1 இராஜாக்கள் 2:1-10
1
அரசன் தாவீதுக்கு மரண நாட்கள் நெருங்கியபோது, தன் மகனான சாலொமோனுக்குப் பொறுப்பை ஒப்படைத்தான்.
2
அவன் சாலொமோனிடம், “பூமியில் உள்ள எல்லோரும் போகிற வழியில் நானும் போகப்போகிறேன். நீ தைரியத்துடன் வீரமுள்ளவனாய் இரு.
3
உனது இறைவனாகிய யெகோவா உனக்குச் செய்யும்படி கட்டளையிட்ட யாவற்றையும் கைக்கொள்; அவருடைய வழிகளிலேயே நட. மோசேயின் சட்டத்தில் எழுதியிருக்கிறபடி அவருடைய விதிமுறைகளையும், சட்டங்களையும், ஒழுங்குவிதிகளையும் கைக்கொள். அப்பொழுது நீ செய்வதெல்லாவற்றிலும் வளம் பெறுவாய். நீ போகுமிடமெல்லாம் வெற்றிபெறுவாய்.
4
மேலும் யெகோவா எனக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவார்: ‘உன் சந்ததிகள் தாங்கள் வாழும் விதத்தில் கவனமாயிருந்து தங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் எனக்குமுன் உண்மையாக நடப்பார்களானால், இஸ்ரயேலின் அரியணையில் அமர்வதற்கு ஒரு மனிதன் உனக்கு இல்லாமல் போகமாட்டான் என்று எனக்கு வாக்களித்தாரே.’
5
“இப்பொழுது செருயாவின் மகன் யோவாப் எனக்குச் செய்தது என்ன என்று உனக்குத் தெரியும். அவன் இஸ்ரயேலின் இரு இராணுவத் தளபதிகளான நேரின் மகன் அப்னேருக்கும், ஏத்தேரின் மகன் அமாசாவுக்கும் செய்தது உனக்குத் தெரியும். அவன் அவர்களை ஒரு போர்க்களத்தில் செய்வதுபோல் சமாதான காலத்திலேயே இரத்தத்தைச் சிந்தி கொன்றான். அந்த இரத்தத்தினால் தன் இடுப்பைச் சுற்றியிருந்த பட்டியையும், காலில் இருந்த பாதரட்சைகளையும் கறைப்படுத்தினான்.
6
உனது ஞானத்தின்படியே அவனுக்குச் செய், அவனை நரைத்த முதுமையான காலத்தில் சமாதானத்துடன் பாதாளத்திற்குப்போக இடங்கொடுக்காதே.
7
“கீலேயாத்தியனான பர்சிலாயின் மகன்களுக்கு இரக்கம் காட்டி, உன் மேஜையிலிருந்து சாப்பிடுபவர்களுடன் அவர்களையும் சேர்த்துக்கொள். ஏனென்றால் உன் சகோதரன் அப்சலோமுக்குத் தப்பி நான் ஓடிப்போனபோது என்னை அவர்கள் ஆதரித்தார்கள்.
8
“நான் மக்னாயீமுக்குப் போன அந்த நாளில் என்னைக் கசப்பான சாபங்களால் சபித்த, பகூரிம் ஊரைச்சேர்ந்த பென்யமீனியனான கேராவின் மகன் சீமேயி உன்னுடன் இருக்கிறான் என்பதை நினைவில் வைத்துக்கொள். அவன் யோர்தான் நதி அருகில் என்னைச் சந்திக்க வந்தபோது, ‘நான் உன்னை வாளினால் அழிப்பதில்லை’ என்று யெகோவாவைக்கொண்டு ஆணையிட்டுக் கூறினேன்.
9
ஆனால் அவனைக் கபடற்றவன் என்று நினையாதே, நீ ஞானமுள்ளவன். அவனுக்கு என்ன செய்யவேண்டுமென்று நீ அறிந்துகொள்வாய். அவனுடைய நரைத்த தலையை இரத்தத்துடன் பாதாளத்துக்குப் போகப்பண்ணு” என்றான்.
10
இதன்பின் தாவீது தனது முற்பிதாக்களைப்போல இறந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான்.
Settings