உள்ளடக்கத்திற்குச் செல்க

Tribe Of Benjamin பற்றிய பைபிள் வசனங்கள்

107 வசனங்கள் · 35 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. யெகோவா பென்யமீனியரை இஸ்ரயேலருக்கு முன்பாக முறிடியத்தார். அன்று இருபத்தையாயிரத்து நூறு வாள் ஏந்தும் பென்யமீன் போர்வீரர்களை இஸ்ரயேல் வீரர்கள் வெட்டி வீழ்த்தினார்கள்.

  2. அப்பொழுது பென்யமீனியர் தாங்கள் போரில் தோற்கடிக்கப்பட்டதைக் கண்டார்கள். இஸ்ரயேலரோ கிபியாவுக்கு அருகில் பதுங்கியிருந்து தாக்குபவர்களில் நம்பிக்கை வைத்ததால், பென்யமீனியருக்கு முன்பாகச் சிதறுண்டு ஓடுவதுபோல் காண்பித்தார்கள்.

  3. அந்நேரத்தில் பதுங்கியிருந்து தாக்கும் வீரர்கள் மிக விரைவாக கிபியாவிற்குள் திடீரென போய், எங்கும் பரவி பட்டணம் முழுவதையும் வாளுக்கு இரையாக்கினார்கள்.

  4. இஸ்ரயேலின் மனிதர்கள் பதுங்கியிருந்து தாக்குபவர்களிடம், பட்டணத்திலிருந்து பெரிய புகை மேகத்தை எழும்பப்பண்ணும்படியும்,

  5. தாங்கள் அதைக் கண்டதும் ஓடுவதைவிட்டு திரும்பவும் அச்சண்டையில் ஈடுபடுவதாகவும் சொல்லியிருந்தார்கள். பென்யமீனியர் இஸ்ரயேல் மனிதரைத் தாக்கத் தொடங்கி, “நாம் முந்தின யுத்தத்தில் நடந்ததுபோலவே அவர்களைத் தோற்கடிக்கிறோம்” என்று சொல்லி இஸ்ரயேலில் முப்பது பேரை வெட்டிப்போட்டனர்.

  6. ஆனால் பட்டணத்திலிருந்து புகைத்திரள் மேலெழும்பியதை திரும்பிப் பார்த்த பென்யமீனியர் பட்டணம் முழுவதிலிருந்தும் புகை வானத்தை நோக்கிப் போவதைக் கண்டார்கள்.

  7. அவ்வேளையில் இஸ்ரயேலின் மனிதர்கள் பென்யமீனியரைத் தாக்குவதற்குத் திரும்பினார்கள். ஆகவே தங்களுக்கு பேராபத்து நேரிட்டதை பென்யமீனியர் கண்டு திகிலடைந்தார்கள்.

  8. எனவே அவர்கள் இஸ்ரயேலருக்கு முன்பாக பாலைவனத்திற்கு தப்பியோடினார்கள். ஆனால் அவர்களால் யுத்தத்திலிருந்து தப்பியோட முடியவில்லை. பட்டணத்திலிருந்து வெளியேவந்த இஸ்ரயேல் மனிதர்கள் அங்கே அவர்களை வெட்டி வீழ்த்தினார்கள்.

  9. இஸ்ரயேலர் பென்யமீனியரைச் சுற்றிவளைத்து, அவர்களைத் துரத்தி கிழக்குப் பக்கத்திலுள்ள கிபியாவின் சுற்றுப்புறத்திலே அவர்களை இலகுவாக அழித்துப்போட்டனர்.

  10. அவ்விடத்திலே பதினெட்டாயிரம் பென்யமீனியர் விழுந்து மடிந்தனர்; எல்லோரும் போர்வீரர்கள்.

  11. பென்யமீனியர் பாலைவனத்திலே ரிம்மோன் மலையை நோக்கித் தப்பியோட, வழியிலே இஸ்ரயேலர் ஐயாயிரம் பேரை வெட்டினர். மற்றவர்களை கீதோம்வரை பின்தொடர்ந்து போய், அவர்களிலும் இரண்டாயிரம் பேரை வெட்டிப்போட்டனர்.

  12. இவ்விதமாக அந்நாளில் இருபத்தையாயிரம் பென்யமீனிய வாள் ஏந்தும் வீரர்கள் மடிந்தனர். இவர்கள் எல்லோரும் திறமைமிக்க வீரர்கள்.

