Egypt பற்றிய பைபிள் வசனங்கள்: Armies destroyed by Babylon
Armies destroyed by Babylon பற்றிய வசனங்கள்
எகிப்தைப் பற்றியது: எகிப்திய அரசன் பார்வோன் நேகோவின் படைக்கு விரோதமான செய்தி இதுவே: அந்தப் படையை பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் யூப்ரட்டீஸ் நதியண்டையில் கர்கேமிசில் தோற்கடித்திருந்தான். இது யூதா அரசனான யோசியாவின் மகன் யோயாக்கீமின் நான்காம் வருடத்தில் நிகழ்ந்தது.
“பெரிதும் சிறிதுமான உங்கள் கேடயங்களை ஆயத்தம்பண்ணி, யுத்தத்திற்கு அணிவகுத்துச் செல்லுங்கள்!
குதிரைகளுக்குச் சேணம் கட்டி அவைகளின்மேல் ஏறுங்கள். தலைக்கவசங்களை அணிந்துகொண்டு, உங்களுடைய இடங்களில் நிலைகொள்ளுங்கள். உங்கள் ஈட்டிகளை பளபளப்பாக்கி யுத்த கவசங்களை அணிந்துகொள்ளுங்கள்.
ஆனால் நான் காண்பது என்ன? அவர்கள் திகிலடைகிறார்களே! அவர்கள் பின்வாங்குகிறார்களே! அவர்களுடைய இராணுவவீரர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்களே! அவர்கள் திரும்பிப் பாராமல் விரைந்து தப்பி ஓடுகிறார்களே! எல்லாப் பக்கங்களிலும் பயங்கரம் இருக்கிறது” என்று யெகோவா அறிவிக்கிறார்.
“வேகமாக ஓடுகிறவர்களால் தப்பியோட முடியவில்லை; வலிமை மிக்கவர்களால் தப்பமுடியவில்லை. வடக்கே யூப்ரட்டீஸ் நதிக்கு அருகில் இடறி விழுகிறார்கள்.
“நைல் நதியைப்போலவும், நீர் பெருக்கெடுக்கும் ஆறுகளைப்போலவும் எழும்புவது யார்?
நைல் நதியைப்போலவும், நீர் பெருக்கெடுக்கும் ஆறுகளைப்போலவும் எகிப்து எழும்புகிறது. அவள், ‘நான் எழும்பி பூமியை மூடுவேன்; பட்டணங்களையும், அவைகளின் மக்களையும் அழிப்பேன்’ என்கிறாள்.
குதிரைகளே! ஓடுங்கள், தேரோட்டிகளே, ஆவேசத்துடன் ஓட்டுங்கள்! கேடயம் பிடிக்கும் எத்தியோப்பியரே, பூத்தியரே, வில்லை நாணேற்றும் லூதீமியரே, வல்லமைமிக்க வீரர்களே, அணிவகுத்துச் செல்லுங்கள்.
அந்த நாளோ, ஆண்டவராகிய, சேனைகளின் யெகோவாவுக்கு உரியது. அது பழிவாங்கும் நாள். அவர் தமது பகைவரை பழிவாங்கும் நாள். அந்நாளில் வாள், தான் திருப்தியடையும் வரைக்கும், தன் தாகத்தை இரத்தத்தினால் தீர்த்துக்கொள்ளும். ஏனெனில் ஆண்டவராகிய, சேனைகளின் யெகோவாவுக்கு வடநாட்டில் யூப்ரட்டீஸ் நதியருகே ஒரு பலியும் உண்டு.
“எகிப்தின் கன்னி மகளே! நீ கீலேயாத்திற்குப்போய் தைலம் வாங்கு. நீயோ வீணாகவே மருந்துகளை அதிகரிக்கிறாய். நீ குணமடையவே மாட்டாய்.
எல்லா மக்களும் உன் வெட்கத்தைக் குறித்துக் கேள்விப்படுவார்கள். உன் அழுகையின் குரல் பூமியை நிரப்பும். ஒரு இராணுவவீரன் இன்னொரு இராணுவவீரன்மேல் இடறி, இருவரும் சேர்ந்து ஒன்றாய் விழுவார்கள்” என்றான்.