உபாகமம் 2:24-37
24
“இப்பொழுது புறப்பட்டு, அர்னோன் பள்ளத்தாக்கைக் கடந்துசெல்லுங்கள். பாருங்கள், எமோரியனான எஸ்போனின் அரசன் சீகோனையும், அவனுடைய நாட்டையும் உங்கள் கையில் கொடுத்திருக்கிறேன். நீங்கள் போய் அந்த நாட்டை உரிமையாக்கும்படி அவனுடன் சண்டையிடுங்கள்.
25
அந்த நாளிலேயே வானத்தின்கீழ் இருக்கும் எல்லா நாடுகள்மேலும் உங்களைப்பற்றிய திகிலையும், பயத்தையும் போடத் தொடங்குவேன். அவர்கள் உங்களைப்பற்றிய செய்திகளை அறிந்தவுடன் நடுங்கி, உங்களால் வேதனைப்படுவார்கள்” என்றார்.
26
நான் கெதெமோத் பாலைவனத்திலிருந்து எஸ்போனிலிருந்த சீகோன் அரசனுக்குச் சமாதான செய்தி சொல்லும்படி தூதுவர்களை அனுப்பிச் சொன்னதாவது:
27
“உங்களுடைய நாட்டை கடந்துசெல்ல எங்களை அனுமதியுங்கள். பிரதான வீதியிலேயே நாங்கள் தங்குவோம்; வலதுபுறமோ, இடதுபுறமோ திரும்பமாட்டோம்.
28
நாங்கள் சாப்பிடுவதற்காக உணவையும், குடிக்கத் தண்ணீரையும் விலைக்குக் கொடுங்கள். வெள்ளிப்பணத்தை அதன் விலையாகச் செலுத்துவோம். நாங்கள் கால்நடையாய் கடந்துபோகுமட்டும் அனுமதியுங்கள்.
29
நாங்கள் யோர்தான் நதியைக் கடந்து எங்கள் இறைவனாகிய யெகோவா எங்களுக்குக் கொடுக்கும் நாட்டிற்குள் போகும்வரை, சேயீரில் வாழ்கிற ஏசாவின் சந்ததியும் ஆர் என்னும் பிரதேசத்தில் வசிக்கும் மோவாபியரும் எங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யுங்கள்”
30
ஆனால் எஸ்போனின் அரசனாகிய சீகோன் தன் நாட்டைக் கடந்துசெல்ல நமக்கு அனுமதி கொடுக்க மறுத்துவிட்டான். ஏனென்றால் உங்கள் இறைவனாகிய யெகோவா இப்பொழுது செய்திருக்கிறதுபோல், அவனை உங்கள் கைகளில் கொடுக்கும்படி அவனுடைய மனதைப் பிடிவாதமாகவும், அவனுடைய இருதயத்தைக் கடினமாகவும் ஆக்கினார்.
31
பின்பு யெகோவா என்னிடம் சொன்னதாவது: “பார், நான் சீகோனையும், அவனுடைய நாட்டையும் உன்னிடத்தில் ஒப்புவிக்கத் தொடங்கிவிட்டேன். இப்பொழுது அவர்களைக் கைப்பற்றத் தொடங்கி அவனுடைய நாட்டை உரிமையாக்கிக்கொள்ளுங்கள்” என்றார்.
32
சீகோனும், அவனுடைய எல்லாப் படைகளும் யாகாசில் நம்முடன் யுத்தம் செய்ய எதிர்கொண்டு வந்தபோது,
33
நம்முடைய இறைவனாகிய யெகோவா அவனை நம்மிடம் ஒப்படைத்தார். நாம் அவனை அவனுடைய மகன்களுடனும், அனைத்துப் படைகளுடனும் முறியடித்தோம்.
34
நாம் அக்காலத்திலேயே பட்டணங்கள் யாவற்றையும் கைப்பற்றி, ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும் முழுவதும் அழித்தோம்; ஒருவரையும் தப்பவிடவில்லை.
35
அங்கிருந்த வளர்ப்பு மிருகங்களையும், நாம் கைப்பற்றியிருந்த பட்டணங்களிலிருந்து கொள்ளையிட்ட பொருட்களையும் நாம் நமக்காகக் கொண்டுவந்தோம்.
36
அர்னோன் பள்ளத்தாக்கின் அருகே உள்ள அரோயேரிலும், அப்பள்ளத்தாக்கிலிருந்த பட்டணத்திலுமிருந்து கீலேயாத்வரைக்கும் ஒரு பட்டணமாவது நாம் கைப்பற்றிக்கொள்ள முடியாத அளவு பலமுள்ளவையாய் இருக்கவில்லை. நமது இறைவனாகிய யெகோவா அவற்றையெல்லாம் நமக்குக் கொடுத்தார்.
37
நமது இறைவனாகிய யெகோவாவின் கட்டளைப்படியே அம்மோனியரின் நாட்டையும், யாப்போக்கு ஆற்றங்கரையிலுள்ள ஊர்களையும், மலைகளிலுள்ள பட்டணங்களையும் நீங்கள் பிடித்துக்கொள்ளவில்லை.
Settings