Skip to content
நியாயாதிபதிகள் 9:24-56

நியாயாதிபதிகள் 9:24-56

24
யெருபாகாலின் எழுபது மகன்களான தனது சகோதரர்களின் இரத்தத்தை சிந்தி, அவர்களுக்கு எதிராக அபிமெலேக் செய்த குற்றத்திற்காக அவனைப் பழிவாங்குவதற்காகவே இறைவன் இதைச் செய்தார். சீகேமின் குடிகள் அவனுடைய சகோதரர்களைக் கொலைசெய்ய உதவிசெய்ததற்காக அவர்கள்மேலும் இறைவன் இதைச் செய்தார்.
25
அபிமெலேக்கை எதிர்த்து மலையுச்சியில் பதுங்கியிருந்து அவ்வழியே போவோரைக் கொள்ளையிடுவதற்காக சீகேமின் குடிகள் மனிதரை ஏற்படுத்தினர். இது அபிமெலேக்கிற்கு அறிவிக்கப்பட்டது.
26
இப்பொழுது ஏபேத்தின் மகன் காகால் தனது சகோதரர்களுடன் சீகேமுக்குப் போனான். சீகேமின் குடிகள் அவனில் நம்பிக்கை வைத்தனர்.
27
அங்கிருந்து அவர்கள் திராட்சைத் தோட்டங்களுக்குப் போய் பழங்களைச் சேர்த்து அதை மிதித்துப் பிழிந்தனர். பின்பு அவர்கள் தங்களுடைய தெய்வத்தின் கோயிலில் பண்டிகை கொண்டாடினர். அவர்கள் உண்டு குடிக்கையில் அபிமெலேக்கைச் சபித்தனர்.
28
ஏபேத்தின் மகன் காகால் அவர்களிடம், “அபிமெலேக் யார்? சீகேமியரான நாம் யார்? சீகேமியர்களாகிய நாம் அபிமெலேக்கிற்கு ஏன் கீழ்ப்பட்டிருக்க வேண்டும்? இவன் யெருபாகாலின் மகன் அல்லவா? சேபூல் அவனுடைய உதவியாளன் அல்லவா? சீகேமின் தகப்பனான ஏமோரின் மனிதர்களுக்குப் பணிசெய்யுங்கள். நாம் எதற்காக அபிமெலேக்கிற்கு பணிசெய்ய வேண்டும்?
29
இந்த மனிதர் மட்டும் என் கட்டளைகளுக்குக் கீழ்ப்பட்டிருப்பார்களாயின் நான் அபிமெலேக்கை அழித்துவிடுவேன். நான் அபிமெலேக்கிடம், ‘உனது படையை திரட்டிக்கொண்டு போருக்கு வா’ என்று சொல்வேன்” என்றான்.
30
ஏபேத்தின் மகன் காகால் சொன்னதைக் கேட்ட பட்டணத்தின் ஆளுநரான சேபூல் மிகவும் கோபமடைந்தான்.
31
எனவே அவன் இரகசியமாக அபிமெலேக்கிற்கு தூதுவரை அனுப்பி, “ஏபேத்தின் மகன் காகால் தன் சகோதரர்களுடன் சீகேமுக்கு வந்து பட்டணத்து மக்களை உனக்கு எதிராக தூண்டிவிடுகிறான்.
32
எனவே நீயும் உன் மனிதர்களும் இரவுவேளையில் வந்து வயல்வெளிகளில் பதுங்கிக் காத்திருக்கவேண்டும்.
33
காலையில் சூரியன் உதிக்கும் நேரம் பட்டணத்தை நோக்கி முன்னேறுங்கள். காகாலும் அவனுடைய மனிதர்களும் உனக்கெதிராக வெளியே வரும்போது, உன் கையால், செய்ய முடியுமானதை செய்” என்று சொல்லச் சொன்னான்.
34
அவ்வாறே அபிமெலேக்கு அன்றிரவு தனது படைகளுடன் புறப்பட்டுபோய், சீகேமுக்கு அருகில் சென்று நான்கு பிரிவுகளாக நிலைகொண்டு மறைந்திருந்தான்.
35
ஏபேத்தின் மகன் காகால் வெளியே போய் பட்டணத்தின் நுழைவாசலில் வந்து நின்றான்; அப்பொழுது அபிமெலேக்கும் அவனுடைய வீரர்களும் தாங்கள் மறைந்திருந்த இடங்களிலிருந்து வெளியே வந்தார்கள்.
36
காகால் அவர்களைக் கண்டபோது சேபூலிடம், “அதோ பார், மலையின் உச்சியிலிருந்து மக்கள் இறங்கி வருகிறார்கள்” என்றான். அதற்கு சேபூல், “நீ மலைகளின் நிழல்களை மனிதன் என்று தவறாக நினைக்கிறாய்” என்றான்.
37
ஆனால் காகால் திரும்பவும், “அதோ பார், நாட்டின் நடுவில் உயர்ந்த பகுதியிலிருந்து மக்கள் இறங்கி வருகிறார்கள். அதோடு குறிசொல்வோரின் ஒரு பிரிவு கர்வாலி மரப்பாதையிலிருந்து வருகிறது” என்றான்.
38
அப்பொழுது சேபூல் அவனிடம், “இப்பொழுது நீ பெரிய கதை அளந்தாயே, அது எங்கே? அபிமெலேக் யார்? நாம் ஏன் அவனுக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டும் என்று நீ இழிவாகப் பேசிய மனிதர்கள் இவர்களல்லவா. புறப்பட்டுப்போய் அவர்களுடன் சண்டையிடு” என்றான்.
