1 சாமுயேல் 14:1-23
1
ஒரு நாள் சவுலின் மகன் யோனத்தான் தன் ஆயுதங்களைச் சுமக்கும் வாலிபனிடம், “எதிர்ப்பக்கமாக இருக்கும் பெலிஸ்தியரின் தடைமுகாமுக்குப் போவோம் வா” என்றான். அதை அவன் தன் தகப்பனுக்குத் தெரிவிக்கவில்லை.
2
சவுல் கிபியாவின் சுற்றுப்புறத்திலே மிக்ரோனிலுள்ள ஒரு மாதுளை மரத்தின்கீழ் இருந்தான். அவனுடன் ஏறக்குறைய அறுநூறு பேர் இருந்தார்கள்.
3
அவர்களில் ஏபோத்தை அணிந்திருந்த அகியாவும் இருந்தான். அவன் இக்கபோத்தின் சகோதரனான அகிதூபின் மகன். அகிதூப் பினெகாசின் மகன். பினெகாஸ் சீலோவிலே யெகோவாவின் ஆசாரியனாயிருந்த ஏலியின் மகன். யோனத்தான் புறப்பட்டுப் போனதை யாரும் அறியவில்லை.
4
யோனத்தான் பெலிஸ்தியரின் தடைமுகாமுக்குப் போவதற்கு கடந்துபோக முயன்ற அந்த கணவாயின் இரு பக்கங்களிலும், செங்குத்தான கற்பாறைகள் இருந்தன. அதில் ஒன்று போசேஸ் என்றும், மற்றது சேனே என்றும் அழைக்கப்பட்டது.
5
அந்த கற்பாறையிலொன்று மிக்மாசை நோக்கி வடக்கு பக்கமாகவும், மற்றது கிபியாவை நோக்கி தெற்கு பக்கமாகவும் இருந்தது.
6
அப்பொழுது யோனத்தான் தன் ஆயுதம் சுமக்கும் வாலிபனிடம், “விருத்தசேதனம் செய்யாதவர்களின் தடைமுகாமுக்குப் போவோம் வா, ஒருவேளை யெகோவா, நம் சார்பாகச் செயலாற்றுவார். சிலர் மூலமோ, பலர் மூலமோ மீட்க, யெகோவாவிற்கு யாதொன்றும் தடையாயிராது” என்றான்.
7
அதற்கு ஆயுதம் சுமப்போன், “உம்முடைய மனவிருப்பப்படியே செய்யும். முன்செல்லும் நீர் செய்வது எல்லாவற்றிலும் நானும் உம்மோடுகூட மனப்பூர்வமாய் இருப்பேன்” என்றான்.
8
அப்பொழுது யோனத்தான் அவனிடம், “அப்படியானால் வா. நாம் கடந்து அந்த மனிதரை நோக்கிப் போவோம். அவர்கள் நம்மைக் காணட்டும்.
9
அப்பொழுது அவர்கள், ‘நாங்கள் உங்களிடம் வரும்வரையும் அங்கேயே நில்லுங்கள்’ என்று சொல்வார்களேயானால் நாங்கள் அவர்களிடம் போகாமல் நின்ற இடத்திலேயே நிற்போம்.
10
ஆனால், ‘எங்களிடம் ஏறி வாருங்கள்’ என்று சொல்வார்களேயானால், நாங்கள் அவர்களிடம் ஏறிப்போவோம். யெகோவா அவர்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதற்கு அதுவே நமக்கு அடையாளம்” என்றான்.
11
அப்படியே அவர்கள் இருவரும் தடைமுகாமிலிருந்த பெலிஸ்தியருக்கு தங்களைக் காண்பித்தார்கள். அப்பொழுது பெலிஸ்தியர், “பாருங்கள்! எபிரெயர் தாங்கள் ஒளித்திருந்த கிடங்குகளிலிருந்து தவழ்ந்து வெளியே வருகிறார்கள்” எனத் தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டனர்.
12
அப்பொழுது தடைமுகாமிலிருந்தவர்கள் யோனத்தானையும், அவனுடைய ஆயுதங்கள் சுமப்பவனையும் கூப்பிட்டு, “இங்கே ஏறி வாருங்கள். உங்களுக்கு ஒரு பாடம் படிப்பிப்போம்” என்றார்கள். அதைகேட்ட யோனத்தான் ஆயுதம் சுமப்பவனிடம், “யெகோவா அவர்களை இஸ்ரயேலரின் கைகளில் கொடுத்துவிட்டார். என்னைப் பின்தொடர்ந்து ஏறி வா” என்றான்.
