வெளிப்படுத்தல்22
Listen to this chapter
0:00
0:00
1
பின்பு அந்தத் தூதன் ஜீவத்தண்ணீர் ஓடும் ஆற்றை எனக்குக் காட்டினான். அந்த ஆறு, பளிங்கைப்போல் தெளிவாய் இருந்தது. அது இறைவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உரிய அரியணையிலிருந்து ஓடிக்கொண்டிருந்தது.
2
அது அந்தப் பட்டணத்தின் பிரதான வீதியின் நடுவாக பாய்ந்து ஓடியது. அந்த ஆற்றின் இருபுறமும் ஜீவ மரம் நின்றது. அது மாதம் ஒரு முறையாக, பன்னிரண்டு முறை பழங்களைக் கொடுத்தது. அந்த மரத்தின் இலைகள், மக்களுக்கு சுகம் கொடுப்பதற்கானவை.
3
இனிமேல் எந்தச் சாபமும் இருக்காது. இறைவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கு உரிய அரியணை அந்த நகரத்தில் இருக்கும். அவருடைய ஊழியர் அவருக்குப் பணிசெய்வார்கள்.
4
அவர்கள் அவருடைய முகத்தைக் காண்பார்கள். அவருடைய பெயர் அவர்களுடைய நெற்றிகளில் எழுதப்பட்டிருக்கும்.
5
இனிமேல் இரவு இருக்காது. அவர்களுக்கு விளக்கின் வெளிச்சமோ, சூரிய வெளிச்சமோ தேவைப்படாது. ஏனெனில், இறைவனாகிய கர்த்தர் அவர்களுக்கு ஒளி கொடுப்பார். அவர்கள் என்றென்றுமாய் ஆட்சிசெய்வார்கள்.
6
அந்தத் இறைத்தூதன் என்னிடம், “இந்த வார்த்தைகள் நம்பத்தகுந்தவையும் உண்மையானவையுமாய் இருக்கின்றன. இறைவாக்கினரின் ஆவிகளுக்கு இறைவனாயிருக்கிற கர்த்தர், சீக்கிரமாய் நிகழவிருக்கும் காரியங்களைத் தம்முடைய ஊழியர்களுக்குக் காண்பிக்கும்படி, தமது தூதனை அனுப்பினார்” என்றான்.
7
“இதோ, நான் சீக்கிரமாய் வருகிறேன்! இந்தப் புத்தகத்திலுள்ள இறைவாக்கு வார்த்தைகளைக் கைக்கொள்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.”
8
யோவானாகிய நானே, இந்த வார்த்தைகளைக் கேட்டேன். இந்தக் காரியங்களைக் கண்டேன். நான் இவைகளைக் கண்டு, கேட்டபோது, இவற்றை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி, அவனுடைய பாதத்தில் விழுந்தேன்.
9
ஆனால் அவனோ என்னிடம், “இப்படிச் செய்யாதே! உன்னுடனும், உன் சகோதரர்களான இறைவாக்கினருடனும், இந்தப் புத்தகத்தின் வார்த்தைகளைக் கைக்கொள்ளுகிற எல்லோருடனும், நானும் உடன் ஊழியன். ஆகையால், இறைவனையே ஆராதனைசெய்” என்றான்.
10
பின்பு அவன் என்னிடம், “இந்தப் புத்தகத்தின் இறைவாக்கு வார்த்தைகளை மூடி முத்திரையிடாதே. ஏனெனில் காலம் நெருங்கிவிட்டது.
11
அநியாயம் செய்கிறவன் தொடர்ந்து அநியாயம் செய்யட்டும்; சீர்கெட்டு இருக்கிறவன், தொடர்ந்து சீர்கெட்டு இருக்கட்டும்; நியாயம் செய்கிறவன் தொடர்ந்து நியாயம் செய்யட்டும்; பரிசுத்தமாய் இருக்கிறவன் தொடர்ந்து பரிசுத்தமாய் இருக்கட்டும்.”
12
“இதோ, நான் வெகுவிரைவாய் வருகிறேன்! நான் கொடுக்கும் பரிசு என்னுடனே இருக்கிறது. ஒவ்வொருவனுக்கும், அவனுடைய செயலுக்கு ஏற்றபடியே, நான் பரிசு கொடுப்பேன்.
13
நானே அல்பாவும், ஒமேகாவும், முதலாவதானவரும் கடைசியானவரும், தொடக்கமும், முடிவுமாய் இருக்கிறேன்.
14
“தங்களுடைய ஆடைகளைத் துவைத்துக்கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கே, ஜீவ மரத்தின் பழத்தைச் சாப்பிடும் உரிமை உண்டு. வாசல்களின் வழியாக நகரத்திற்குள் செல்ல அவர்கள் உரிமைபெறுவார்கள்.
15
நகரத்திற்கு வெளியேயோ, நாய்களைப்போல் சீர்கெட்டவர்கள், மந்திரவித்தைக்காரர், முறைகேடான பாலுறவில் ஈடுபடுவோர், கொலைகாரர், சிலைகளை வணங்குவோர், பொய்யானவற்றை நேசித்து கைக்கொள்வோர் ஆகியோர் இருக்கிறார்கள்.
16
“இயேசுவாகிய நான் திருச்சபைகளுக்கான இந்தச் சாட்சியை கொடுக்கும்படி, என் தூதனை உன்னிடம் அனுப்பினேன். நானே தாவீதின் வேரும், சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாய் இருக்கிறேன்.”
17
ஆவியானவரும் மணமகளும், “வாரும்!” என்கிறார்கள். அதைக் கேட்கிறவனும், “வாரும்!” என்று சொல்லட்டும். தாகமாக இருக்கிற யாரும் வரட்டும்; விரும்புகிற யாரும் ஜீவத்தண்ணீரை இலவச நன்கொடையாகப் பெற்றுக்கொள்ளட்டும்.
18
இந்தப் புத்தகத்திலுள்ள இறைவாக்கு வார்த்தைகளைக் கேட்கும் ஒவ்வொருவருக்கும், நான் கொடுக்கும் எச்சரிக்கை: யாராவது இவற்றோடு எதையாவது சேர்த்தால், இறைவனும் இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட வாதைகளை அவனுக்குச் சேர்ப்பார்.
19
இந்த இறைவாக்குப் புத்தகத்திலிருந்து யாராவது எந்த வார்த்தைகளையாவது நீக்கிப்போட்டால், இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள ஜீவ மரத்திலும் பரிசுத்த நகரத்திலும் அவனுக்குள்ள பங்கை இறைவன் நீக்கிப்போடுவார்.
20
இந்தக் காரியங்களுக்கு சாட்சி கொடுக்கிறவர், “ஆம், நான் வெகுவிரைவாய் வருகிறேன்” என்கிறார். ஆமென். கர்த்தராகிய இயேசுவே வாரும்.
21
கர்த்தராகிய இயேசுவின் கிருபை இறைவனுடைய மக்களின்மேல் இருப்பதாக. ஆமென்.
Use ← → arrow keys to navigate
Settings
Reading Style
Typeface
Font Size px
Options
Study Note