லூக்கா 21:7-27
7
அவர்கள் இயேசுவிடம், “போதகரே, எப்பொழுது இவை நிகழும்? நிகழப்போகிறது என்பதற்கான அடையாளம் என்ன?” என்று கேட்டார்கள்.
8
இயேசு அதற்குப் பதிலாக, “நீங்கள் ஏமாறாதபடி விழிப்பாயிருங்கள். ஏனெனில், அநேகர் நான்தான் அவர், காலம் நெருங்கிவிட்டது என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, என் பெயராலே வருவார்கள். அவர்களைப் பின்பற்றவேண்டாம்.
9
நீங்கள் யுத்தங்களையும், கலவரங்களையும் கேள்விப்படும்போது, பயப்படவேண்டாம். முதலில் இவை நிகழவே வேண்டும். ஆனாலும், முடிவோ உடனே வராது” என்றார்.
10
பின்பு இயேசு அவர்களிடம் சொன்னதாவது: “நாட்டிற்கு விரோதமாய் நாடு எழும்பும், அரசு அரசிற்கெதிராய் எழும்பும்.
11
பல இடங்களில் பெரும் பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், ஆபத்தான நோய்களும் உண்டாகும். பயங்கர சம்பவங்களும், வானத்திலிருந்து பெரிய அடையாளங்களும் காணப்படும்.
12
“இவை எல்லாவற்றிற்கும் முன்பாக, உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள். அவர்கள் உங்களை ஜெப ஆலயங்களிலும், சிறைகளிலும் ஒப்படைப்பார்கள். அரசருக்கு முன்பாகவும், ஆளுநர்களுக்கு முன்பாகவும் கொண்டு செல்லப்படுவீர்கள். இவை எல்லாம் என் பெயரின் பொருட்டு நிகழும்.
13
நீங்கள் அவர்களுக்கு சாட்சிகளாய் இருப்பதற்கு, இது ஒரு சந்தர்ப்பமாய் இருக்கும்.
14
ஆனால், உங்கள் சார்பாக எப்படிப் பேசலாம் என்று முன்னதாகக் கவலைப்படாமல் இருக்கத் தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
15
உங்கள் எதிரிகளில் எவனும் எதிர்த்துப் பேசவோ, மறுத்துப் பேசவோ முடியாத அளவுக்கு, வார்த்தையையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.
16
நீங்கள் பெற்றோர்களாலும், சகோதரர்களாலும், உறவினர்களாலும், நண்பர்களாலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள். அவர்கள் உங்களில் சிலரைக் கொலைசெய்வார்கள்.
17
என் நிமித்தம் அனைவரும் உங்களை வெறுப்பார்கள்.
18
ஆனால், உங்கள் தலையிலுள்ள ஒரு முடிகூட அழிந்துபோகாது.
19
உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக் கொள்ளுங்கள்.
20
“எருசலேம் படை வீரரால் முற்றுகையிடப்படுவதை நீங்கள் காணும்போது, அதற்கு அழிவு நெருங்கிவிட்டது என அறிந்துகொள்வீர்கள்.
21
அப்பொழுது யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும். நகரத்தில் இருக்கிறவர்கள் வெளியே புறப்பட்டு போகட்டும். நாட்டு மக்கள் பட்டணத்திற்குள் போகாமல் இருக்கட்டும்.
22
ஏனெனில், எழுதப்பட்டிருப்பவை எல்லாம் நிறைவேறப்போகும் தண்டனையின் காலம் இதுவே.
23
அந்நாட்களில் கர்ப்பவதிகளின் நிலைமையும், பால் கொடுக்கும் தாய்மாரின் நிலைமையும் எவ்வளவு பயங்கரமாயிருக்கும்! நாட்டிலே கொடிய துன்பமும் உண்டாகும். இந்த மக்களுக்கு எதிராக கடுங்கோபமும் வெளிப்படும்.
24
அவர்கள் வாளினால் வெட்டுண்டு விழுவார்கள். எல்லா மக்களின் நாடுகளுக்கும் கைதிகளாய் கொண்டு செல்லப்படுவார்கள். யூதரல்லாதவர்களின் காலம் நிறைவேறும்வரை, எருசலேம் யூதரல்லாதவர்களால் மிதிக்கப்படும்.
25
“சூரியனிலும், சந்திரனிலும், நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் ஏற்படும். பூமியிலோ மக்கள் கடலின் முழக்கத்தினாலும், கொந்தளிப்பினாலும், பெருந்துன்பத்திற்கும், கலக்கத்திற்கும் உட்படுவார்கள்.
26
வானத்தின் அதிகாரங்கள் அசைக்கப்படுவதனால், மனிதர் உலகத்திற்கு என்ன ஏற்படுமோ என்று பயத்தினால், மனம் சோர்ந்துபோவார்கள்.
27
அவ்வேளையில் மானிடமகனாகிய நான் வல்லமையுடனும், மிகுந்த மகிமையுடனும், மேகத்தில் வருவதை மனிதர்கள் காண்பார்கள்.
Settings