Skip to content
யாத்திராகமம் 23:20-33

யாத்திராகமம் 23:20-33

20
“பாருங்கள், வழியெல்லாம் உங்களைப் பாதுகாத்து நான் ஆயத்தப்படுத்தியிருக்கிற இடத்திற்கு உங்களைக் கொண்டுவருவதற்காக, நான் உங்களுக்கு முன்னால் ஒரு தூதனை அனுப்புகிறேன்.
21
அவர் சொல்வதை கவனித்துக் கேளுங்கள். அவருக்கு விரோதமாகக் கலகம் செய்யவேண்டாம். ஏனெனில் என் பெயர் அவரில் இருப்பதால் உங்கள் கலகத்தை அவர் மன்னிக்கமாட்டார்.
22
அவர் சொல்வதை நீங்கள் கவனமாகக் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வீர்களானால், நான் உங்கள் பகைவர்களுக்குப் பகைவராய் இருப்பேன். உங்களை எதிர்ப்பவர்களை நானும் எதிர்ப்பேன்.
23
என் தூதன் உங்களுக்கு முன்சென்று, எமோரியர், ஏத்தியர், பெரிசியர் கானானியர், ஏவியர், எபூசியர் வாழும் இடத்திற்கு உங்களைக் கொண்டுபோவார். நானும் அவர்களை அழித்தொழிப்பேன்.
24
நீங்கள் அவர்களுடைய தெய்வங்களை வணங்கவோ, வழிபடவோ, அவர்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றவோ வேண்டாம். நீங்கள் அவற்றை அழித்து அவர்களின் தெய்வச்சிலைகளையும் துண்டுகளாக நொறுக்கவேண்டும்.
25
நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவையே வழிபடுங்கள், அவருடைய ஆசீர்வாதம் உங்கள் உணவிலும், தண்ணீரிலும் இருக்கும். உங்களிடமிருந்து நோயை நீக்கிவிடுவேன்.
26
உங்கள் நாட்டில் ஒருவரும் கருச்சிதைவடையவோ, மலட்டுத்தன்மை உடையவர்களாகவோ இருக்கமாட்டார்கள். உங்களுக்கு முழுமையான ஆயுள் காலத்தை நான் கொடுப்பேன்.
27
“நான் உங்களுக்கு முன்பாக என் பயங்கரத்தை அனுப்பி, நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நாட்டினரையும் கலங்கப்பண்ணுவேன். உங்கள் பகைவரையெல்லாம் புறமுதுகு காட்டி ஓடச்செய்வேன்.
28
ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையும் உங்கள் வழியைவிட்டுத் துரத்திவிட உங்களுக்கு முன்னே குளவிகளை அனுப்புவேன்.
29
ஆனால் நான் அவர்களை ஒரு வருடத்திற்குள்ளாகவே துரத்திவிடமாட்டேன். அப்படிச் செய்தால், நாடு பாழாய்ப் போய்விடும், காட்டு விலங்குகளும் உங்களால் சமாளிக்க முடியாத அளவு பெருகிவிடும்.
30
நீங்கள் அந்நாட்டை உரிமையாக்கிக்கொள்ளும் அளவுக்குப் பெருகுகிறவரைக்கும், நான் கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களை உங்கள் முன்னின்று துரத்துவேன்.
31
“செங்கடல் தொடங்கி பெலிஸ்தியரின் கடல் வரைக்கும், பாலைவனம்தொடங்கி யூப்பிரடீஸ் நதிவரைக்கும் உங்கள் எல்லையை நிலைப்படுத்துவேன். அந்நாட்டில் வாழும் மக்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன். அப்பொழுது நீங்கள் அவர்களை உங்கள் முன்னிலையில் இருந்து வெளியே துரத்திவிடுவீர்கள்.
32
அவர்களுடனோ, அவர்களின் தெய்வங்களுடனோ ஒரு உடன்படிக்கையையும் செய்யவேண்டாம்.
33
உங்கள் நாட்டில் அவர்களை வாழவிடவேண்டாம். இல்லையெனில் நீங்கள் எனக்கு விரோதமாய் பாவம் செய்வதற்கு அவர்கள் காரணமாயிருப்பார்கள். அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குச் செய்யும் வழிபாடு நிச்சயமாக உங்களுக்கு ஒரு கண்ணியாக இருக்கும்” என்றார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options