Skip to content

ஓசியா10

1
இஸ்ரயேல் ஒரு படரும் திராட்சைக்கொடி, அவன் தனக்கென கனிகொடுக்கிறது. அவனுடைய கனிகள் பெருகியபோது, அதற்கேற்ற மிகுதியான பலிபீடங்களைக் கட்டினான். அவனுடைய நாடு செழித்தபோது, தனது புனிதக் கற்களை நன்றாக அலங்கரித்தான்.
2
அவர்கள் இருதயம் வஞ்சனையுள்ளது. இப்பொழுது அவர்கள் தங்கள் குற்றத்தைச் சுமக்கவேண்டும். யெகோவா அவர்களுடைய மேடைகளை இடித்து, புனிதக் கற்களை அழித்துப்போடுவார்.
3
அப்பொழுது அவர்கள், “நாங்கள் யெகோவாவிடம் பயபக்தியாயிருக்காதபடியால், எங்களுக்கு அரசன் இல்லை; அரசன் இருந்தாலுங்கூட, அவனால் எங்களுக்காக என்ன செய்யமுடியும்?” எனச் சொல்வார்கள்.
4
அவர்கள் அநேக வாக்குத்தத்தங்களைக் கொடுக்கிறார்கள், பொய் சத்தியங்களையும் ஒப்பந்தங்களையும் செய்கிறார்கள்; எனவே உழுத வயலில் உள்ள நச்சுப் பயிரைப்போல் வழக்குகள் தோன்றுகின்றன.
5
சமாரியாவில் வாழ்கிற மக்கள் பெத்தாவேனில் இருக்கிற கன்றுக்குட்டி விக்கிரகத்திற்குப் பயப்படுகிறார்கள். அது அவர்களிடமிருந்து எடுக்கப்பட்டு, நாடுகடத்தப்படும். அதன் மக்கள் அதற்காகத் துக்கங்கொண்டாடுவார்கள்; அதன் மகிமையில் மகிழ்ச்சிகொண்ட விக்கிரக பூசாரிகளும் துக்கங்கொண்டாடுவார்கள்.
6
அது அசீரியாவின் பேரரசனுக்குக் கப்பமாக அங்கு கொண்டுபோகப்படும். அதைக்குறித்து எப்பிராயீம் அவமானமடையும். இஸ்ரயேல் தன் சொந்த ஆலோசனையினால் வெட்கமடையும்.
7
சமாரியாவும் அதன் அரசனும் தண்ணீரில் மிதக்கும் குச்சியைப்போல் அள்ளுண்டு போவார்கள்.
8
இஸ்ரயேலின் வேறு தெய்வங்களுக்குப் பலியிட்ட மேடைகள் அழிக்கப்படும்; இதுவே இஸ்ரயேலின் பாவம். முட்செடிகளும் நெருஞ்சில்களும் வளர்ந்து அதன் மேடைகளை மூடும். அப்பொழுது அவர்கள் மலைகளைப் பார்த்து, “எங்களை மூடுங்கள்!” என்றும், குன்றுகளைப் பார்த்து, “எங்கள்மேல் விழுங்கள்!” என்றும் சொல்வார்கள்.
9
இஸ்ரயேலே, கிபியாவின் நாட்கள் தொடங்கி நீ பாவம் செய்தாய்; அதிலேயே நீ இன்னும் நிலைகொண்டிருக்கிறாய். கிபியாவிலே தீமை செய்தவர்கள்மேல் யுத்தம் வரவில்லையோ?
10
ஆகவே நான் விரும்புகின்றபோது உன்னைத் தண்டிப்பேன்; உங்கள் இரட்டிப்பான பாவங்களுக்காக உங்களை விலங்கிடுவதற்கென, பிறநாடுகள் உங்களுக்கு விரோதமாய் ஒன்றுகூடும்.
11
எப்பிராயீம் சூடு அடிக்க விரும்புகின்ற பயிற்றுவிக்கப்பட்ட கன்னிப்பசு. நான் அதன் கழுத்தின்மேல் பாரத்தை வைக்கவில்லை. ஆனால் இப்பொழுது நான் அதன் அழகான கழுத்தின்மேல் ஒரு நுகத்தை வைப்பேன். நான் எப்பிராயீமை கடுமையான வேலைக்கு நடத்துவேன்; யூதாவும் நிலத்தை உழவேண்டும், யாக்கோபின் எல்லா மக்களும் நிலத்தின் மண் கட்டிகளை உடைக்கவேண்டும்.
12
உங்கள் இருதயங்கள் உழப்படாத வயல்போல் கடினமாயிருக்கிறதே; ஆகவே உங்களுக்கென நீதியை விதையுங்கள், அன்பின் பலனை அறுவடை செய்யுங்கள். உழப்படாத உங்கள் நிலங்களைக் கொத்துங்கள், ஏனெனில் யெகோவா வந்து உங்கள்மேல் நியாயத்தை பொழியும் வரைக்கும் இது யெகோவாவைத் தேடும் காலமாயிருக்கிறது.
13
ஆனால் நீங்கள் கொடுமையை உழுதீர்கள், தீமையை அறுவடை செய்தீர்கள், வஞ்சனையின் பலனை சாப்பிட்டீர்கள். ஏனெனில், நீங்கள் உங்கள் சொந்த பெலத்திலும், உங்கள் அநேக போர் வீரர்களிலும் நம்பிக்கையாயிருந்தீர்கள்.
14
அதனால் உங்கள் மக்களுக்கு எதிராக யுத்தம் எழும்பும், உங்கள் கோட்டைகளெல்லாம் அழிக்கப்படும். யுத்தநாளில் பெத்தார்பேலை சல்மான் அழித்தபோது, தாய்மார் தங்கள் பிள்ளைகளுடன் தரையில் மோதி அடிக்கப்பட்டதுபோல இதுவும் இருக்கும்.
15
பெத்தேலே, உனது கொடுமை பெரிதாயிருப்பதனால் உனக்கு இப்படி நடக்கும். அந்த நாள் வருகிறபோது, இஸ்ரயேலின் அரசன் முற்றிலும் அழிக்கப்படுவான்.
Use arrow keys to navigate
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options