2 தெசலோனிக்கேயர்2
Listen to this chapter
0:00
0:00
1
பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையைக் குறித்தும், நாம் அவரிடத்தில் சேர்க்கப்படுவதைக் குறித்தும், நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்வது இதுவே:
2
ஏதாவது இறைவாக்கினாலோ, அறிக்கையினாலோ, எங்களிடமிருந்து வந்தது என சொல்லப்படுகிற கடிதத்தினாலோ, கர்த்தருடைய நாள் ஏற்கெனவே வந்துவிட்டதென சொல்லப்பட்டால், அதைக்குறித்து நீங்கள் நிலைகுலைந்து போகவோ, திகிலடையவோ வேண்டாம்.
3
யாராவது உங்களை எவ்வகையிலும் ஏமாற்றுவதற்கு சிறிதளவும் இடங்கொடுக்க வேண்டாம். ஏனெனில், இறைவனுக்கெதிரான பெரும் கலகம் ஏற்பட்டு, அக்கிரம மனிதன் வெளிப்படும்வரைக்கும், அந்த நாள் வராது; அந்த மனிதனே அழிவுக்கு நியமிக்கப்பட்டவன்.
4
அவன் இறைவன் என்று சொல்லப்படும் எல்லாவற்றிற்கும், வழிபாட்டுக்குரியவைகள் எல்லாவற்றிற்கும் எதிர்த்து நிற்பான். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவன் தன்னை உயர்த்துவான். இதனால், இறைவனின் ஆலயத்தில் தேவன்போல அமர்த்திக்கொண்டு, தன்னையே இறைவன் என்று பிரசித்தப்படுத்துவான்.
5
நான் உங்களுடன் இருந்தபோது, நான் இவற்றைக்குறித்து உங்களுக்குச் சொன்னது ஞாபகம் இல்லையா?
6
அவனை இப்போது வெளிப்படாதபடி தடுத்துக்கொண்டிருப்பவர் யாரென்று, உங்களுக்குத் தெரியும். இதனால், அவன் ஏற்ற காலத்திலேதான் வெளிப்படுவான்.
7
ஏனெனில், அக்கிரமத்தின் இரகசியம், ஏற்கெனவே வல்லமை செயலாற்றிக்கொண்டு இருக்கிறது. ஆனால், அதை இப்பொழுது தடுத்துக்கொண்டிருப்பவர், தாம் எடுத்துக்கொள்ளப்படும்வரை தொடர்ந்து, அதைத் தடுத்துக்கொண்டே இருப்பார்.
8
அதற்குப் பின்பு, அந்த அக்கிரம மனிதன் வெளிப்படுவான். அவனை கர்த்தராகிய இயேசு தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தமது வருகையின் மகிமையினாலே அவனை அழித்துப்போடுவார்.
9
அந்த அக்கிரம மனிதன் வரும்போது, சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும், பலவித போலியான அற்புதங்களும், அடையாளங்களும், அதிசயங்களும் செய்து காட்டுவான்.
10
அழிந்துபோகிறவர்களை ஏமாற்றி எல்லா விதமான தீமையான செயல்களும் செய்துகாட்டப்படும். இறைவனுடைய சத்தியத்தை அன்புடன் ஏற்றுக்கொள்ளவும், அதனால் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளவும் மறுத்ததினாலேயே, அவர்கள் அழிந்துபோகிறார்கள்.
11
இந்தக் காரணத்தினாலே, இறைவன் அவர்களுக்குள்ளே ஏமாற்றத்தை நம்பும் வண்ணமாக, தவறான தன்மையை வரவிடுவார். அதனால் அவர்கள் பொய்யையே நம்புவார்கள்.
12
இவ்வாறு சத்தியத்தை விசுவாசிக்காமல், கொடுமையான செயல்களில் மகிழ்ச்சி கொண்டவர்கள் எல்லோரும் குற்றவாளிகளாய்த் தீர்க்கப்படுவார்கள்.
13
ஆனால், கர்த்தரின் அன்புக்குரிய பிரியமானவர்களே, உங்களையோ, இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும்படி ஆரம்பத்திலிருந்தே இறைவன் தெரிந்துகொண்டார். பரிசுத்த ஆவியானவரின் பரிசுத்தமாக்குகிற செயலினாலும், சத்தியத்தை நம்பி விசுவாசிக்கிறதினாலும், இந்த இரட்சிப்பு வருகிறது. இதனாலேயே உங்களுக்காக, நாங்கள் எப்பொழுதும் இறைவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.
14
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையில், நீங்களும் பங்குடையவர்களாகும்படியே, எங்களுடைய நற்செய்தியின் மூலமாய், அவர் உங்களை அழைத்திருக்கிறார்.
15
ஆகவே பிரியமானவர்களே, நீங்கள் உறுதியுடன் நின்று, எங்களுடைய வாயின் வார்த்தை மூலமாகவோ, அல்லது கடிதத்தின் மூலமாகவோ, நாங்கள் உங்களுக்குக் கொடுத்த போதனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
16
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், பிதாவாகிய இறைவனும் நம்மில் அன்பு செலுத்தி, தமது கிருபையினால் நமக்கு நித்திய தைரியத்தையும், நல்ல எதிர்பார்ப்பையும் தந்துள்ளார்.
17
அவர் உங்களுடைய இருதயங்களை உற்சாகப்படுத்தி, உங்களை எல்லா நற்செயலிலும் நற்சொல்லிலும் பெலப்படுத்துவாராக.
Use ← → arrow keys to navigate
Settings
Reading Style
Typeface
Font Size px
Options
Study Note