Skip to content
2 நாளாகமம் 28:1-15

2 நாளாகமம் 28:1-15

1
ஆகாஸ் அரசனானபோது இருபது வயதுள்ளவனாயிருந்தான், இவன் எருசலேமில் பதினாறு வருடங்கள் அரசாண்டான்; தன் முற்பிதாவான தாவீதைப்போல் அவன் யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்யவில்லை.
2
அவன் இஸ்ரயேல் அரசர்களின் வழிகளில் நடந்தான். பாகாலை வணங்குவதற்கு விக்கிரகங்களைச் செய்தான்.
3
அவன் பென் இன்னோம் பள்ளத்தாக்கிலே பலிகளை எரித்து, இஸ்ரயேலருக்கு முன்பாக யெகோவா துரத்திவிட்ட நாடுகளின் அருவருப்பான வழிகளைப் பின்பற்றி, தனது மகன்களையும் நெருப்பிலே பலியிட்டான்.
4
அவன் மலை உச்சியிலுள்ள மேடைகளிலும், அடர்ந்த மரங்களின் கீழும் பலிகளைச் செலுத்தி, தூபங்காட்டினான்.
5
எனவே அவனுடைய இறைவனாகிய யெகோவா அவனை சீரிய அரசர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார். சீரியர் அவனை முறியடித்து அவனுடைய மக்களில் அநேகரை கைதிகளாகச் சிறைப்பிடித்து, தமஸ்குவுக்குக் கொண்டுபோனார்கள். அவன் இஸ்ரயேல் அரசனின் கையிலும் ஒப்புக்கொடுக்கப்பட்டான். இஸ்ரயேலின் அரசன் இவன்மேல் பலத்த சேதங்களை ஏற்படுத்தினான்.
6
ரெமலியாவின் மகன் பெக்கா என்பவன் யூதாவில் ஒரே நாளில் 1,20,000 வீரர்களைக் கொன்றுபோட்டான். ஏனெனில் யூதா மக்கள் தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவை விட்டுவிட்டனர்.
7
அத்துடன் எப்பிராயீமின் வீரனான சிக்ரி என்பவன் அரசனின் மகன் மாசெயாவையும், அரண்மனைக்குப் பொறுப்பாயிருந்த அதிகாரி அஸ்ரிக்காமையும், பதவியில் அரசனுக்கு அடுத்தவனாக இருந்த எல்க்கானாவையும் கொன்றான்.
8
இஸ்ரயேலர் தமது நாட்டவர்களிடமிருந்து மனைவிகள், மகன்கள், மகள்கள் உட்பட மொத்தம் 2,00,000 பேரையும் சிறைப்பிடித்துக் கொண்டுபோனார்கள். அத்துடன் அவர்கள் அதிக அளவான பொருட்களைக் கொள்ளையிட்டு அவற்றைச் சமாரியாவுக்குக் கொண்டுபோனார்கள்.
9
அங்கே ஓதேத் என்னும் பெயருடைய யெகோவாவின் இறைவாக்கினன் ஒருவன் இருந்தான். இராணுவம் சமாரியாவிலிருந்து வரும்போது அதைச் சந்திக்க அவன் வெளியே போனான். அவன் அவர்களிடம், “உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா யூதாவின்மேல் கோபம் கொண்டதனால், அவர் இவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார். ஆனால் நீங்களோ வானத்தை எட்டும் அளவுள்ள உங்கள் சீற்றத்தினால் அவர்களை வெட்டி வீழ்த்தினீர்கள்,
10
அதோடு நீங்கள் யூதாவிலும், எருசலேமிலும் உள்ள ஆண்களையும், பெண்களையும் உங்கள் அடிமைகளாக்க நினைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்து, குற்றவாளிகளாய் இருக்கிறீர்கள் அல்லவா?
11
இப்பொழுதும் எனக்குச் செவிகொடுங்கள். நீங்கள் கைதிகளாகக் கொண்டுவந்திருக்கும் உங்கள் சக இஸ்ரயேலரைத் திருப்பி அனுப்புங்கள். ஏனெனில் யெகோவாவின் கோபம் உங்கள்மேல் இருக்கிறது” என்றான்.
12
அப்பொழுது எப்பிராயீமிலுள்ள சில தலைவர்களான யோகனானின் மகன் அசரியா, மெஷில்லேமோத்தின் மகன் பெரகியா, சல்லூமின் மகன் எகிஸ்கியா, அத்லாயின் மகன் அமாசா ஆகியோர் யுத்தத்தில் இருந்து திரும்பியவர்கள்முன் எதிர்முகமாய் நின்றார்கள்.
13
அவர்கள், “நீங்கள் அந்தக் கைதிகளை இங்கே கொண்டுவரக்கூடாது. கொண்டுவந்தால், நாம் யெகோவாவுக்கு முன்பாக குற்றமுள்ளவர்களாய் இருப்போம். நீங்கள் எங்கள் பாவத்தோடும், குற்றத்தோடும் இதையும் கூட்ட எண்ணியிருக்கிறீர்களா? ஏனெனில் எங்கள் குற்றம் ஏற்கெனவே பெரியது. யெகோவாவின் கோபம் இஸ்ரயேலின்மேல் இருக்கிறது” என்று சொன்னார்கள்.
14
எனவே இராணுவவீரர்கள் அதிகாரிகளுக்கும், கூடியிருந்த எல்லோருக்கும் முன்பாகக் கைதிகளையும், கொள்ளைப்பொருட்களையும் ஒப்புக்கொடுத்தார்கள்.
15
பெயரினால் குறிக்கப்பட்டுள்ள அந்த மனிதர், இந்த கைதிகளில் ஆடையில்லாமல் இருந்தவர்களுக்குக் கொள்ளையில் இருந்து உடைகளை எடுத்து உடுத்துவித்தனர். அவர்கள் கைதிகளுக்கு உடைகளுடன் செருப்புகளையும், உணவையும், பானத்தையும் அத்துடன் சுகமாக்கும் தைலத்தையும் கொடுத்தார்கள். மற்றும் அவர்களில் பெலவீனமானவர்களைக் கழுதைகளில் ஏற்றினார்கள். அப்படியே கைதிகள் எல்லோரையும், பேரீச்சை மரங்களின் பட்டணமாகிய எரிகோவுக்கு அவர்களுடைய நாட்டு மக்களிடம் திரும்பவும் கொண்டுபோய்விட்டார்கள். பின்பு இவர்கள் திரும்பி சமாரியாவுக்கு வந்தனர்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options