எண்ணாகமம் 32:16-27
16
அப்பொழுது அவர்கள் அவனிடம் வந்து, “நாங்கள் இங்கே எங்கள் வளர்ப்பு மிருகங்களுக்குத் தொழுவங்களை அமைத்து, எங்கள் பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும் பட்டணங்களையும் கட்ட விரும்புகிறோம்.
17
ஆனால் எங்கள் மக்களான இஸ்ரயேலரை அவர்களுடைய நாட்டிற்குக் கொண்டுசெல்லும் வரையும், நாங்கள் ஆயுதம் தாங்கி அவர்களுக்கு முன்னே போக ஆயத்தமாயிருக்கிறோம். அதேநேரம் எங்கள் பெண்களும், பிள்ளைகளும் அரணான பட்டணங்களில் வாழட்டும். அப்பொழுது இந்நாட்டு குடிகளிடமிருந்து அவர்கள் பாதுகாப்பாயிருப்பார்கள்.
18
இஸ்ரயேலன் ஒவ்வொருவனும் தன்தன் உரிமைச்சொத்தைப் பெறும்வரை, நாங்கள் எங்கள் வீடுகளுக்குத் திரும்பமாட்டோம்.
19
யோர்தானின் கிழக்குப் பக்கத்தில் எங்களுக்குச் சொத்துரிமை கிடைத்திருப்பதனால், நாங்கள் யோர்தானின் மறுபக்கத்தில் உரிமைச்சொத்து எதையும் பெற்றுக்கொள்ளவும்மாட்டோம்” என்றார்கள்.
20
அதற்கு மோசே, “நீங்கள் இதைச் செய்வீர்களானால்: நீங்கள் யெகோவா முன்னிலையில் யுத்த ஆயுதம் தரித்து,
21
அவர் தமது எதிரிகளைத் தமக்கு முன்பாகத் துரத்திவிடும்வரை யெகோவாவுக்கு முன்பாக நீங்கள் ஆயுதம் தாங்கி யோர்தானைக் கடந்துபோகவேண்டும்.
22
அப்படிச் செய்வீர்களானால் யெகோவாவுக்கு முன்பாக நாடு கீழ்ப்படுத்தப்படும்போது, நீங்கள் திரும்பிப்போகலாம். யெகோவாவுக்கும் இஸ்ரயேலருக்கும் வாக்குக்கொடுத்த உங்கள் கடமையிலிருந்தும் நீங்கள் நீங்கலாயிருப்பீர்கள். இந்த நாடும் யெகோவா முன்னிலையில் உங்கள் உடைமையாகும்.
23
“ஆனால் அவ்வாறு நீங்கள் செய்யத்தவறினால், நீங்கள் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்கிறவர்களாயிருப்பீர்கள்; உங்கள் பாவமே உங்களைக் கண்டுபிடிக்கும் என்பதும் உங்களுக்கு நிச்சயமாய்த் தெரிந்திருக்கட்டும்.
24
நீங்கள் உங்கள் பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும் பட்டணங்களைக்கட்டுங்கள். உங்கள் மந்தைகளுக்கு தொழுவங்களையும் அமையுங்கள். ஆனால், நீங்கள் வாக்குக்கொடுத்தபடியே செய்யுங்கள்” என்றான்.
25
அப்பொழுது காத்தியரும், ரூபனியரும் மோசேயிடம், “உமது அடியாராகிய நாங்கள் எங்கள் தலைவனாகிய நீர் கட்டளையிட்டபடியே செய்வோம்.
26
எங்கள் பிள்ளைகளும், மனைவியரும், எங்கள் ஆட்டு மந்தைகளும், மாட்டு மந்தைகளும் இங்கே கீலேயாத்தின் பட்டணங்களிலேயே இருக்கட்டும்.
27
உமது அடியாராகிய நாங்களோ ஒவ்வொருவரும் ஆயுதம் தாங்கி, எங்கள் தலைவனாகிய நீர் சொன்னபடியே யெகோவாவுக்கு முன்பாக யுத்தத்திற்குக் கடந்துபோவோம்” என்றார்கள்.
Settings