13
யோனத்தான் கைகளாலும், கால்களாலும் ஊர்ந்து ஏறினான். அவனுடைய ஆயுதம் சுமப்பவனும் அவனுக்குப் பின்னால் ஏறினான். யோனத்தானால் தாக்கப்பட்டு பெலிஸ்தியர் விழுந்தார்கள். அவனைத் தொடர்ந்து வந்த ஆயுதம் சுமப்பவனும் அவர்களை வெட்டிக்கொன்றான்.
14
அந்த முதல் தாக்குதலின்போது யோனத்தானும், ஆயுதம் சுமப்பவனும் அரை ஏக்கர் நிலப்பகுதியில் ஏறக்குறைய இருபதுபேரைக் கொன்றார்கள்.
15
அப்பொழுது முகாமுக்குள்ளும், வெளியிலும், தடைமுகாமிலும், திடீரெனத் தாக்கும் குழுவிலுள்ள எல்லாப் படைவீரர்களுக்குமே பீதி ஏற்பட்டது. அவ்வேளையில் நிலம் அதிர்ந்தது. இது இறைவனால் அனுப்பப்பட்ட பயங்கரம்.
16
பெலிஸ்தியப் படை எல்லாப் பக்கங்களிலும் சிதறி ஓடிக் குறைந்து போவதை பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவில் இருந்த சவுலின் காவற்காரர் கண்டனர்.
17
அப்பொழுது சவுல் தன்னுடன் இருந்த வீரர்களிடம், “நம்மிடமிருந்தவர்களில் யார் எங்களைவிட்டுப் போய்விட்டார்கள் என்று கணக்கிட்டுப் பாருங்கள்” என்றான். அப்படியே அவர்கள் கணக்கிட்டுப் பார்த்தபோது, யோனத்தானும் அவனுடைய ஆயுதம் சுமப்பவனும் இல்லையென்று கண்டார்கள்.
18
எனவே சவுல் அகியாவிடம், “இறைவனுடைய பெட்டியை இங்கே கொண்டுவா” என்றான். அந்நாட்களில் அது இஸ்ரயேலரிடமே இருந்தது.
19
இவ்வாறு சவுல் ஆசாரியனோடு பேசிக்கொண்டிருக்கையில் பெலிஸ்தியரின் முகாமிலிருந்து வந்த அமளி சத்தம் மென்மேலும் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. எனவே சவுல் ஆசாரியனிடம், “உன் கையை எடுத்துவிடு” என்றான்.
20
எனவே சவுலும் அவனோடிருந்த எல்லா மனிதரும் ஒன்றுகூடி யுத்தத்திற்குச் சென்றார்கள். பெலிஸ்தியர் முற்றுமாய் குழப்பமடைந்து ஒருவரையொருவர் தாங்களே வாள்களினால் தாக்கிக்கொள்வதை இஸ்ரயேலர் கண்டார்கள்.
21
இவ்வேளையில் முன்பு பெலிஸ்தியருடன் வாழ்ந்த எபிரெயர், அவர்களுடன் அவர்களின் முகாமுக்குச் சென்றிருந்தார்கள். ஆனால் இப்பொழுதோ எபிரெயர் மாறி சவுலோடும் யோனத்தானோடுமிருந்த இஸ்ரயேலருடன் போய் சேர்ந்துகொண்டார்கள்.
22
அதோடு பெலிஸ்தியருக்குப் பயந்து எப்பிராயீம் மலைநாட்டில் ஒளித்திருந்த இஸ்ரயேலர் யாவரும், பெலிஸ்தியர் சிதறி ஓடுகிறார்களென்று கேள்விப்பட்டதும் யுத்தத்தில் இணைந்து பெலிஸ்தியரைப் பிடிக்க பின்தொடர்ந்து சென்று அவர்களைத் தாக்கினார்கள்.
23
இவ்விதமாய் அன்றையதினம் யெகோவா இஸ்ரயேலரை மீட்டுக்கொண்டார். இந்த யுத்தமோ பெத் ஆவெனுக்கு அப்பாலும் நகர்ந்தது.
Settings