1 சாமுயேல் 20:1-23
1
அதன்பின் தாவீது ராமாவிலுள்ள நாயோதிலிருந்து தப்பி யோனத்தானிடம் போனான். அவன் யோனத்தானிடம், “நான் செய்தது என்ன? நான் செய்த குற்றம் என்ன? உமது தகப்பன் என்னைக் கொலைசெய்யத் தேடும்படி, நான் அவருக்கு என்ன பிழை செய்தேன்?” என்று கேட்டான்.
2
அதற்கு யோனத்தான், “ஒருபோதும் இல்லை. நீ சாகப் போவதில்லை. பார், எனது தகப்பன் சிறிதோ, பெரிதோ எதையும் எனக்குச் சொல்லாமல் செய்யமாட்டார். இதைமட்டும் ஏன் எனக்கு மறைக்கவேண்டும். அப்படியிருக்காது” என்று சொன்னான்.
3
அப்பொழுது தாவீது யோனத்தானிடம், “எனக்கு உனது கண்களில் தயவு கிடைத்திருக்கிறது என்பது உனது தகப்பனுக்கு நன்றாகத் தெரியும். அதனால் அவர், இது யோனத்தானுக்குத் தெரியவந்தால் அவன் மனம் வருந்துவான். அவனுக்குத் தெரியக்கூடாது என்று தனக்குள்ளே எண்ணிக் கொண்டிருக்கிறார். யெகோவா இருப்பதும், நீ வாழ்வதும் நிச்சயம்போல, மரணத்துக்கும், எனக்கும் ஒரு அடி தூரம் மட்டும் இருக்கிறதென்பதும் நிச்சயம்” என்று சத்தியம் செய்து சொன்னான்.
4
அப்பொழுது யோனத்தான் தாவீதிடம், “இப்பொழுது நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என நீ விரும்புகிறாயோ அதை நான் செய்வேன்” என்றான்.
5
அதற்குத் தாவீது யோனத்தானை நோக்கி, “நாளைக்கு அமாவாசைப் பண்டிகை. நான் அப்பொழுது அரசனுடன் பந்தியிலிருந்து சாப்பிடவேண்டும். ஆனால் நாளை மறுநாள் மாலைவரைக்கும் வயல்வெளியில் ஒளித்திருப்பதற்கு என்னைப் போகவிடு.
6
உனது தந்தை நான் அங்கு இல்லாததைக் கண்டு விசாரித்தால், நீ அவரிடம், ‘தாவீது தன் முழு வம்சத்தாருக்குமான வருடாந்த பலி செலுத்தப்படுவதற்குத் தன் ஊரான பெத்லெகேமுக்கு விரைவாகப் போக வேண்டுமென்று என்னிடம் ஆவலுடன் அனுமதி கேட்டான்’ என்று சொல்.
7
அதற்கு உனது தந்தை, ‘மிக நல்லது’ என்று பதிலளித்தால், உனது அடியவனுக்கு பாதுகாப்பு உண்டு. அவர் கோபமடைந்தால், அவர் எனக்குத் தீமைசெய்யத் தீர்மானித்திருக்கிறார் என்று அப்பொழுது நிச்சமாய் அறிந்துகொள்வாய்.
8
உன்னைப் பொறுத்தமட்டில் நீ யெகோவாவுக்குமுன் ஒரு உடன்படிக்கை செய்தபடியால், நீ உன் அடியவனுக்குத் தயவுகாட்ட வேண்டும். நான் குற்றவாளியானால் நீயே என்னைக் கொன்றுவிடு. ஏன் உனது தகப்பனிடம் என்னைக் கையளிக்க வேண்டும்” என்று கேட்டான்.
9
அதற்கு யோனத்தான் தாவீதிடம், “ஒருபோதும் இல்லை. எனது தகப்பன் உனக்குத் தீமைசெய்ய தீர்மானித்திருக்கிறாரென்பதை நான் சிறிதளவேனும் அறிந்திருந்தால் அதை உனக்குச் சொல்லாமல் இருப்பேனோ?” என்று கேட்டான்.
10
அதற்குத் தாவீது, “உனது தகப்பன் உனக்குக் கடுமையாகப் பதிலளித்தால், அதை யார் எனக்குச் சொல்வார்கள்?” என்று கேட்டான்.
