நியாயாதிபதிகள் 20:18-48
18
அப்பொழுது இஸ்ரயேலர் பெத்தேலுக்குப் போய் இறைவனிடம் விசாரித்தனர். “பென்யமீன் மக்களுடன் போர்புரிய எங்களில் யார் முதலில் போகவேண்டும்” என்று கேட்டார்கள். அதற்கு யெகோவா, “யூதா முதலில் போகட்டும்” எனப் பதிலளித்தார்.
19
மறுநாள் காலை இஸ்ரயேலர் எழுந்து கிபியாத்திற்கு அருகே முகாமிட்டார்கள்.
20
இஸ்ரயேலர் பென்யமீனியருடன் எதிர்த்துப் போரிடுவதற்கு கிபியாவிலே நிலைகொண்டார்கள்.
21
அன்று கிபியாவிலிருந்து வெளியேவந்த பென்யமீனியர், முனையில் நின்ற இருபத்து இரண்டாயிரம் இஸ்ரயேலரை வெட்டி வீழ்த்தினர்.
22
ஆனால் இஸ்ரயேல் மக்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக்கொண்டு முதல்நாள் போருக்கு நின்ற இடத்திலேயே திரும்பவும் நின்றனர்.
23
அன்று இஸ்ரயேலர் யெகோவாவுக்கு முன்பாக சாயங்காலம்வரை அழுது, “எங்கள் சகோதரர்களான பென்யமீனியருக்கு எதிராக போருக்கு நாங்கள் போகலாமா?” எனக் கேட்டனர். அதற்கு யெகோவா, “அவர்களை எதிர்த்துப் போங்கள்” எனப் பதிலளித்தார்.
24
எனவே இரண்டாவது நாள் இஸ்ரயேலர் பென்யமீனியரை எதிர்த்து நெருங்கிச் சென்றனர்.
25
இம்முறையும் பென்யமீனியர் கிபியாத்திலிருந்து அவர்களை எதிர்த்து வந்து, பதினெட்டாயிரம் இஸ்ரயேல் வீரர்களை வெட்டி வீழ்த்தினார்கள். அவர்கள் எல்லோரும் வாள் ஏந்தியவர்கள்.
26
அப்பொழுது இஸ்ரயேல் மனிதரும் எல்லா மக்களும் பெத்தேலில் ஒன்றுகூடி யெகோவாவிடம் அழுது கொண்டேயிருந்தார்கள். அன்று சாயங்காலம்வரை அவர்கள் உபவாசித்து, தகனபலியையும், சமாதான பலியையும் யெகோவாவுக்கு முன்பாகச் செலுத்தினார்கள்.
27
பின்பு இஸ்ரயேலர் யெகோவாவிடம் ஆலோசனை கேட்டார்கள். அந்நாட்களில் இறைவனின் உடன்படிக்கைப்பெட்டி அங்கே இருந்தது.
28
ஆரோனின் பேரனும் எலெயாசாரின் மகனுமான பினெகாஸ் ஆசாரியனாக பணியாற்றி வந்தான். அப்பொழுது அவர்கள், “நாங்கள் எங்கள் சகோதரர் பென்யமீனியருடன் திரும்பவும் போருக்குப் போகலாமா, வேண்டாமா?” எனக் கேட்டார்கள். அதற்கு யெகோவா, “போங்கள்; நான் அவர்களை நாளைக்கு உங்கள் கையில் ஒப்படைப்பேன்” என உறுதியளித்தார்.
29
அப்பொழுது இஸ்ரயேலர் கிபியாவைச் சுற்றிலும் பதுங்கியிருந்து தாக்கும், வீரர்களை அனுப்பினார்கள்.
30
மூன்றாவது நாளும் இஸ்ரயேலர் பென்யமீனியரை எதிர்த்துப் போய், முன்பு செய்ததுபோல் கிபியாவுக்கெதிராகத் தங்கள் இடங்களில் நிலைகொண்டார்கள்.
31
பென்யமீனியர் அவர்களை எதிர்கொள்ள தங்கள் பட்டணத்தைவிட்டு வெளியே வந்தனர். அவர்கள் பட்டணத்திற்கும் அப்பாலே போய் இஸ்ரயேலரைத் தாக்கி முன்புபோலவே அவர்களைக் கொன்றார்கள். இதனால் கிட்டத்தட்ட முப்பது மனிதர்கள் வயல்வெளிகளிலும், பெத்தேலுக்கும், கிபியாவுக்கும் போகும் பாதையிலும் விழுந்தனர்.
32
“நாம் முன்புபோலவே அவர்களைத் தோற்கடித்து ஓடச்செய்கிறோம்” என பென்யமீனியர் சொல்லிக்கொண்டார்கள். அப்பொழுது இஸ்ரயேலரோ, “அவர்களின் பட்டணத்தைவிட்டு வெளியே பாதைக்கு ஓடிவரப்பண்ண நாம் இன்னும் பின்வாங்கி ஓடுவோம்” என்றார்கள்.
33
அவ்வாறு எல்லா இஸ்ரயேலரும் தங்களது இடங்களிலிருந்து போய், பாகால் தாமாரில் திரும்பவும் நிலைகொண்டார்கள். உடனே இஸ்ரயேலின் பதுங்கியிருந்து தாக்கும் வீரர்கள் கிபியாவின் மேற்கு பகுதியிலுள்ள இடத்திலிருந்து திடீரென வெளியேறி தாக்கினார்கள்.
