ஆதியாகமம் 42:18-28
18
மூன்றாம் நாள் யோசேப்பு தன் சகோதரரிடம், “நான் இறைவனுக்குப் பயப்படுகிறவன், நீங்கள் இதைச் செய்யுங்கள்; அப்பொழுது உயிர் வாழ்வீர்கள்.
19
நீங்கள் உண்மையானவர்களானால், உங்கள் சகோதரர்களில் ஒருவன் இங்கே சிறையில் இருக்கட்டும், மற்றவர்கள் பட்டினியாய் இருக்கும் உங்கள் குடும்பத்துக்குத் தானியத்தைக் கொண்டுபோங்கள்.
20
உங்கள் வார்த்தை நிரூபிக்கப்படும்படியும், நீங்கள் சாகாமல் இருக்கும்படியும், உங்களுடைய இளைய சகோதரனை என்னிடம் கொண்டுவர வேண்டும்” என்றான். அவர்கள் அவ்வாறு செய்யும்படி புறப்பட்டார்கள்.
21
பின்பு அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, “நிச்சயமாய் நாம் நம்முடைய சகோதரனுக்குச் செய்த தீமைக்காகவே இப்பொழுது தண்டிக்கப்படுகிறோம். அவன் தன் உயிருக்காக மன்றாடி, துன்பப்பட்டதைக் கண்டும், நாம் அவனுக்குச் செவிகொடுக்கவில்லை. அதனால்தான் இத்துன்பம் நமக்கு நேரிட்டது” என்று சொல்லிக்கொண்டார்கள்.
22
அப்பொழுது ரூபன், “அச்சிறுவனுக்கு விரோதமாய்ப் பாவம்செய்ய வேண்டாமென நான் சொல்லவில்லையா? ஆனால் நீங்கள் கேட்கவில்லை! இப்பொழுது அவனுடைய இரத்தத்திற்கு நாம் கணக்குக் கொடுத்தேயாக வேண்டும்” என்றான்.
23
யோசேப்பு மொழி பெயர்ப்பாளன் மூலம் பேசியதால், தாங்கள் அவ்வாறு பேசியது அவனுக்கு விளங்கும் என்பதை அவர்கள் உணரவில்லை.
24
யோசேப்பு அவர்களைவிட்டு அப்பாலே போய் அழத்தொடங்கினான். அதன்பின் திரும்பவும் வந்து, அவர்களுடன் பேசினான். அவன் அவர்களோடிருந்த சிமியோனைப் பிடித்து, மற்றச் சகோதரரின் முன்பாகக் கட்டுவித்தான்.
25
பின்பு யோசேப்பு அவர்களுடைய சாக்குகளில் தானியத்தை நிரப்பும்படியும், ஒவ்வொருவருடைய வெள்ளியையும் திரும்ப அவனவன் சாக்கில் வைக்கும்படியும், அவர்கள் பயணத்திற்குத் தேவையான உணவுகளைக் கொடுக்கும்படியும் கட்டளையிட்டான். அவ்வாறே செய்து முடிந்ததும்,
26
அவர்கள் தானியப் பொதிகளைத் தங்கள் கழுதைகளின்மேல் ஏற்றிக்கொண்டு, அங்கிருந்து புறப்பட்டார்கள்.
27
இரவுக்காக தங்கிய இடத்தில் அவர்களில் ஒருவன் கழுதைக்குத் தீனி போடுவதற்காகத் தன் சாக்கைத் திறந்தான், அப்பொழுது சாக்கின் வாயில் தன் வெள்ளிக்காசு இருப்பதைக் கண்டான்.
28
அவன் தன் சகோதரரிடம், “என் வெள்ளிக்காசு திருப்பிக் கொடுக்கப்பட்டிருக்கிறது, இதோ என் சாக்கில் அது இருக்கிறது பாருங்கள்” என்றான். அவர்கள் பயந்து மனங்கலங்கி, ஒருவரையொருவர் நடுக்கத்துடன் பார்த்து, “இறைவன் எங்களுக்குச் செய்திருப்பது என்ன?” என்றார்கள்.
Settings