1 சாமுயேல் 23:19-29
19
அதன்பின் சீப்பூராரில் சிலர் கிபியாவிலிருந்த சவுலிடம் போய், “தாவீது எஷிமோனுக்குத் தெற்கேயுள்ள ஆகிலா குன்றிலுள்ள கொரேஷின் கோட்டைகளில் எங்கள் மத்தியில் ஒளிந்திருக்கிறான் அல்லவா?
20
இப்பொழுது அரசே, நீர் விரும்பியபோது வாரும்; அவனை அரசனிடம் ஒப்புக்கொடுப்பது எங்கள் பொறுப்பு” என்றார்கள்.
21
அதற்கு சவுல், “நீங்கள் என்மேல் கொண்ட அக்கறைக்கு யெகோவா உங்களை ஆசீர்வதிப்பாராக.
22
நீங்கள் அங்கேபோய் மேற்கொண்டு ஆயத்தங்களைச் செய்யுங்கள். தாவீது வழக்கமாய் எங்கே போகிறான் என்றும், அங்கே அவனைக் கண்டவர்கள் எவரென்றும் விசாரித்து, யாவற்றையும் அறிவியுங்கள். அவன் மிக தந்திரமுள்ளவன் எனக் கேள்விப்படுகிறேன்.
23
நீங்கள் அவன் இருக்கும் மறைவிடங்கள் அனைத்தையும் அறிந்து, தெளிவான செய்தியுடன் என்னிடம் வாருங்கள். அப்பொழுது நான் உங்களுடன் வந்து, அந்தப் பகுதியில் அவன் இருந்தால் யூதா வம்சங்கள் எல்லாவற்றின் மத்தியிலும் அவனைத் தேடிக் கண்டுபிடிப்பேன்” என்றான்.
24
அப்பொழுது அவர்கள் சவுலுக்கு முன்பாகவே புறப்பட்டு சீப் பட்டணத்துக்குப் போனார்கள். தாவீதும் அவன் மனிதருமோ அந்நேரம் எஷிமோனுக்குத் தெற்காக அரபாவிலுள்ள மாகோன் பாலைவனத்தில் இருந்தார்கள்.
25
சவுலும், அவன் ஆட்களும் தேடுதலை ஆரம்பித்தார்கள். தாவீதுக்கு இது தெரியவந்தபோது, அவன் கற்பாறைக்கு இறங்கி மாகோன் பாலைவனத்தில் தங்கினான்.
26
சவுல் இதைக் கேள்விப்பட்டபோது தாவீதைத் துரத்திக்கொண்டு மாகோன் பாலைவனத்திற்குப் போனான். சவுல் மலையில் ஒரு பக்கத்தில் போய்க்கொண்டிருந்தான். தாவீதும் அவனுடைய மனிதரும் சவுலிடமிருந்து தப்புவதற்காக மலையின் மறுபக்கத்தில் விரைவாகப் போனார்கள். சவுலும், அவன் படைகளும் தாவீதையும், அவனுடைய மனிதரையும் பிடிக்க நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.
27
அப்பொழுது ஒரு தூதுவன் சவுலிடம் வந்து, “பெலிஸ்தியர் உமது நாட்டைச் சூறையாடுகிறார்கள். ஆதலால் விரைவாய் வாரும்” என்று சொன்னான்.
28
இதைக் கேட்ட சவுல் தாவீதைத் துரத்துவதை விட்டுவிட்டு, பெலிஸ்தியரை எதிர்கொள்ளத் திரும்பிப்போனான். இதனாலேயே அவ்விடத்தை சேலா அம்மாலிகோத் என்று அழைக்கிறார்கள்.
29
தாவீது அவ்விடத்திலிருந்து புறப்பட்டு என்கேதியிலுள்ள கோட்டைகளில் வசித்தான்.
Settings