ரோமர் 9:14-29
14
ஆகவே நாம் என்ன சொல்லுவோம்? இறைவன் அநீதியுள்ளவரா? ஒருபோதும் இல்லை.
15
ஏனெனில் இறைவன் மோசேயிடம், “நான் யாருக்கு இரக்கம் காட்ட விருப்பமாயிருக்கிறேனோ, அவனுக்கு இரக்கம் காட்டுவேன். யார்மேல் அனுதாபங்கொள்ள விருப்பமாய் இருக்கிறேனோ, அவர்மேல் அனுதாபங்கொள்வேன்” என்றார்.
16
எனவே ஒரு மனிதனுடைய விருப்பத்தின்படியோ, அவனுடைய முயற்சியின்படியோ அல்ல, இறைவனுடைய இரக்கத்தின்படியே அவர் மனிதனைத் தெரிந்துகொள்கிறார்.
17
ஏனெனில் இறைவன் பார்வோனுக்கு, “என்னுடைய வல்லமையை உன்னில் காண்பித்து, பூமியெங்கும் என்னுடைய பெயரை அறிவிக்கும் ஒரே நோக்கத்திற்காகவே நான் உன்னை உயர்த்தினேன்” என்று சொன்னார் எனறு வேதவசனம் கூறுகிறது.
18
எனவே இறைவன் யாருக்கு இரக்கம் காட்ட விரும்புகிறாரோ, அவனுக்கு அவர் இரக்கம் காட்டுகிறார். யாரைக் கடினமாக்க விரும்புகிறாரோ, அவனை அப்படியே விட்டுவிடுகிறார்.
19
உங்களில் ஒருவன் என்னிடம், “அப்படியானால் இறைவன் ஏன் இன்னும் எங்களில் குற்றம் கண்டுபிடிக்கிறார்? யாரால் இறைவனுடைய திட்டத்தை எதிர்க்கமுடியும்?” என்று கேட்கலாம்.
20
அப்படியானால் மனிதனே, இறைவனை எதிர்த்துப் பேசுகிறதற்கு நீ யார்? உருவாக்கப்பட்டது தன்னை உருவாக்கினவனிடம், “ஏன் என்னை இப்படி உருவாக்கினாய்?” என்று கேட்கலாமா?
21
ஒரே களிமண்ணைப் பிசைந்து சில பாத்திரங்களை மேன்மையான உபயோகத்திற்கென்றும், சில பாத்திரங்களை சாதாரண உபயோகத்திற்கென்றும் உருவாக்குவதற்குக் குயவனுக்கு உரிமை இல்லையா?
22
அதேபோல இறைவனும் எல்லோர்மேலும் தம்முடைய கடுங்கோபத்தைக் காட்டவும், தம்முடைய வல்லமையைத் தெரியப்படுத்தவும் எண்ணியிருந்தார். ஆனால், அழிவுக்குரிய தம்முடைய கடுங்கோபத்திற்கு ஆளானவர்களில் தாம் தெரிந்துகொண்டவர்களுடன் மிகவும் பொறுமையோடு இருந்தால் யார் என்ன செய்யக்கூடும்?
23
இறைவன் தமது மகிமையின் நிறைவைக் காட்டுவதற்காகவே அவ்வாறு அவர்களுடன் பொறுமையாய் இருந்தார். முன் மகிமைக்கு ஆயத்தமாகி தமது இரக்கத்திற்கு உள்ளானவர்களான நமக்கு, மகிமையின் நிறைவைக் காண்பிக்கவே இப்படிச் செய்தார்.
24
இறைவன் யூதர்களிடமிருந்து மாத்திரமல்ல, யூதரல்லாதவர்களிடமிருந்தும் நம்மை அழைத்தார்.
25
இதைப்பற்றியே ஓசியாவின் புத்தகத்திலே, “நான் என்னுடைய மக்கள் அல்லாதவர்களை ‘என்னுடைய மக்கள்’ என்றும்; அன்பில்லாத ஒருத்தியை, ‘எனக்கு அன்பானவள்’ என்றும் அழைப்பேன்.”
26
மேலும், “ ‘நீங்கள் என்னுடைய மக்களல்ல’ என்று சொல்லப்பட்ட அதே இடத்தில், அவர்கள், ‘ஜீவனுள்ள இறைவனின் பிள்ளைகள்’ என்று அழைக்கப்படுவார்கள். இது நிகழும் என்று இறைவன் சொல்லுகிறார்” என்று எழுதப்பட்டுள்ளது.
27
இறைவாக்கினன் ஏசாயாவும் இஸ்ரயேலரைக் குறித்து, “இஸ்ரயேலர்களின் எண்ணிக்கை கடற்கரையின் மணலைப்போல் இருக்கிறது. ஆனால், மீதியாயிருக்கும் மக்கள் மாத்திரமே இரட்சிக்கப்படுவார்கள்.
28
ஏனெனில் கர்த்தர் பூமியின்மேல் விரைவாகவும், மனத்திடத்தோடும் தம்முடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவார்.”
29
ஏசாயா இன்னுமொரு இடத்தில் முன்னறிவித்திருக்கிறார், “எல்லாம் வல்ல கர்த்தர் நமக்கு சந்ததிகளாக சிலரை விட்டுவைக்காதிருந்தால், நாம் சோதோமைப் போலாகியிருப்போம், நாங்கள் கொமோராவுக்கு ஒத்தவர்களாயிருப்போம்.”
Settings