Skip to content

Rechabites பற்றிய பைபிள் வசனங்கள்

15 வசனங்கள் · 7 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

  1. யெகூ அந்த இடத்தைவிட்டுப் போனபின்பு, வழியில் தன்னைச் சந்திப்பதற்காக வந்துகொண்டிருந்த ரேகாபின் மகன் யோனதாபைச் சந்தித்தான். யெகூ அவனுக்குத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்து அவனை நோக்கி, “நான் உன்னோடே இணக்கமாய் இருப்பதுபோல, நீயும் என்னோடு இணக்கமாய் இருக்கிறாயா?” என்று கேட்டான். அதற்கு யோனதாப், “ஆம்” என்றான். அப்பொழுது யெகூ, “அப்படியானால் உனது கையைத் தா” என்றான். யோனதாப் தன் கையைக் கொடுத்தபோது யெகூ அவனைத் தன் தேரில் ஏற்றிக்கொண்டான்.

  2. யெகூ அவனைப் பார்த்து, “இப்போது என்னுடன் வந்து யெகோவாவுக்காக நான் கொண்டிருக்கும் பக்தி வைராக்கியத்தைப் பாரும்” என்று கூறி தேரில் அவனைக் கூட்டிக்கொண்டு போனான்.

  3. யெகூ சமாரியாவுக்குப் போனபோது அங்கே ஆகாபின் குடும்பத்தில் இன்னும் மீதியாயிருந்த எல்லோரையும் கொன்றான். யெகோவா எலியாவுக்குக் கூறிய வாக்கின்படியே அவர்களை அழித்தான்.

  4. அத்துடன் யாபேஸில் குடியிருந்த எழுத்தாளரின் வம்சங்கள்: திராத்தியர், சிமாத்தியர், சுக்காத்தியர். இவர்கள் ஆமாத்திலிருந்து வந்த ரேகாப்பின் தகப்பனின் சந்ததியான கேனியர்.

  5. ஆனால் அவர்களோ, “நாங்கள் திராட்சரசம் குடிப்பதில்லை; ஏனெனில், எங்கள் முற்பிதாவான ரேகாபின் மகன் யோனதாப் எங்களிடம், ‘நீங்களாவது உங்கள் சந்ததிகளாவது ஒருபோதும் திராட்சரசம் குடிக்கக்கூடாது’ என்று எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார் எனப் பதிலளித்தனர்.

  6. அத்துடன் நீங்கள் ஒருபோதும் வீடுகளைக் கட்டவோ, விதையை விதைக்கவோ, திராட்சைத் தோட்டங்களை நாட்டவோ வேண்டாம். இவற்றில் ஒன்றையும் உங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ளவும் வேண்டாம். ஆனால் எப்பொழுதும் கூடாரங்களிலேயே வசிக்கவேண்டும். அப்பொழுது நீங்கள் நாடோடிகளாய் இருக்கும் நாட்டில் நீடித்த நாட்களுக்கு வாழ்வீர்கள் என்று கட்டளையிட்டிருக்கிறார் என்றார்கள்.

  7. நாங்கள் எங்கள் முற்பிதாவான ரேகாபின் மகன் யோனதாப் கட்டளையிட்ட எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிந்திருக்கிறோம். நாங்களோ, எங்கள் மனைவிகளோ, எங்கள் மகன்களோ, மகள்களோ ஒருபோதும் திராட்சரசம் குடித்ததில்லை.

  8. அப்பொழுது யெகோவாவினுடைய வார்த்தை எரேமியாவுக்கு வந்தது:

  9. “இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே; நீ யூதா மனிதரிடமும், எருசலேமின் மக்களிடமும் போய் சொல்லவேண்டியதாவது: ‘நீங்கள் என் வார்த்தைகளைக் கேட்கமாட்டீர்களோ? என் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிய மாட்டீர்களோ?’ என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல்.

  10. ‘ரேகாபின் மகன் யோனதாப் திராட்சரசம் குடிக்க வேண்டாமென்று தன் மகன்களுக்கு இட்ட கட்டளை கைக்கொள்ளப்படுகிறது. அவர்கள் தங்கள் முற்பிதாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தபடியினால், இன்றுவரை அவர்கள் திராட்சரசம் குடிப்பதில்லை. ஆனால் நானோ திரும்பத்திரும்ப உங்களுடன் பேசியிருந்தும், நீங்களோ கீழ்ப்படியவில்லை.

  11. நான் இறைவாக்கு உரைக்கும் என்னுடைய எல்லா ஊழியக்காரரையும் உங்களிடம் திரும்பத்திரும்ப அனுப்பினேன். அவர்கள் உங்களிடம், “நீங்கள் ஒவ்வொருவனும் தன்தன் தீமையான வழியைவிட்டுத் திரும்பி, உங்கள் செயல்களைச் சீர்படுத்துங்கள்; அந்நிய தெய்வங்களை வழிபடுவதற்காக அவைகளைப் பின்பற்றவேண்டாம். அப்பொழுது நான் உங்களுக்கும் உங்கள் தந்தையர்களுக்கும் கொடுத்த நாட்டில் வாழ்வீர்கள்” என்று சொன்னார்கள். ஆனால் நீங்களோ, என் வார்த்தைகளைக் கவனிக்கவுமில்லை, கேட்கவுமில்லை.

  12. ரேகாபின் மகன் யோனதாபின் சந்ததிகள் தங்கள் முற்பிதா தங்களுக்குக் கொடுத்த கட்டளையின்படி நடக்கிறார்கள். ஆனால் இந்த மக்களோ எனக்குக் கீழ்ப்படியவில்லை.’

  13. “ஆகையால் இஸ்ரயேலின் இறைவனும், சேனைகளின் இறைவனுமாகிய யெகோவா சொல்வது இதுவே: ‘கேளுங்கள்! யூதாவின்மேலும், எருசலேமில் வாழும் ஒவ்வொருவர்மேலும் அவர்களுக்கெதிராக நான் அறிவித்த பேராபத்து ஒவ்வொன்றையும் கொண்டுவரப் போகிறேன். நான் அவர்களுடன் பேசினேன். அவர்களோ கேட்கவில்லை; நான் அவர்களை அழைத்தேன். அவர்களோ பதிலளிக்கவில்லை.’ ”

  14. அதன்பின் எரேமியா ரேகாபியரின் குடும்பத்தாரிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: ‘நீங்கள் உங்கள் முற்பிதாவான யோனதாபின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அவனுடைய எல்லா அறிவுறுத்தல்களையும் பின்பற்றி, அவனுடைய கட்டளைகள் எல்லாவற்றையும் கைக்கொண்டிருக்கிறீர்கள்.’

  15. ஆகவே இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: ‘எனக்குப் பணிசெய்ய ரேகாபின் மகன் யோனதாபிற்கு ஒரு மனிதனாவது ஒருபோதும் இல்லாமல் போவதில்லை’ என்கிறார்” என்றான்.