39
காகால் சீகேமின் குடிகளுடன் சென்று அபிமெலேக்குடன் சண்டையிட்டான்.
40
அபிமெலேக்கு அவனைத் துரத்தினான்; அநேகர் ஓடிப்போகையில் பட்டணத்தின் வாசல்வரை காயமுற்று விழுந்தார்கள்.
41
அபிமெலேக்கு அருமாவிலே தங்கியிருந்தான். சேபூல், காகாலையும் அவன் சகோதரர்களையும் சீகேமிலிருந்து வெளியே துரத்திவிட்டான்.
42
அடுத்தநாள் சீகேமின் குடிகள் வயல்களுக்குப் போனார்கள். இது அபிமெலேக்கிற்கு அறிவிக்கப்பட்டது.
43
எனவே அவன் தனது மக்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்து வயல்களில் மறைந்திருக்கச் செய்தான். பட்டணத்திலிருந்து மக்கள் வெளியே வருவதை அவன் கண்டதும், அவன் அவர்களைத் தாக்குவதற்கு எழுந்தான்.
44
அபிமெலேக்கும், அவனுடன் இருந்த பிரிவினரும் தாங்கள் இருந்த இடத்திலிருந்து முன்னேறி பட்டணத்தின் நுழைவாசலுக்குள் விரைந்து சென்றார்கள். மற்ற இரு பிரிவினரும் வயல்களில் இருந்தவர்களின்மேல் பாய்ந்து அவர்களை அடித்து வீழ்த்தினார்கள்.
45
அபிமெலேக்கு அந்த நாள்முழுவதும் பட்டணத்திற்கெதிரான தனது தாக்குதலைக் கடுமையாக்கி அந்தப் பட்டணத்தைப் பிடித்து, அங்குள்ள மக்களைக் கொலைசெய்தான். பின் அப்பட்டணத்தை அழித்து அதிலே உப்புத் தூவினான்.
46
சீகேமின் கோபுரத்தில் இருந்த குடிமக்கள் இவற்றைக் கேள்விப்பட்டவுடன், “ஏல் பெரீத்” கோவில்களின் அரண்களுக்குள் போனார்கள்.
47
இவர்கள் எல்லோரும் கோவிலுக்குள் கூடியிருக்கிறார்கள் என்று அபிமெலேக்கு கேள்விப்பட்டான்.
48
அப்பொழுது அபிமெலேக்கும் அவனுடைய மனிதர்களும் சல்மோன் மலைக்கு ஏறிப்போனார்கள். அங்கே அபிமெலேக்கு கோடரியை எடுத்து மரத்தின் சில கிளைகளை வெட்டி, தனது தோளின்மேல் வைத்துக்கொண்டான். பின் அவனோடிருந்த மனிதர்களிடம், “நான் செய்வதைப்போல் நீங்களும் விரைவாகச் செய்யுங்கள்” என்றான்.
49
எனவே எல்லா மனிதர்களும் கிளைகளை வெட்டிக்கொண்டு அபிமெலேக்கைப் பின்பற்றிச் சென்றார்கள். அவர்கள் அந்தக் கிளைகளை அரணைச் சுற்றி அடுக்கிவைத்து, மக்கள் உள்ளே இருக்கத்தக்கதாகத் நெருப்பிட்டுக் கொளுத்தினார்கள். எனவே சீகேமின் கோபுரத்திற்குள் இருந்த கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்களும் பெண்களும் செத்துப் போனார்கள்.
50
அதன்பின் அபிமெலேக்கு தேபேஸ் பட்டணத்திற்குப் போய் அதை முற்றுகையிட்டுக் கைப்பற்றினான்.
51
ஆயினும் பட்டணத்திற்குள்ளே ஒரு பலமான கோபுரம் இருந்தது. அந்த பட்டணத்திலிருந்த ஆண்களும், பெண்களுமாக எல்லா மக்களும் அந்த கோபுரத்துக்குள்ளே தப்பி ஓடினார்கள்.
52
அவர்கள் தாங்கள் உள்ளே சென்று கதவைப் பூட்டிக்கொண்டு, அந்த கோபுரத்தின் கூரையிலே ஏறினார்கள். அபிமெலேக்கு கோபுரத்துக்குச் சென்று அதைத் தாக்கினான். அவன் அந்த கோபுரத்திற்கு நெருப்பு மூட்டுவதற்காக அதற்கு அருகில் வந்தான்.
53
அப்பொழுது மேலே இருந்த ஒரு பெண் திரிகைக்கல்லை அவனுடைய தலைக்குமேல் எறிய அவனுடைய மண்டையோடு வெடித்தது.
54
அப்பொழுது அபிமெலேக்கு தன் ஆயுததாரியை அவசரமாக அழைத்து, “உனது வாளை எடுத்து என்னைக் கொன்றுவிடு. ‘ஒரு பெண் அவனைக் கொன்றாள்’ என்று எப்பொழுதும் யாரும் சொல்லக்கூடாது” என்றான். எனவே அந்த வேலைக்காரன் அவனை வாளால் ஊடுருவக் குத்தினான். அப்பொழுது அவன் இறந்தான்.
55
அபிமெலேக்கு இறந்துபோனதை அறிந்த இஸ்ரயேலர் தங்கள் வீடுகளுக்குப் போனார்கள்.
56
அபிமெலேக்குத் தன் எழுபது சகோதரர்களைக் கொன்று தன் தந்தைக்குச் செய்த கொடிய செயலுக்காக, இறைவன் இவ்வாறு அவனைத் தண்டித்தார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options