நியாயாதிபதிகள் 19:1-10
1
அந்நாட்களில் இஸ்ரயேலில் அரசன் இருக்கவில்லை. அக்காலத்தில் எப்பிராயீம் மலைநாட்டின் ஒரு ஒதுக்குப்புற பகுதியில் லேவியன் ஒருவன் நெடுங்காலமாகக் குடியிருந்தான். அவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரைச்சேர்ந்த ஒரு பெண்ணை வைப்பாட்டியாக வைத்திருந்தான்.
2
ஆனால் அவளோ அவனுக்குத் துரோகம்செய்து அவனைவிட்டுப் பிரிந்து, யூதாவிலுள்ள பெத்லெகேமுக்குத் தன் தகப்பன் வீட்டுக்குப்போய் நான்கு மாதம் அங்கே தங்கியிருந்தாள்.
3
அதன்பின் அவளது கணவன் அவளை இணங்கப்பண்ணி மீண்டும் அழைத்து வருவதற்காக அவளிடத்திற்குப் போனான். அவன் தனது வேலைக்காரனோடும், இரண்டு கழுதைகளோடும் போனான். அவள் அவனைத் தன் தகப்பன் வீட்டுக்கு அழைத்துச்சென்றாள். அவள் தகப்பன் அவனைக் கண்டபோது, மகிழ்ச்சியோடு வரவேற்றான்.
4
அப்பெண்ணின் தகப்பனான அவனுடைய மாமன் அவனைத் தங்களுடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டான். எனவே அவன் மூன்று நாட்கள் அங்கே சாப்பிட்டுக் குடித்து, நித்திரை செய்தான்.
5
அவர்கள் நான்காம் நாள் அதிகாலையில் எழுந்தார்கள். அவன் பிரயாணத்திற்கு ஆயத்தமானான். ஆனால் பெண்ணின் தகப்பன் தன் மருமகனிடம், “நீ கொஞ்சம் உணவு சாப்பிட்டபின் போகலாமே” என்றான்.
6
எனவே இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் குடித்தார்கள். பின்பு அப்பெண்ணின் தகப்பன், “தயவுசெய்து இன்றிரவும் நீ இங்கே தங்கி மகிழ்ந்திரு” எனக் கேட்டுக்கொண்டான்.
7
திரும்பவும் அவன் எழுந்து புறப்படுகையில் அவனுடைய மாமன் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டதால் அன்று இரவும் அங்கு தங்கினான்.
8
ஐந்தாம் நாள் காலையில் அவன் புறப்படுகையில் அந்தப் பெண்ணின் தகப்பன், “நீ உணவு சாப்பிட்டு மத்தியானத்திற்குப்பின் போகலாம்” என்று சொன்னான். எனவே இருவரும் ஒன்றாகச் சாப்பிட்டார்கள்.
9
பின்பு அவன் தனது வைப்பாட்டியுடனும், வேலைக்காரனுடனும் எழுந்து புறப்பட்டான்; அப்பொழுது பெண்ணின் தகப்பனான அவனுடைய மாமன் அவனிடம், “இப்பொழுது சாயங்காலமாயிற்று; இந்த நாளும் முடியப்போகிறது. எனவே இன்றிரவும் இங்கேயே தங்கி மகிழ்ந்திரு. நாளை அதிகாலையில் எழுந்து நீ வீட்டுக்குப் போகலாம்” என்று சொன்னான்.
10
ஆனால் அவன் அந்த இரவும் அங்கு தங்கியிருக்க விரும்பாததால், தன் பொதி ஏற்றிய இரண்டு கழுதைகளுடனும், வைப்பாட்டியுடனும் எருசலேம் என அழைக்கப்பட்ட எபூசுக்குப் போனான்.
Settings