God
God பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் இறைவன் நமக்கு கோட்டையாய் இருக்கிறார்.
யெகோவாவினுடைய செயல்களையும் அவர் பூமியின்மேல் கொண்டுவந்த அழிவுகளையும் வந்து பாருங்கள்.
யெகோவா பூமியின் கடைசிவரை யுத்தங்களை நிறுத்துகிறார்; அவர் வில்லை முறித்து, ஈட்டியை நொறுக்குகிறார்; கேடயங்களை நெருப்பினால் எரிக்கிறார்.
யெகோவா சொல்கிறார், “நீங்கள் அமைதியாய் இருந்து நானே இறைவன் என்று அறிந்துகொள்ளுங்கள். நான் நாடுகளுக்கு மத்தியில் புகழ்ந்து உயர்த்தப்படுவேன், நான் பூமியிலே புகழ்ந்து உயர்த்தப்படுவேன்.”
சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் இறைவன் நமக்கு கோட்டையாய் இருக்கிறார்.
கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம். நாடுகளே, நீங்கள் எல்லோரும் உங்கள் கைகளைத் தட்டுங்கள்; மகிழ்ச்சியின் சத்தத்துடன் ஆர்ப்பரித்து இறைவனைத் துதியுங்கள்.
உன்னதமானவராகிய யெகோவா அச்சத்திற்கு உரியவர், அவர் பூமி முழுவதற்கும் மகா அரசர்.
இறைவன் தமக்கு அன்பான யாக்கோபியரை, தமது உரிமைச்சொத்தாக தேர்ந்தெடுப்பார்.
இறைவன் மகிழ்ச்சியின் ஆரவாரத்தின் மத்தியில் எழுந்தருளினார்; யெகோவா எக்காள சத்தத்தோடும் உயர்த்தப்பட்டிருக்கிறார்.
இறைவனுக்குத் துதிகளைப் பாடுங்கள், துதிகளைப் பாடுங்கள்; நமது அரசருக்குத் துதிகளைப் பாடுங்கள், துதிகளைப் பாடுங்கள்.
ஏனெனில் இறைவனே பூமி முழுவதற்கும் அரசராய் இருக்கிறார்; அவருக்குத் துதியின் சங்கீதத்தைப் பாடுங்கள்.
இறைவன் நாடுகளுக்கு மேலாக ஆளுகை செய்கிறார்; அவர் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறார்.
மக்களின் தலைவர்கள், ஆபிரகாமின் இறைவனுடைய மக்களாக ஒன்றுகூடுகிறார்கள். ஏனெனில் பூமியின் அரசர்கள் இறைவனுக்கே உரியவர்கள்; அவர் மிகவும் புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்.
கோராகியரின் சங்கீதப் பாட்டு. யெகோவா மிகவும் பெரியவர், நமது இறைவனுடைய நகரத்தில், அவருடைய பரிசுத்த மலையில் அவர் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.
இறைவன் அதின் கோட்டைப் பட்டணங்களில் வீற்றிருந்து, அவர்தாமே அதின் கோட்டை எனக் காண்பிக்கிறார்.
நாம் கேள்விப்பட்டது போலவே, சேனைகளின் இறைவனுடைய பட்டணத்தில், நம்முடைய யெகோவாவின் பட்டணத்தில் நாம் கண்டும் இருக்கிறோம்: இறைவன் அந்தப் பட்டணத்திற்கு என்றென்றைக்கும் பாதுகாப்பு கொடுக்கிறார்.
இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பைக்குறித்து, உமது ஆலயத்தில் நாங்கள் தியானிக்கிறோம்.
இறைவனே, உமது பெயரைப் போலவே உமது துதியும் பூமியின் கடைசிவரை எட்டுகிறது; உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது.
உமது நியாயத்தீர்ப்பின் நிமித்தம் சீயோன் மலை களிகூருகிறது, யூதாவின் கிராமங்கள் மகிழ்கிறது.
ஏனெனில் இந்த இறைவனே என்றென்றும் நம்முடைய இறைவன்; மரணம் வரையும் அவரே நமக்கு வழிகாட்டியாய் இருப்பார்.
ஒருவனாலும் இன்னொருவனுடைய உயிரை மீட்கமுடியாது; அவனுக்கான மீட்பின் பதிலீட்டை இறைவனுக்குக் கொடுக்கவும் முடியாது.
ஆனால், இறைவனோ என் உயிரைப் பாதாளத்திலிருந்து மீட்டுக்கொள்வார்; அவர் நிச்சயமாக என்னைத் தம்மிடத்தில் ஏற்றுக்கொள்வார்.
ஆசாபின் சங்கீதம். வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவா பேசுகிறார், அவர் சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து, அது மறையும் இடம் வரையுமுள்ள முழு உலகத்தையும் அழைக்கிறார்.
பூரண அழகுள்ள சீயோனிலிருந்து இறைவன் பிரகாசிக்கிறார்.
நம்முடைய இறைவன் வருகிறார், அவர் மவுனமாய் இருக்கமாட்டார்; அவருக்கு முன்னாக நெருப்பு சுட்டெரித்துச் செல்கிறது; அவரைச் சுற்றிப் புயல் சீற்றத்துடன் வீசுகிறது.