உள்ளடக்கத்திற்குச் செல்க

ஏசாயா34

உலகளாவிய தீர்ப்புக்குச் சாட்சியாக அழைப்பு

1
நாடுகளே, நீங்கள் அருகில் வந்து கேளுங்கள்; மக்கள் கூட்டங்களே, நீங்கள் கவனியுங்கள். பூமியும் அதிலுள்ள யாவும் கேட்கட்டும், உலகமும் அதிலிருந்து வரும் அனைத்தும் கேட்கட்டும்.
2
யெகோவா எல்லா நாடுகளோடும் கோபமாயிருக்கிறார்; அவருடைய கோபம் அவர்களுடைய எல்லா இராணுவத்தின்மேலும் இருக்கிறது. அவர் அவர்களை முற்றிலும் அழிப்பார்; அவர் அவர்களைக் கொலைக்கு ஒப்புக்கொடுப்பார்.
3
அவர்களில் கொலைசெய்யப்பட்டவர்கள் வெளியே எறியப்படுவார்கள், இறந்தவர்களின் உடல்கள் துர்நாற்றம் வீசும்; மலைகள் அவர்களுடைய இரத்தத்தினால் ஊறியிருக்கும்.
4
வானத்து நட்சத்திரங்கள் அனைத்தும் இல்லாமற்போகும்; ஆகாயம் ஒரு சுருளைப்போல் சுருட்டப்படும். வானசேனை அனைத்தும் திராட்சைக் கொடியிலிருந்து வாடிய இலைகள் உதிர்வதுபோலவும், சூம்பிப்போன காய்கள் அத்திமரத்திலிருந்து விழுவதுபோலவும் விழும்.

ஏதோமின்மீது குவியும் தீர்ப்பு

5
எனது வாள் தன் நிறைவை வானங்களில் குடித்திருக்கிறது; இதோ, நான் முழுவதும் அழித்துப்போட்ட ஏதோம் மக்களை நியாயந்தீர்ப்பதற்காக அது கீழே வருகிறது.
6
யெகோவாவின் வாள் இரத்தத்தில் தோய்ந்திருக்கிறது, அது கொழுப்பினால் மூடப்பட்டிருக்கிறது. அது செம்மறியாட்டுக் குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தாலும், செம்மறியாட்டுக் கடாக்களின் சிறுநீரகக் கொழுப்பினாலும் மூடப்பட்டிருக்கிறது. ஏனெனில் யெகோவா போஸ்றா பட்டணத்தில் ஒரு பலியையும், ஏதோமில் ஒரு வதையையும் நியமித்திருக்கிறார்.
7
காளைக் கன்றுகளும், பெரும் எருதுகளுமாக காட்டெருதுகள் அவைகளுடன் விழும். அவர்களுடைய நாடு இரத்தத்தில் தோய்ந்திருக்கும், புழுதியும் கொழுப்பில் ஊறியிருக்கும்.
8
ஏனெனில் யெகோவா பழிவாங்கும் நாளொன்றை வைத்திருக்கிறார்; சீயோனின் வழக்கில் நீதி வழங்குவதற்காக ஒரு வருடத்தை வைத்திருக்கிறார்.

தேசத்தின் நித்தியப் பாழாக்கம்

9
ஏதோமின் நீரோடைகள் நிலக்கீலாக மாறும், நிலத்தின் புழுதி எரியும் கந்தகமாகவும், அதன் நிலம் எரியும் கீலாகவும் மாறும்.
10
அது இரவிலும் பகலிலும் தணிக்க முடியாதபடி இருக்கும்; அதன் புகை என்றென்றும் புகைந்துகொண்டே இருக்கும். தலைமுறை தலைமுறையாக அது பாழடைந்து கிடக்கும், மீண்டும் அதன் ஊடாக யாரும் போகமாட்டார்கள்.
11
பாலைவன ஆந்தையும் அலறும் ஆந்தையும் அதைத் தங்கள் உடைமை ஆக்கிக்கொள்ளும்; பெரிய ஆந்தையும், காகமும் தமது கூடுகளை அங்கு அமைக்கும். இறைவன் ஏதோமுக்கு மேலாக குழப்பத்தின் அளவுகோலையும், அழிவின் தூக்கு நூலையும் நீட்டிப் பிடிப்பார்.
12
உயர்குடி மக்களுக்கு அரசு எனச் சொல்லிக்கொள்ள அங்கு ஒன்றுமே இராது; இளவரசர்கள் அனைவரும் இல்லாமல் போவார்கள்.
13
அதனுடைய அரண்செய்யப்பட்ட பட்டணங்களின்மேல் முட்செடிகள் படரும்; காஞ்சொறிகளும் கள்ளிச்செடிகளும் அதன் கோட்டைகளில் படரும். அது நரிகளுக்குத் தங்குமிடமும் ஆந்தைகளுக்கு குடியிருப்புமாகும்.
14
பாலைவன பிராணிகளும், கழுதைப்புலிகளுடன் ஒன்றுசேரும்; காட்டாடுகளும் ஒன்றையொன்று பார்த்துக் கத்தும். இரவுப் பிராணிகளும் அங்கு இளைப்பாறி தங்களுக்குத் தங்கும் இடங்களைத் தேடும்.
15
ஆந்தைகள் அங்கே கூடுகட்டி, முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து, அவைகளைத் தமது சிறகுகளின் நிழலில் பாதுகாக்கும்; வல்லூறுகளும் தத்தம் துணையுடன் அங்கே வந்துசேரும்.

தேவனுடைய வார்த்தையின் நிச்சயம்

16
யெகோவாவின் புத்தகச்சுருளை தேடி வாசியுங்கள்: இவற்றில் ஒன்றாவது தவறிப்போகாது, ஒன்றாவது தனக்குத் துணையில்லாமல் இராது; யெகோவாவின் வாயே இந்தக் கட்டளையைக் கொடுத்தது, அவரின் ஆவியானவர் இவற்றை ஒன்றுசேர்ப்பார்.
17
அவற்றிற்குரிய பாகங்களை அவரே பங்கிடுகிறார்; அவருடைய கரமே அவற்றை அளவுகளின்படி பகிர்ந்து கொடுக்கின்றன. அவை என்றென்றைக்கும் அதைத் தங்கள் சொந்தமாக்கி, தலைமுறை தலைமுறையாக அங்கே குடியிருக்கும்.
Use arrow keys to navigate
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options