாட்டேன்.
யாக்கோபிலிருந்து சந்ததிகளையும், யூதாவிலிருந்து என் மலையை சுதந்தரிப்பவர்களையும் கொண்டுவருவேன்; நான் தெரிந்துகொண்ட மக்கள் அதை உரிமையாக்கிக்கொள்வார்கள், எனது ஊழியர்கள் அங்கே வசிப்பார்கள்.
என்னைத் தேடும் என் மக்களுக்கு சாரோன் ஆட்டு மந்தைகளின் மேய்ச்சலிடமாகவும், ஆகோர் பள்ளத்தாக்கும் மாட்டு மந்தைகளின் தொழுவமாகவும் இருக்கும்.
“நீங்களோ யெகோவாவைவிட்டு, என் பரிசுத்த மலையை மறந்து, காத் என்னும் தெய்வத்துக்குப் பந்தியை ஆயத்தம் செய்து, மேனி தெய்வத்துக்கு திராட்சை இரசத்தைக் கிண்ணங்களில் நிறைக்கிறீர்கள்.
உங்களை நான் வாளுக்கு இரையாக்குவேன், நீங்கள் எல்லோரும் கொல்லப்படுவதற்கு குனிவீர்கள். ஏனெனில் நான் கூப்பிட்டேன், நீங்கள் பதிலளிக்கவில்லை; நான் பேசினேன், நீங்கள் கேட்கவில்லை. எனது பார்வையில் தீமையைச் செய்து நான் விரும்பாதவற்றைத் தெரிந்துகொண்டீர்கள்.”
ஆகையால் ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே: “எனது ஊழியர்கள் சாப்பிடுவார்கள், நீங்களோ பசியோடிருப்பீர்கள்; எனது ஊழியர்கள் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; எனது ஊழியர்கள் மகிழ்ச்சியாயிருப்பார்கள், நீங்களோ வெட்கத்திற்குள்ளாவீர்கள்.
எனது ஊழியர்கள் உள்ளத்தின் மகிழ்ச்சியுடன் பாடுவார்கள்; நீங்களோ இதய வேதனையால் கதறி அழுவீர்கள்; உள்ளமுடைந்தவர்களாய் புலம்புவீர்கள்.