யோசுவா 22:11-20
11
இஸ்ரயேலருக்குரிய பகுதியில் யோர்தானுக்கு அருகேயுள்ள கானானின் எல்லையில் உள்ள கெலிலோத்தில் அவர்கள் பலிபீடத்தை எழுப்பினதை மற்ற இஸ்ரயேலர் கேள்விப்பட்டனர்.
12
அப்பொழுது இஸ்ரயேல் சமுதாயம் முழுவதும் அவர்களுக்கெதிராக யுத்தம் புரிவதற்காக சீலோவிலே ஒன்றுதிரண்டது.
13
எனவே இஸ்ரயேலர் ஆசாரியனான எலெயாசாரின் மகனாகிய பினெகாசை ரூபன், காத், மனாசேயின் அரைக் கோத்திரத்தினர் ஆகியோரிடம் கீலேயாத்திற்கு அனுப்பினார்கள்.
14
அவனுடன் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒருவனாக இன்னும் பத்துத் தலைவர்களையும் அனுப்பினார்கள். அவர்கள் ஒவ்வொருவனும் இஸ்ரயேல் வம்சத்தலைவர்களுள் ஒரு குடும்பத் தலைவனாக இருந்தான்.
15
அவர்கள் கீலேயாத்திற்குப்போய் ரூபனியர், காத்தியர் மனாசேயின் அரைக் கோத்திரத்தினர் ஆகியோரிடம்,
16
“யெகோவாவின் மக்கள் கூட்டம் முழுவதும் சொல்கிறது என்னவென்றால்: ‘நீங்கள் எப்படி இஸ்ரயேலரின் இறைவனுக்கு எதிராக இவ்வாறு நம்பிக்கைத் துரோகம் செய்யலாம்? இப்பொழுது நீங்கள் எப்படி யெகோவாவைவிட்டு வழிவிலகி அவருக்கு எதிராகக் கலகம்பண்ணி உங்களுக்கென ஒரு பலிபீடத்தைக் கட்டலாம்?
17
பேயோரின் மலையில் செய்த பாவம் எங்களுக்குப் போதாதோ? அதனால் யெகோவாவின் மக்கள் கூட்டம் முழுவதின் மேலும் கொள்ளைநோய் வந்தபோதும்கூட, இன்றுவரை அப்பாவத்திலிருந்து நம்மை நாம் சுத்திகரித்துக் கொள்ளவில்லையே!
18
இப்பொழுது நீங்கள் யெகோவாவைவிட்டு விலகிபோகிறீர்களா? “ ‘இன்று யெகோவாவுக்கு எதிராகக் கலகம் செய்தால், நாளை அவர் முழு இஸ்ரயேல் சமுதாயத்தின்மேலும் கோபம்கொள்வார் அல்லவா.
19
உங்கள் சொத்துரிமையான நாடு மாசுபட்டிருந்தால், இறைசமுககூடாரம் இருக்கிற யெகோவாவின் நாட்டிற்கு வந்து, எங்களுடன் அந்நாட்டைப் பகிர்ந்துகொள்ளுங்கள். எங்கள் இறைவனாகிய யெகோவாவின் பலிபீடத்தையன்றி, வேறு பலிபீடத்தைக் கட்டுவதனால், யெகோவாவுக்கு விரோதமாகவோ, எங்களுக்கு விரோதமாகவோ கலகம் செய்யவேண்டாம்.
20
முன்னர் சேராவின் மகனாகிய ஆகான் யெகோவாவுக்கு ஒதுக்கப்பட்ட பொருட்களின் விஷயத்தில் நம்பிக்கைத் துரோகமாக நடந்தபோது, இறைவனின் கோபம் இஸ்ரயேல் சமுதாயம் முழுவதன் மேலும் வரவில்லையோ? அவனுடைய பாவத்திற்காக அவன் மட்டும் சாகவில்லையே’ ” என்றார்கள்.
Settings