  13. ஆனால் அறுநூறு மனிதர் ரிம்மோன் காடுகளிலுள்ள மலைக்கு ஓடிப்போய் அங்கே நான்கு மாதங்கள் தங்கியிருந்தனர்.

  14. இஸ்ரயேல் மனிதர்கள் பென்யமீன் நாட்டிற்குத் திரும்பிச்சென்று, அங்கிருந்த மிருகங்கள் உட்பட தாங்கள் கண்ட எல்லாவற்றையும் வாளால் வெட்டினர். அவர்கள் வழியிலுள்ள பட்டணங்களுக்கெல்லாம் நெருப்பு வைத்தனர்.

  15. மேலும் இஸ்ரயேலர்கள் மிஸ்பாவிலே இருக்கும்போது: “நம்மில் ஒருவனும் தன்னுடைய மகளை பென்யமீனியருக்குத் திருமணம் செய்துகொடுக்கமாட்டோம்” என்று ஆணையிட்டிருந்தார்கள்.

  16. மக்கள் பெத்தேலுக்குச் சென்று, அன்று சாயங்காலம்வரை இறைவனுக்கு முன்பாக அமர்ந்திருந்து, உரத்த சத்தமாய் மனங்கசந்து அழுதனர்.

  17. “யெகோவாவே, இஸ்ரயேலின் இறைவனே, இஸ்ரயேலுக்கு ஏன் இப்படி நடந்தது? இன்று இஸ்ரயேலில் ஒரு கோத்திரத்தை இழக்க நேரிட்டது ஏன்?” என அவர்கள் புலம்பினார்கள்.

  18. மக்கள் அடுத்தநாள் அதிகாலையில் ஒரு பலிபீடத்தைக் கட்டித் தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தினார்கள்.

  19. அப்பொழுது இஸ்ரயேலர், “எங்கள் எல்லா கோத்திரங்களிலுமிருந்து யெகோவாமுன் ஒன்றுகூடி வரத் தவறினவர்கள் யார்?” என்று விசாரித்தார்கள். ஏனெனில் யெகோவா முன்பாக மிஸ்பாவுக்கு ஒன்றுகூடி வரத் தவறுகிற எவனாயினும் நிச்சயம் கொல்லப்படவேண்டும் என்று ஏற்கெனவே அவர்கள் ஒரு கடுமையான ஆணையிட்டிருந்தார்கள்.

  20. இப்பொழுது இஸ்ரயேலர், “இஸ்ரயேலில் இருந்து ஒரு கோத்திரம் இன்று அறுப்புண்டு போய்விட்டதே” எனத் தங்கள் சகோதரர்களான பென்யமீனியருக்காக மனம் வருந்தினார்கள்.

  21. அத்துடன், “மீதியாயிருக்கும் இவர்களுக்கு நாம் மனைவியரை எப்படிக் கொடுக்கமுடியும்? இவர்களுக்கு எங்கள் பெண் பிள்ளைகளைக் கொடுப்பதில்லை என்று யெகோவாவுக்கு முன்பாக நாம் தீர்மானித்தோமே” எனச் சொல்லிக்கொண்டார்கள்.

  22. பின்பு அவர்கள், “இஸ்ரயேல் கோத்திரங்களில் எது மிஸ்பாவிலே யெகோவா முன்பாக ஒன்றுகூடத் தவறியது” எனக் கேட்டார்கள். அப்பொழுது யாபேஸ் கீலேயாத்திலுள்ளவர்கள் ஒருவரும் சபை கூடுதலுக்கான முகாமுக்கு வரவில்லை எனக் கண்டுகொண்டார்கள்.

  23. அவர்கள் மக்களைக் கணக்கெடுத்தபோது யாபேஸ் கீலேயாத்திலிருந்து ஒருவரும் அங்கு இல்லாதிருந்ததைக் கண்டார்கள்.

  24. எனவே அங்கு கூடியிருந்தவர்கள் போர் வீரர்களில் பன்னிரெண்டாயிரம்பேரை, யாபேஸ் கீலேயாத்திலுள்ள பெண்கள் பிள்ளைகள் உட்பட எல்லோரையும் வாளால் வெட்டும்படி அனுப்பினார்கள்.

  25. “நீங்கள் செய்யவேண்டியது இதுவே. எல்லா ஆண்களையும், கன்னியாயிராத எல்லாப் பெண்களையும் கொலைசெய்யவேண்டும்” எனச் சொன்னார்கள்.