வெளிப்படுத்தல்17
Listen to this chapter
0:00
0:00
1
ஏழு கிண்ணங்களை வைத்திருந்த அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடம் வந்து, “நீ வா, அநேக நீர்நிலைகளின்மேல் உட்கார்ந்திருக்கிற மாபெரும் வேசிக்குக் கிடைக்கப்போகும் தண்டனையை நான் உனக்குக் காண்பிப்பேன்.
2
அவளுடன் பூமியின் அரசர்கள் எல்லாம் விபசாரம் செய்தார்கள்; பூமியில் குடியிருக்கிறவர்கள் அவளுடைய விபசாரத்தின் திராட்சை மதுவினால் போதையுற்றிருந்தார்கள்” என்றான்.
3
பின்பு தூதன் என்னை ஆவியானவரில் ஆட்கொள்ளப்பட்ட நிலையில், பாலைவனத்திற்குக் கொண்டுசென்றான். அங்கே ஒரு பெண் ஒரு சிவப்பான மிருகத்தின்மேல் உட்கார்ந்திருப்பதை நான் கண்டேன். அந்த மிருகம் இறைவனை அவமதிக்கும் பெயர்களால் மூடப்பட்டிருந்தது. அந்த மிருகத்திற்கு ஏழு தலைகளும் பத்து கொம்புகளும் இருந்தன.
4
அந்தப் பெண் ஊதாநிற உடையையும், சிவப்புநிற உடையையும் உடுத்தியிருந்தாள். தங்கத்தினாலும், மாணிக்கக் கற்களினாலும், முத்துக்களினாலும் அவள் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். அருவருப்பான காரியங்களினாலும், அவளுடைய விபசாரத்தின் அசிங்கங்களினாலும் நிறைந்த ஒரு தங்கக் கிண்ணத்தை அவள் தனது கையில் வைத்திருந்தாள்.
5
அவளுடைய நெற்றியிலே எழுதப்பட்டிருந்த பெயர் ஒரு இரகசியமாயிருந்தது: மாபெரும் பாபிலோன், வேசிகளுக்கும் பூமியின் எல்லா அருவருப்புகளுக்கும் தாய்.
6
அந்தப் பெண் பரிசுத்தவான்களின் இரத்தத்தினால் வெறிகொண்டிருந்ததை நான் கண்டேன். அதாவது இயேசுவுக்கு சாட்சிகளாய் இருந்தவர்களின் இரத்தமே. நான் அவளைக் கண்டு மிகவும் வியப்படைந்தேன்.
7
அப்பொழுது அந்தத் இறைத்தூதன் என்னிடம்: “நீ ஏன் வியப்படைகிறாய்? அந்தப் பெண்ணையும், அவள் ஏறியிருக்கிற ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளுமுள்ள மிருகத்தையும் பற்றிய இரகசியத்தை நான் உனக்கு விளக்கிச்சொல்லுவேன்.
8
நீ கண்ட அந்த மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; ஆனால், அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, தன் அழிவுக்குச் செல்லும். அந்த மிருகத்தை உலகம் படைக்கப்பட்டதிலிருந்து, ஜீவப் புத்தகத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்டிராதவர்களாய், பூமியில் குடிகள், காணும்போது வியப்படைவார்கள். ஏனெனில், அது முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை, ஆனால் இனி அது வரும்.
9
“இதை விளங்கிக்கொள்ள ஞானமுள்ள மனம் தேவை. அந்த ஏழு தலைகளும் அந்தப் பெண் உட்கார்ந்திருக்கின்ற ஏழு மலைகளாம்.
10
அவை ஏழு அரசர்களாம்; அவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள்; ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை. ஆனால் அவனது அரசு, சிறிதுகாலம் மட்டுமே நிலைத்திருக்கும்.
11
முன்னே இருந்ததும், இராததுமாகிய அந்த மிருகமே எட்டாவது அரசனாயிருக்கிறது. அவன் அந்த ஏழு அரசர்களுள் ஒருவனான அவனும் அழிந்துவிடுவான்.
12
“நீ கண்ட பத்துக் கொம்புகள் இன்னும் அரசைப் பெற்றுக்கொள்ளாத பத்து அரசர்கள்; ஆனால் அவர்கள் ஒருமணி நேரத்திற்கு அந்த மிருகத்துடனே அரசர்களாக அதிகாரம் பெறுவார்கள்.
13
அவர்கள் ஒரே நோக்குடையவர்களாயிருந்து. அவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் அந்த மிருகத்திற்குக் கொடுப்பார்கள்.
14
அவர்கள் ஆட்டுக்குட்டியானவருக்கு எதிராக யுத்தம் செய்வார்கள். ஆனால் ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் அரசர்களுக்கு அரசருமாய் இருக்கிறபடியால் வெற்றிகொள்வார். அவரோடுகூட இருக்கிறவர்கள் இறைவனால் அழைக்கப்பட்டு, தெரிந்துகொள்ளப்பட்டு, உண்மையுள்ளவர்களுமாய் இருப்பவர்களும் வெற்றிகொள்வார்கள்” என்றான்.
15
மறுபடியும் அந்தத் இறைத்தூதன் என்னிடம், “அந்த வேசிப்பெண் உட்கார்ந்திருந்த இடத்தில், நீ கண்ட அந்த நீர்த்திரள் மக்கள் கூட்டங்களையும், மக்கள் திரளையும், நாட்டினரையும், மொழியினரையும் குறிக்கின்றன.
16
நீ கண்ட மிருகமும் அந்த பத்துக் கொம்புகளும் அந்த வேசியை வெறுக்கின்றன. அவை அவளை அழித்து, அவளை நிர்வாணமாக்கும்; அவை அவளுடைய சதையைத் தின்று, அவளை நெருப்பினால் சுட்டெரிக்கும்.
17
ஏனெனில், இறைவன் தமது நோக்கத்தை நிறைவேற்றும்படியாக, இந்த எண்ணத்தை அவர்களுடைய இருதயங்களில் கொடுத்தார். அதனாலேயே, அவர்கள் எல்லோரும் அந்த மிருகத்திற்குத் தங்களது ஆட்சிசெய்யும் வல்லமையைக் கொடுக்க உடன்பட்டார்கள். இறைவனுடைய வார்த்தைகள் நிறைவேறுமளவும் அவர்களுடைய உடன்பாடு நீடிக்கும்.
18
நீ கண்ட அந்தப் பெண் பூமியின் அரசர்கள்மேல் ஆட்சி செலுத்துகிற மாபெரும் நகரத்தைக் குறிக்கிறாள்” என்றான்.
Use ← → arrow keys to navigate
Settings
Reading Style
Typeface
Font Size px
Options
Study Note