Skip to content

கொலோசேயர்2

1
உங்களுக்காகவும், லவோதிக்கேயா பட்டணத்தில் இருக்கிறவர்களுக்காகவும், இன்னும் நேரடியாக என்னைச் சந்தித்திராத மற்றெல்லோருக்காகவும், நான் எவ்வளவாய் போராடுகிறேன் என்பதை நீங்கள் அறியவேண்டும் என நான் விரும்புகிறேன்.
2
நீங்களும் அவர்களும் இருதயத்தில் உற்சாகமடைந்தவர்களாய், அன்பினால் ஐக்கியப்பட்டிருக்கவேண்டும் என்பதே என் நோக்கம். இதனால் நீங்கள் முழுமையான விளக்கத்தை நிறைவாகப் பெற்று, இறைவனுடைய இரகசியத்தை அறிந்துகொள்வீர்கள். அந்த இரகசியம் கிறிஸ்துவே.
3
ஞானம், அறிவு ஆகிய செல்வங்கள் எல்லாம் கிறிஸ்துவுக்குள்ளேயே மறைந்திருக்கின்றன.
4
மனதைக் கவரும் விவாதங்களினால் ஒருவரும் உங்களை ஏமாற்றாதபடிக்கே நான் இதை உங்களுக்குச் சொல்கிறேன்.
5
உடலால் நான் உங்களுடன் இல்லாதிருந்தாலும், ஆவியில் நான் உங்களுடனேயே இருக்கிறேன். நீங்கள் எவ்வளவு ஒழுங்குள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என்பதையும், கிறிஸ்துவில் நீங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தில் எவ்வளவு உறுதி உள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என்பதையும் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
6
எனவே கிறிஸ்து இயேசுவை நீங்கள் கர்த்தராய் ஏற்றுக்கொண்டபடியே, அவரில் தொடர்ந்து வாழுங்கள்.
7
நீங்கள் அவரில் வேரூன்றி கட்டி எழுப்பப்பட்டவர்களாகவும் இருங்கள், உங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது போலவே விசுவாசத்தில் பெலன் கொண்டவர்களாயும், நன்றி மிக்கவர்களாயும் வாழுங்கள்.
8
தங்களுடைய வெறுமையான, ஏமாற்றும் தத்துவ ஞானத்தினால், ஒருவனும் உங்களை சிக்கவைக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். இவை மனித பாரம்பரியத்திலும், உலக அடிப்படைக் கொள்கையிலுமே தங்கியிருக்கின்றன. இவை கிறிஸ்துவை அடிப்படையாகக் கொண்டவையல்ல.
9
ஏனெனில் இறைவனின் முழுநிறைவும் மனித உடலின்படி கிறிஸ்துவில் குடிகொண்டிருக்கிறது.
10
ஆதலால் நீங்களும் கிறிஸ்துவில் நிறைவு பெற்றவர்களாய் இருக்கிறீர்கள். அவரே எல்லா வல்லமைகளுக்கும், அதிகாரங்களுக்கும் மேலாக தலைவராய் இருக்கிறார்.
11
நீங்கள் உங்கள் மாம்ச இயல்பை அகற்றிப்போட்டதினால், நீங்களும் கிறிஸ்துவில் விருத்தசேதனத்தைப் பெற்றீர்கள். இந்த விருத்தசேதனம் மனிதருடைய கைகளினால் செய்யப்பட்டது அல்ல. இது கிறிஸ்துவினாலேயே செய்யப்பட்டது.
12
திருமுழுக்கினால் நீங்கள் அவருடன் அடக்கம்பண்ணப்பட்டு, இறைவனுடைய வல்லமையில் விசுவாசத்தின் மூலமாக, அவருடனேகூட எழுப்பப்பட்டும் இருக்கிறீர்கள். இறைவனே இறந்தோரிடத்தில் இருந்து கிறிஸ்துவை உயிருடன் எழுப்பினார்.
13
நீங்கள் உங்கள் பாவங்களிலேயும், மாம்சத்தின்படி விருத்தசேதனம் செய்யப்படாததிலேயும் இறந்தவர்களாய் இருக்கையில், இறைவன் உங்களைக் கிறிஸ்துவுடன் உயிர்ப்பித்தார். அவர் நம்முடைய பாவங்களையெல்லாம் மன்னித்தார்.
14
நமக்கு விரோதமாய் எழுதப்பட்டிருந்த கட்டளைகளைக்கொண்ட கடன் பத்திரத்தை அவர் நீக்கி, அதைச் சிலுவையில் ஆணியடித்து இல்லாமல் அழித்துவிட்டார்.
15
அவர் ஆளும் வல்லமைகளிடமிருந்தும், அதிகாரங்களிடமிருந்தும் அவற்றின் வல்லமைகளைக் களைந்து, சிலுவையினால் அவற்றின்மேல் வெற்றிகொண்டு, அவற்றைப் பகிரங்கக் காட்சிப் பொருளாக்கினார்.
16
எனவே நீங்கள் சாப்பிடுவது, குடிப்பது என்பவைகளைக் குறித்தோ, பண்டிகைகளையும், அமாவாசைகளையும், ஓய்வுநாட்களையும் குறித்தோ, ஒருவரும் உங்களை குற்றப்படுத்தாமல் இருக்கவேண்டும்.
17
இவையெல்லாம் வரவேண்டியிருந்த காரியங்களின் வெறும் நிழலே; உண்மைப் பொருளோ கிறிஸ்துவில் காணப்படுகின்றது.
18
பொய்யான தாழ்மையிலும், இறைவனின் தூதர்களை ஆராதனை செய்வதிலும் மகிழ்கிற அவர்களால், நீங்கள் உங்கள் வெகுமதியைப் பெற்றுக்கொள்வதை இழந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படிப்பட்டவன் தான் கண்ட தரிசனங்களைக்குறித்து, அதிகமாய் விவரித்துச் சொல்கிறான். ஆவிக்குரிய தன்மையற்ற அவனுடைய மனம் வீணான சிந்தனைகளில் பெருமைகொள்கிறது.
19
இப்படிப்பட்டவன் தலையாகிய கிறிஸ்துவிலிருந்து தொடர்பை இழந்துவிட்டான். அவரிடமிருந்தே மூட்டுக்களினாலும் தசைநார்களினாலும் தாங்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டிருக்கிற முழு உடலும், இறைவன் வளர்ச்சியைக் கொடுக்க, அது வளர்ச்சியைப் பெறுகிறது.
20
நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு இறந்தீர்கள். அப்படியானால் நீங்கள் அதற்கு இன்னும் உட்பட்டவர்கள்போல் உலகத்தின் கட்டளைகளுக்கு ஏன் கீழ்ப்படிகிறீர்கள்?
21
“பயன்படுத்தாதே! ருசிபாராதே! தொடாதே!”
22
இவையெல்லாம் காலப்போக்கில் ஒழிந்துபோகின்றனவே. ஏனெனில் இவை மனிதருடைய கட்டளைகளையும், போதனைகளையும் அடிப்படையாகக் கொண்டவை.
23
அவர்களுடைய இந்தக் கட்டளைகள், தாங்களே தங்கள்மேல் திணித்துக் கொண்ட வழிபாட்டையும், பொய்த் தாழ்மையையும், உடல் ஒடுக்குதல்களையும் பொறுத்தவரையில் ஞானமானதுபோல் தோன்றலாம். ஆனால் உடல் ஆசைகளை அடக்கி ஆள்வதற்கு இவை பயனற்றது.
Use arrow keys to navigate
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options