Skip to content
யாத்திராகமம் 22:1-15

யாத்திராகமம் 22:1-15

1
“ஒரு மனிதன் ஒரு எருதையோ அல்லது செம்மறியாட்டையோ திருடி, அதைக் கொன்றாலோ அல்லது விற்றாலோ அவன் அந்த எருதுக்குப் பதிலாக ஐந்து எருதுகளையும், அந்த செம்மறியாட்டுக்குப் பதிலாக நான்கு செம்மறியாடுகளையும் கொடுக்கவேண்டும்.
2
“திருடன் ஒருவன், வீட்டை உடைத்துத் திருடுகையில் பிடிக்கப்பட்டு, அடிபட்டு இறந்தால், அடித்தவன் இரத்தத்தைச் சிந்தியதற்கான குற்றவாளி அல்ல.
3
ஆனால் அது சூரியன் உதித்தபின் நடந்திருந்தால் இரத்தத்தைச் சிந்திய குற்றம் அவன்மேல் இருக்கும். “திருடன் தன் திருட்டிற்காகப் பதிலீடு செய்யவேண்டும். அவனிடம் ஒன்றுமில்லையானால் அபராதத்தைச் செலுத்துவதற்காக அவன் விற்கப்படவேண்டும்.
4
அவன் திருடிய எருதோ, கழுதையோ, செம்மறியாடோ அவனிடத்தில் உயிரோடிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டால், அவன் இரண்டு மடங்கு அபராதத்தைச் செலுத்தவேண்டும்.
5
“ஒருவன் தன் வளர்ப்பு மிருகங்களை ஒரு வயலிலோ, திராட்சைத்தோட்டத்திலோ மேய்க்கிறபோது, அவற்றைக் கட்டாமல் இன்னொருவனுடைய வயலில் மேயவிட்டால், அவன் தன்னுடைய வயலிலிருந்தும், தோட்டத்திலிருந்தும் அதற்குப் பதிலீடாக மிகச்சிறந்ததைக் கொடுக்கவேண்டும்.
6
“நெருப்பு மூண்டு முட்செடிகளில் பற்றிப்பரவி, தானியக்கட்டுகளையோ, விளைந்து நிற்கும் தானியக்கதிர்களையோ அல்லது முழு வயலையோ எரித்துப்போட்டால், நெருப்பை மூட்டியவன் அதற்காகப் பதிலீடு செய்யவேண்டும்.
7
“ஒரு மனிதன் தன் அயலானிடம் வெள்ளியையோ, பொருட்களையோ பாதுகாப்பாக வைப்பதற்குக் கொடுக்கையில், அந்த அயலானுடைய வீட்டிலிருந்து அவை திருடப்பட்டு, அந்த திருடன் பிடிக்கப்பட்டால் அவன் இரண்டு மடங்கு அபராதம் செலுத்தவேண்டும்.
8
ஆனால், அத்திருடன் அகப்படாவிட்டால், வீட்டின் உரிமையாளன் தன்னிடம் ஒப்புவிக்கப்பட்ட பொருட்களை தான் எடுக்கவில்லை என்பதை நிரூபிப்பதற்காக அவன் நீதிபதிகள் முன் வரவேண்டும்.
9
ஒருவன் தன்னுடையதல்லாத எருதையோ, கழுதையையோ, செம்மறியாட்டையோ, உடையையோ, காணாமற்போன எந்தப் பொருளையோ வைத்திருக்கும்போது, அதை இன்னொருவன் கண்டு, ‘இது என்னுடையது’ என்று சொன்னால், அவர்கள் இருவரும் நீதிபதியின் முன்பாக தங்கள் வழக்குகளை கொண்டுவர வேண்டும். நீதிபதியால் குற்றவாளியென்று தீர்க்கப்படுகிறவன் மற்றவனுக்கு இரண்டு மடங்காகக் கொடுக்கவேண்டும்.
10
“ஒருவன் தன் கழுதையையோ, எருதையோ, செம்மறியாட்டையோ, வேறொரு மிருகத்தையோ தன் அயலானிடத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கும்படி கொடுத்திருக்கும்போது, அது இறந்தால் அல்லது காயமடைந்தால் அல்லது ஒருவரும் பார்க்காத வேளையில் காணாமற்போனால்,
11
அந்த மிருகங்களை வைத்திருந்த மனிதன் அவற்றைத் தான் திருடவில்லை என யெகோவா முன்னிலையில் சத்தியம் செய்யவேண்டும். அப்பொழுது அவர்கள் இருவருக்கும் இடையில் இப்பிரச்சனை தீர்க்கப்படும். மிருகங்களின் உரிமையாளன் அந்த ஆணையை ஏற்றுக்கொள்ளவேண்டும். பதிலீடு எதுவும் வேண்டியதில்லை.
12
ஆனால் அந்த மிருகம் அயலானிடத்திலிருந்து களவுபோயிருந்தால், அவன் அதன் உரிமையாளனுக்கு அதற்காகப் பதிலீடு செய்யவேண்டும்.
13
கொடிய மிருகங்களால் அது துண்டுகளாகக் கிழிக்கப்பட்டிருந்தால், அதன் உடலில் மீதியானவற்றைச் உரிமையாளனிடம் சாட்சியமாகக் கொண்டுவர வேண்டும். கிழிக்கப்பட்ட அந்த மிருகத்திற்காக அவன் பணம் செலுத்தும்படி கேட்கப்படமாட்டான்.
14
“ஒருவன் தன் அயலானிடம் ஒரு மிருகத்தை இரவலாக வாங்கியிருக்கையில், அதன் உரிமையாளர் இல்லாத வேளையில் அது காயப்பட்டால் அல்லது இறந்துபோனால், அவன் அதற்கு ஈடுசெய்ய வேண்டும்.
15
ஆனால் மிருகத்தின் உரிமையாளர் அதனுடன் இருந்தால், இரவல் வாங்கியவன் அதற்காக ஈடுசெய்ய வேண்டியதில்லை. அந்த மிருகம் கூலிக்கு எடுக்கப்பட்டிருந்தால், கூலியாகச் செலுத்தப்பட்ட பணம் அந்த நஷ்டத்தை ஈடுசெய்கிறது.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options