34
இஸ்ரயேலின் மிகத் திறமையான பத்தாயிரம் வீரர்கள் கிபியாவின்மேல் நேரடித்தாக்குதல் செய்தனர். சண்டையோ மிகவும் கடுமையாக இருந்ததால் தங்களுக்குப் பேராபத்து நெருங்கியிருப்பதை பென்யமீனியர் அறியாதிருந்தார்கள்.
35
யெகோவா பென்யமீனியரை இஸ்ரயேலருக்கு முன்பாக முறிடியத்தார். அன்று இருபத்தையாயிரத்து நூறு வாள் ஏந்தும் பென்யமீன் போர்வீரர்களை இஸ்ரயேல் வீரர்கள் வெட்டி வீழ்த்தினார்கள்.
36
அப்பொழுது பென்யமீனியர் தாங்கள் போரில் தோற்கடிக்கப்பட்டதைக் கண்டார்கள். இஸ்ரயேலரோ கிபியாவுக்கு அருகில் பதுங்கியிருந்து தாக்குபவர்களில் நம்பிக்கை வைத்ததால், பென்யமீனியருக்கு முன்பாகச் சிதறுண்டு ஓடுவதுபோல் காண்பித்தார்கள்.
37
அந்நேரத்தில் பதுங்கியிருந்து தாக்கும் வீரர்கள் மிக விரைவாக கிபியாவிற்குள் திடீரென போய், எங்கும் பரவி பட்டணம் முழுவதையும் வாளுக்கு இரையாக்கினார்கள்.
38
இஸ்ரயேலின் மனிதர்கள் பதுங்கியிருந்து தாக்குபவர்களிடம், பட்டணத்திலிருந்து பெரிய புகை மேகத்தை எழும்பப்பண்ணும்படியும்,
39
தாங்கள் அதைக் கண்டதும் ஓடுவதைவிட்டு திரும்பவும் அச்சண்டையில் ஈடுபடுவதாகவும் சொல்லியிருந்தார்கள். பென்யமீனியர் இஸ்ரயேல் மனிதரைத் தாக்கத் தொடங்கி, “நாம் முந்தின யுத்தத்தில் நடந்ததுபோலவே அவர்களைத் தோற்கடிக்கிறோம்” என்று சொல்லி இஸ்ரயேலில் முப்பது பேரை வெட்டிப்போட்டனர்.
40
ஆனால் பட்டணத்திலிருந்து புகைத்திரள் மேலெழும்பியதை திரும்பிப் பார்த்த பென்யமீனியர் பட்டணம் முழுவதிலிருந்தும் புகை வானத்தை நோக்கிப் போவதைக் கண்டார்கள்.
41
அவ்வேளையில் இஸ்ரயேலின் மனிதர்கள் பென்யமீனியரைத் தாக்குவதற்குத் திரும்பினார்கள். ஆகவே தங்களுக்கு பேராபத்து நேரிட்டதை பென்யமீனியர் கண்டு திகிலடைந்தார்கள்.
42
எனவே அவர்கள் இஸ்ரயேலருக்கு முன்பாக பாலைவனத்திற்கு தப்பியோடினார்கள். ஆனால் அவர்களால் யுத்தத்திலிருந்து தப்பியோட முடியவில்லை. பட்டணத்திலிருந்து வெளியேவந்த இஸ்ரயேல் மனிதர்கள் அங்கே அவர்களை வெட்டி வீழ்த்தினார்கள்.
43
இஸ்ரயேலர் பென்யமீனியரைச் சுற்றிவளைத்து, அவர்களைத் துரத்தி கிழக்குப் பக்கத்திலுள்ள கிபியாவின் சுற்றுப்புறத்திலே அவர்களை இலகுவாக அழித்துப்போட்டனர்.
44
அவ்விடத்திலே பதினெட்டாயிரம் பென்யமீனியர் விழுந்து மடிந்தனர்; எல்லோரும் போர்வீரர்கள்.
45
பென்யமீனியர் பாலைவனத்திலே ரிம்மோன் மலையை நோக்கித் தப்பியோட, வழியிலே இஸ்ரயேலர் ஐயாயிரம் பேரை வெட்டினர். மற்றவர்களை கீதோம்வரை பின்தொடர்ந்து போய், அவர்களிலும் இரண்டாயிரம் பேரை வெட்டிப்போட்டனர்.
46
இவ்விதமாக அந்நாளில் இருபத்தையாயிரம் பென்யமீனிய வாள் ஏந்தும் வீரர்கள் மடிந்தனர். இவர்கள் எல்லோரும் திறமைமிக்க வீரர்கள்.
47
ஆனால் அறுநூறு மனிதர் ரிம்மோன் காடுகளிலுள்ள மலைக்கு ஓடிப்போய் அங்கே நான்கு மாதங்கள் தங்கியிருந்தனர்.
48
இஸ்ரயேல் மனிதர்கள் பென்யமீன் நாட்டிற்குத் திரும்பிச்சென்று, அங்கிருந்த மிருகங்கள் உட்பட தாங்கள் கண்ட எல்லாவற்றையும் வாளால் வெட்டினர். அவர்கள் வழியிலுள்ள பட்டணங்களுக்கெல்லாம் நெருப்பு வைத்தனர்.
Settings