11
அப்பொழுது யோனத்தான் தாவீதிடம், “நாங்கள் வெளியே வயலுக்குப் போவோம் வா” என்றான். அவர்கள் ஒன்றாய்ப் போனார்கள்.
12
அப்பொழுது யோனத்தான் தாவீதிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சாட்சியாக நான் சொல்வது என்னவென்றால், நாளை மறுநாள் இதே நேரத்தில் எனது தந்தையின் மனதை அறிந்துகொள்வேன். அவர் உன்மேல் நல்ல மனதுள்ளவராயிருந்தால், நான் உனக்கு ஆளனுப்பி தெரியப்படுத்த மாட்டேனா?
13
எனது தகப்பனார் உனக்குத் தீமைசெய்ய எண்ணம் கொண்டிருந்தும் அதை நான் உனக்கு அறிவித்து, உன்னை வெளியே பாதுகாப்பாக அனுப்பாவிட்டால், யெகோவா எவ்வளவு கடுமையாகவும் என்னைத் தண்டிக்கட்டும். யெகோவா என்னுடைய தகப்பனோடு இருந்ததுபோல உன்னோடும் இருப்பாராக.
14
நான் உயிரோடு இருக்கும்வரைக்கும், நான் கொல்லப்படாதபடி, யெகோவாவின் குன்றாத தயவைப் போல் எனக்கு நீயும் தயவுகாட்டுவாயாக.
15
நீ ஒருபோதும் என் குடும்பத்தினரிடமுள்ள உன்னுடைய தயவை எடுத்துப் போடாதே. தாவீதின் பகைவர்கள் அனைவரையும் பூமியிலிருந்து யெகோவா அழித்தாலும்கூட, நீ அப்படிச் செய்யாதே” என்று சொன்னான்.
16
இவ்வாறு யோனத்தான் தாவீதின் குடும்பத்தோடு உடன்படிக்கை செய்து, “யெகோவா தாவீதின் பகைவர்களிடமிருந்து கணக்குக் கேட்பாராக” என்றான்.
17
யோனத்தான் தன்னைப்போல தாவீதிலும் அன்பாயிருந்தான். அவனிடம் தனக்குள்ள அந்த அன்பின் நிமித்தம், தாவீதைத் திரும்பவும் அந்த ஆணையை உறுதிப்படுத்தும்படி செய்தான்.
18
அதன்பின் யோனத்தான் தாவீதிடம், “நாளைக்கு அமாவாசைப் பண்டிகை. பந்தியில் உன் இடம் வெறுமையாயிருப்பதால் நீ அங்கு இல்லாதது தெரியவரும்.
19
பிரச்சனை தொடங்கும்போது, நாளை மறுதினம் மாலை நேரத்தில், நீ மறைந்திருந்த இடத்திற்குப் போய் அங்கே ஏசேல் என்னும் கல்லருகில் காத்திரு.
20
அப்பொழுது நான் இலக்கை நோக்கி எய்துவது போல் மூன்று அம்புகளை அந்த கல்லின் அருகே எய்வேன்.
21
பின் நான் ஒரு சிறுவனை அனுப்பி, ‘நீ போய் அம்புகளை எடுத்து வா’ என்று சொல்வேன். நான் அவனிடம், ‘பார், அம்புகள் உனக்கு இந்தப் பக்கத்தில் இருக்கின்றன; அவற்றை இங்கே கொண்டுவா,’ என்று சொன்னால் நீ என்னிடம் வா. ஏனெனில் யெகோவா இருப்பது நிச்சயமெனில், நீ பாதுகாப்பாய் இருக்கிறாய் என்பதும், உனக்கு ஆபத்து இல்லை என்பதும் நிச்சயம்.
22
ஆனால் நான் சிறுவனிடம், ‘அம்புகள் உனக்கு அப்பால் இருக்கின்றன’ என்று சொன்னால் நீ போய்விடு. ஏனெனில் யெகோவா உன்னை வெளியே அனுப்பியிருக்கிறார்.
23
இப்பொழுது நீயும் நானும் பேசிக்கொண்டவற்றைப் பற்றி, யெகோவாவே உனக்கும் எனக்கும் இடையில் எப்பொழுதும் சாட்சி என்பதை நினைத்துக்கொள்” என்றான்.
Settings